நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 23, 2013

ஸ்ரீ வீரமாகாளி

அன்னை ஆதிபராசக்தி - சகல லோகங்களையும் பெற்றெடுத்த தாய்.

ஆனாலும் அவள் நித்ய கன்னி. இப்படித்தான் சாத்திரங்கள் சொல்லுகின்றன.


பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி த்ரயம்பகி எழில்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ர தள
புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சத்தி என்று உன்
நாமமே உச்சரித்திடும் அடியார் நாமமே
நான் உச்சரிக்க வசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே 
பின்னையுங் கன்னிஎன மறைபேசும்
ஆனந்தரூபமயிலே
வாரணியும் இரு கொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவை அரசே
வரைராசனுக்கிரு கண்மணியாய் உதித்த மலை
வளர்காதலிப்பெண் உமையே!...

என்று தாயுமான சுவாமிகள் விவரிக்கும் - அம்பிகையைத்தான்

பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும், பூமகளையும்
திகிரி மாயவனையும் அரையில்
புலியாடை உடையானையும்
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப்
பழைமை முறைமை தெரியாத நின்னை-
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றது ஏது சொல்வாய்?

என்றும்,

நீடாழி உலகங்கள் யாவையும் நேயமாய் நின்
உதர பந்தி பூக்கும் நின்மலீ அகிலங்களுக்கு அன்னை என்று ஓதும்

என்றும் - அபிராபிபட்டர்  பக்திப் பரவசமாய் பாடி -  உருகுகின்றார். 

இப்படி அன்னையாய் பின்னையும் கன்னியாய் விளங்கும் பராசக்தி - சின்னஞ்சிறு பெண்ணாக வந்து எதிர் நின்றால் - எப்படியிருக்கும்!...

வாருங்கள் செல்வோம் - அப்படி சின்னஞ்சிறு பெண்ணாக வந்து ஆட்கொண்ட அன்னையின் ஆலயம் அமைந்துள்ள நாககுடி கிராமத்திற்கு.. 

நாககுடி -  தஞ்சை மாவட்டத்தில் - ஸ்ரீ சுவாமிநாதப்பெருமான் திருக்கோயில் கொண்டுள்ள சுவாமிமலைக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் திருவைகாவூர் செல்லும் வழியில் உள்ளது. ஊரினுள் நுழையுமுன்பாகவே அன்னையின் திருக்கோயில்.


காலகாலமாக  வீற்றிருந்த தலமாக, அன்னை வடதிசை நோக்கியவளாக கொலு வீற்றிருக்கின்றாள்.. 

அன்னையின் வலப்புறம் வலம்புரி விநாயகர் சந்நிதியும் வேம்பும் நாகம் குடியிருக்கும் புற்றும் நாகர் திருமேனி பிரதிஷ்டைகளும் அமைந்துள்ளன. கோயிலின் தென்புறம்  பழவாறு எனும் நீரோடை. 

திருக்கோயிலினுள் அன்னையின் இருபுறமும் ஸ்ரீ மதுரை வீரனும், ஸ்ரீ கருப்ப ஸ்வாமியும் விளங்குகின்றனர். அன்னையின் எதிரில் சிம்ம வாகனமும் பலிபீடமும் திரிசூலமும் இலங்குகின்றன.

சந்நிதியினுள் ''..யான் இருக்க உனக்கு என்ன குறை!..'' எனும் அருட் பார்வையினளாக அன்பரின் குறைகளை எல்லாம் தவிடு பொடியாக்கித் தகர்க்கும் தயாபரியாக வீற்றிருக்கின்றாள் அன்னை. 

அவளைக் கண்ட மாத்திரத்தில் நம் அல்லல் எல்லாம் அனல் பட்ட மெழுகாக உருகி ஓடுகின்றன. 

என்ன சொல்வது!... எப்படிச் சொல்வது!... என் சிந்தை எல்லாம் அவளேயாக ஆகி நிற்கும் அற்புதத்தினை விவரிக்க ஒரு வார்த்தையும் கிடையாது!... எனக்கு இன்னொரு தாயாகி நிற்பவள். எனக்கு மட்டுமல்ல... 

இவளைத் தரிசிக்கும் எல்லாருக்கும் அப்படியே!... இவளுடைய சந்நிதியில் சஞ்சலங்களுக்கும் சலனங்களுக்கும் வேலையே இல்லை. குறை என்று சொல்லி ஒருவர் வாசற்படியேறி விட்டாலே போதும்!.. வசந்தம் தான் அவர்தம் வாழ்வில்... கண்கூடாகக் காணும் உண்மை இது!..


இங்கே அவள் திருப்பெயர் - ஸ்ரீ வீரமாகாளியம்மன். 

அன்னைக்கு வருடந்தோறும் பற்பல விசேஷங்கள். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பெளர்ணமி பூஜைகள். ஆடிப்பூரம் மற்றும் நவராத்திரி சிறப்பு வழிபாடுகள். தைமாதம் திருவாதிரையில் காவிரியில் நீரெடுத்து வந்து கலசபூஜையும் சம்வஸ்த்ராபிஷேகமும் வெகு சிறப்பாக நிகழ்வுறும். 

சித்திரையில் அக்னி நட்சத்திர காலம் நிறைவுறும் வேளையில் - அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று காப்பு கட்டி, அன்றிரவு புஷ்ப ரதத்தில் திருவீதியுலா நடைபெறும். சனிக்கிழமையன்று சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை வைபவம் நமது உபயமாக நடைபெறும். 

மூன்றாம் நாளாகிய ஞாயிறன்று காலையில், காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து ''சக்தி கரகம்'' ஸ்தாபனம் செய்து அதில் அம்பாள் ஆவாஹனத்துடன்  பிரம்பு ஏந்தியபடி பிரதானமாக முன்வர - அக்கினி கொப்பரையும், சக்தி சூலமும் கருப்பசாமி வேலும் ஆரவாரித்து உடன் வருவர். 

தொடர்ந்து நூற்றுக்கணக்காக பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து மதியம் பெரிய அளவில் அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர்.  அச்சமயம் அன்னதானமும் கஞ்சி வார்த்தலும் வெகு சிறப்பாக நடைபெறும். 

நிறைவாக,  மாலையில்  - அன்னைக்கு சந்தனக்காப்பு அலங்காரமும்  மகாதீப ஆராதனையும் நிகழ்வுறும். 

ஐந்தாம் நாள் செவ்வாய் அன்று மஞ்சள் நீராட்டு. காப்பு அவிழ்த்து கரக விசர்ஜனம் - என விடையாற்றியுடன் வருடாந்திரத் திருவிழா நிறைவுறும். 

அன்னையின் சந்நிதியில் எப்போதெல்லாம் - 

கலச பூஜையுடன் மகா அபிஷேகம் நடைபெறுகின்றதோ - அப்போதெல்லாம் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யம் அடியேனுடையது.  சென்னியில் சேவடி வைத்து  என்னையும் ஒருவன் ஆக்கிய - அன்னை - தீர்த்த கைங்கர்யத்தினை தலைமுறைக்குமாகப் பிரசாதித்தது அருளினள். 

தற்சமயம் கடல் கடந்து இருப்பதால் -  என் மகன், சிவஸ்ரீகாந்த் - காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் கைங்கர்யத்தினை உவப்புடன் நிறைவேற்றுகின்றான். 

அன்னை வீரமாகாளியின் அருள் - பெருமை அளவிடற்கரியது. பெரிதாகத் தவம் ஏதும் செய்ததில்லை. ஆயினும் நானும் ஒரு பிள்ளையாய் அவள் சந்நிதியினுள்  நின்று - அவள் எனக்கு இட்ட கட்டளையாய், அவளுக்கு செய்யும் அபிஷேக அலங்கார ஆராதனைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தவள்...


அபிஷேகநேரத்தில் நிதர்சனமாக ''வாலை'' என,  சின்னஞ்சிறு பெண்ணாகவே அவள் தோன்றுவாள்!..

அவளுக்கு நானும் ஒரு பிள்ளை. எங்கள் குடும்பத்தில் அவளும் ஒரு பிள்ளை.

திருக்கோயில்,  சீரிய முறையில்  திரு.வெ.பன்னீர்செல்வம் அவர்களாலும் ஆலய நிர்வாகக் குழுவினராலும் நிர்வகிக்கப்படுகின்றது.

திரு. பன்னீர்செல்வம் - என் மனைவியின் அக்காள் கணவர். இவரே விரதம் இருந்து சக்தி கரகம் ஏந்தி வருவார்.

அன்னை ஸ்ரீ வீரமாகாளியின் சித்திரைப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை (24-5) தொடங்குகின்றது. அன்று இரவு புஷ்ப ரதம். ஞாயிறு அன்று காலை சக்தி கரகத்துடன் பால்குட வீதியுலாவும், மாலையில் சந்தனக்காப்பும் நடைபெறும்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் எல்லாருக்கும் துணையிருப்பாள். வேண்டியனவற்றை நிறைவேற்றித் தருவாள்..

அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்!...

4 கருத்துகள்:

  1. நாககுடி சென்றதில்லை ஐயா... விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. தனபாலன் அவர்களுக்கு... நல்லநேரம் கூடி வந்து அன்னையின் அருள் நோக்கம் நம் மீது பதிந்தாலே.. நாம் பேறு பெற்றவர்களாவோம்!..

      நீக்கு
  2. வீரமா காளி கோயிலுக்கு சென்றுள்ளேன் அய்யா. இருப்பினும் தங்களால் இன்று
    அறியாதன அறிந்தேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. திரு.ஜெயகுமார் அவர்களுக்கு..அழைத்துச் செல்பவள் அன்னை... நாம் பின் தொடர்கின்றோம்...அதுவே நாம் பெற்ற பேறு!...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..