நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 19, 2018

நீதியே துயிலெழாய்...

கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்...

இப்படியும் கூட இருக்கின்றனவா?..
இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று!...

எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாது போயிற்று?...


அந்தப் பெண் குழந்தையைச் சிதைத்த பதினேழு பேர்களுள்
ஒருவன் கூடவா நல்ல சோறு தின்னவில்லை?...

அந்தப் பாவிகளுள் ஒருவன் சொல்லியிருக்கின்றான் -
ஹாசினியைப் போல இந்தப் பெண்ணையும் தீர்த்துக் கட்ட முயன்றோம்!.. - என்று...

ஹாசினியைக் கொன்றவன் இந்நேரம் சாம்பலாகி இருந்தால்
இந்தப் பாவிகளுக்கு கொஞ்சமாவது மனம் நடுங்கியிருக்கும்...


தலைநகரில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையை மறந்திருக்க மாட்டோம்...

நிர்பயாவுக்கு அதிகபட்ச கொடுமையைச் செய்தவன் - 18 வயது ஆகாதவன்... 

இந்தப் பாவிதான் உள்ளுறுப்புகளைச் சிதைத்து வெளியே இழுத்துப் போட்டவன் என்று ஊடகங்கள் பேசின...

ஆயினும்,

அவனுக்குக் கடுந்தண்டனை கொடுக்க இயலாது என்று விடுவித்தது சட்டம்... 

இப்போது அவன் எங்கோ சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்...

நிர்பயாவைச் சீரழித்து சிதைத்த மாபாவிகள்
மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருந்தாலாவது

இந்தப் பாவிகளின் நெஞ்சம் வெகுவாக நடுங்கியிருக்கும்...

ஆனால்,
நிர்பயா வழக்கில் அந்த இளங்குற்றவாளியை
சீதனத்துடன் வழியனுப்பி வைத்த நாடாயிற்றே - நம்முடையது!..

இன்னும் ஒரு சாரார் சொல்லுகின்றனர் -
அரபு நாட்டின் சட்ட திட்டங்கள் மேலானவை - என்று...

1450 ஆண்டுகளாகத்தான் அவையெல்லாம்....
சில மாதங்களுக்கு முன் கூட -
அங்கே குற்றவாளியின் தலைவெட்டப்பட்டது...

அப்படியானால் இன்னும் மனிதன்
திருந்தவில்லை என்பதே பொருள்...

முதல் தலைவெட்டினைக் கண்டு நடுங்கிய மனிதன்
எப்போது அந்த அச்சத்திலிருந்து நீங்கினானோ
அப்போதே நீதியும் நேர்மையும் தளர்ந்து விட்டன...

இதெல்லாம் இப்படியிருக்க
நம்முடைய பாரதத்தின் நீதிநெறி முறை எப்படிப்பட்டது!?...

இதோ சில சான்றுகள்...


காசி மன்னனின் மகனைக் கொன்றதாகக்
குற்றம் சாட்டப்பட்டு இப்போது கொலைக்களத்தில் நிற்கிறாளே...
இவள் எனது மனைவி...

ஆனாலும்.. நான் நீதி தவறேன்...

மன்னனின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது
மயானக் காவலாளியாகிய எனது கடமை!..
நீதிநெறியிலிருந்து ஒருநாளும் தவற மாட்டேன்!..

- என்று தன் மனைவியின் மீதே வாளை ஓச்சியவர் 
ஸ்ரீ ஹரிச்சந்த்ர மஹாராஜா!..
***

மகாபாரதத்தில் ஒரு சம்பவம்...

உயர்நிலை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்...
வழக்கில் நால்வர் சிறை பிடிக்கப்பட்டனர்...

தீர விசாரிக்கப்பட்டது...

பாண்டவர்களுள் மூத்தவராகிய தர்மபுத்திரர் தீர்ப்பை வழங்கினார்..
அதன்படி -

பொருளுக்காகக் கொலையைச் செய்தவன் - சூத்திரன்...
மன்னிப்புடன் விடுவிக்கப்பட்டான்..

கொலைக்குப் பொருளுதவி செய்தவன் - வைசியன்..
தலை மழிக்கப்பட்டு கரும்புள்ளி செம்புள்ளியுடன் நாடு கடத்தப்பட்டான்...

கொலையாளிக்குப் பாதுகாப்பு தருவதாகச் சொன்னவன் - க்ஷத்திரியன்..
கொலைக் களத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டான்...

கொலைக்கான உத்தியை வகுத்துத் தந்தவன் - வேதியன்..
கொலைக் களத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டான்...
***
அவ்வளவு ஏன்!..

பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் இவனே!.. 
- என்ற குற்றச்சாட்டின் பேரில்
விசாரணை நடத்தப்படா விட்டாலும் 
பூம்புகாரின் கோவலனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு - மரணம்!...
***

உஜ்ஜையினி மாநகரிலும் இதே போல ஒன்று..

அரசே!.. அரண்மனையில் களவு போன நகைகள் இந்த ஆளின் கழுத்தில் கிடந்தன..

அப்படியா... கழுவில் ஏற்று!...

தீர்ப்பு சொன்னவர் - பர்த்துருஹரி மகாராஜா....

குற்றவாளியாய் நின்றவர் பட்டினத்தடிகள்...

அன்றைக்கு பூம்புகாரில் வைரத்தூண் நாட்டி வணிகம் செய்தாரே - அவர்!..

பட்டினத்தடிகளைக் கழுவேற்றும் போது 
கழுமரம் பற்றி எரிந்து சாம்பலாகப் போனதும்

பர்த்துருஹரி மகாராஜா திருவோடு ஏந்தி 
தெருவோடு போனதும் தனிக்கதை...
***
மாநகர் மதுரையில் -
அர்த்த ராத்திரியில் ஒரு வீட்டின் கதவை
சந்தேகத்தின் பேரில் தட்டி விட்டான் - அவன்!..

அவன் - இரவில் ஊர்க்காவல் வந்த பாண்டிய மன்னன்..

அப்படித் தட்டிய பிழைக்காக -
தனது முன்கையைத் தானே வெட்டிக் கொண்டான்...

அவனைப் பொற்கைப் பாண்டியன் என்கின்றது வரலாறு...
*** 

கொள்ளையர்களைப் பிடிக்கக் கடமைப்பட்டவன்
அவர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டான்!..

- என்று பொய்யுரைக்கப்பட்டதால்,
அதே மதுரையில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டது சோழ நாட்டு வீரனுக்கு!..

அவனே இன்றைக்கு மதுரை வீர ஸ்வாமி!...
***


சாதாரண திருட்டுக் குற்றங்களுக்கே
மரண தண்டனை - எனில்
செங்கோன்மையா.. கொடுங்கோன்மையா!..

எல்லாவற்றுக்கும் மேலாக -
திரு ஆரூர் மாடவீதியில் பசுங்கன்று ஒன்று
தேரில் அடிபட்டு மாண்டு போனது....

அந்தத் தேரை ஓட்டி வந்தவன் அரசிளங்குமரன்...

நடந்ததைக் கண்டவர்கள் பற்பலர்..

அடே... மூடனே!.. 
மாட்டைக் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டாமா?..
இப்படியா தெருவில் அலைய விடுவது!...

இளவரசே.. நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள் .. இளவரசர் வாழ்க!..

வாழ்க.. வாழ்க!..

மாட்டுக்குரியவனும் வாழ்க.. - என்று சத்தம் போட்டுவிட்டு,
 விதியே!.. - என்று வீட்டுக்குப் போனான்...

ஆனால்,
கன்றை இழந்த பசு போய் நின்ற இடமோ அரசனின் மாளிகை...

நின்றதோடு அல்லாமல்
அங்கே தொங்கிக் கொண்டிருந்த வெங்கல மணியைப் பற்றியிழுத்தது...

ஒருநாளும் இல்லாத திருநாளாக -
ஆராய்ச்சி மணி ஒலிப்பதைக் கேட்டு ஊரே அதிர்ச்சியுடன் திரண்டு வந்தது...

மாட்டுக்குரியவனும் அந்தக் கூட்டத்திலிருந்தான்..

அரண்மனையின் வாயிலருகில் கண்ணீரும் கம்பலையுமாய்ப் பசு!...

மன்னன் நேரிடையாக விசாரித்தான்...

அது ஒன்னுமில்லீங்க மகராசா!...
மாட வீதியில நம்ம சின்னராசா தேர்ல... போனாருங்களா!..
அப்போ ஒரு கன்னுக்குட்டி குறுக்கால ஓடி விழுந்துச்சுங்களா!
உசிரு போய்டுச்சுங்க... அது ஒரு நோஞ்சான் கன்னுக்குட்டிங்க!..

செத்துப் போன கன்னுக்குட்டி இந்த மாட்டோடதுங்க!...
அதுக்கோசரம் இந்த மாடு மணியப் புடிச்சு இழுத்துப் போட்டுடுச்சுங்க!..
அறிவு கெட்ட மாடுங்க இது... மகாராசா மன்னிக்கோணும்!..
இந்தா.. இப்பவே மாட்டை வெரட்டி விட்டுறோம்!... 
டேய்.. சின்னான்!.. உம் மாட்டப் பத்திக்கிட்டுப் போடா!..

நில்லுங்கள்!... - அரசனின் குரலுக்குக் கட்டுப்பட்டது கூட்டம்..

நான் தீர்ப்பு வழங்க வேண்டும்!..

தீர்ப்பா!.. - அதிர்ச்சியுடன் அதிசயித்தனர் மக்கள்...

ஏதோ ஒரு வராகன் ரெண்டு வராகன் கொடுத்தா 
வாங்கிட்டுக்கிட்டுப் போய்டுவான் - சின்னான்!.. இதுக்குப் போயி!..

ஏன்?.. சின்னான் வீட்டு கன்றுக்கு வாழும் உரிமையில்லையா ஆரூரில்!..
அது களிப்புடன் ஓடி விளையாட இடமில்லையா இந்தத் திருஆரூரில்!...

திருஆரூரின் மக்கள் திகைத்தனர்...

அமைச்சரே!.. குற்றவாளியைக் கிடத்தித் தேரை அவன் மீது நடத்துங்கள்!...

வேண்டாம்..வேண்டாம்!.. - கதறித் துடித்தனர் மக்கள்...

இவன் இளவரசன்.. எமக்கு அன்பானவன்.. 
இவனே எமக்கு அரணும் ஆனவன்!..
- என்ற நம்பிக்கை வரவேண்டாமா உங்களுக்கெல்லாம்!...

இவனது இன்றைய செயலைக் கண்டு
நாளைய உலகம் அஞ்சி நடுங்காதா?...
இவனது தேரின் மணிகள் ஆடும் போதெல்லாம்
உங்களது இதயமும் சேர்ந்தாடி நடுங்குமே!..

மக்கள் மீது ஏற்றுவானோ... மாக்கள் மீது ஏற்றுவானோ..
என்றெல்லாம் உங்கள் மனம் பதறித் துடிக்குமே...
அந்தப் பாவத்தை நான் எங்கே சென்று தொலைப்பேன்!...
எம் முன்னோர் தம் செங்கோல் வளைவதற்கு விடுவேன் அல்லேன்!..

வழி விட்டு நில்லுங்கள்.. இது அரச கட்டளை!..

அதற்கு முன்னும் பின்னும் நடக்காத வண்ணமாக
தனது மகனைக் கிடத்தி அவன் மீது தேரை நடத்தி
நீதியை நிலைநாட்டினான் - மனுநீதிச் சோழன்!...

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்!..

- என்று, இந்நிகழ்வினை
கற்புக்கரசியின் திருமொழியாக இயம்புகின்றார் இளங்கோவடிகள்...

இப்படியெல்லாம் -
நீதி நிலைநாட்டப்பட்டிருக்கின்ற திருநாடு நம்முடையது...

இத்தகைய நாட்டைப் பிடிக்க வந்தோர் -
நாடு காக்க முனைந்த நல்லோரை நடுத்தெருவில் தூக்கிலிட்டுக் கொன்றனர்..

செங்கிஸ்கான், அலாவுதீன் கில்ஜி முதற்கொண்டு
பின்வந்த டல்ஹவுஸி, பானர்மென் - எனப் பலரை அடையாளம் காட்டலாம்....

அந்த ஈனர்களைக் கடந்து
தர்மத்தின் வழி நடப்பது நம்முடைய நாடு...

இந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் அவலங்களாகிய இந்த அற்பர்கள் அனைவரையும் நீதியின் வழி நின்று கொன்றொழிப்பதே சாலச் சிறந்தது...

நம்முடைய கலையையும் கலாச்சாரத்தையும் 
சிதைப்பதற்கு மாற்றார் தலைப்பட்டனர்...

அதைக் கண்டு -
நம்மவர்களில் ஒரு சிலர் கை கொட்டிக் களித்தனர்.. 
அந்தக் கயவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்தனர்...

தாய்வழிக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் - 
நாம் விலக்கி வைத்ததன் விளைவுகளே இவை...

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைக் கட்டதனோடு நேர்...

- எனும் அமுத மொழியைப் பின்பற்றி
தாமதிக்காமல் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்..

பொறுத்துக் கொள்ள முடியாத கொடுஞ்செயல்களைச் செய்யும்
கொடூரர்களை மிருகங்கள் என்று சொல்வதே மிகப் பெரிய பாவம்...

மிருகங்கள் எவ்வளவோ மேலானவை!..

இந்தப் பாவிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையால்
மற்ற கயவர்கள் தாமாகவே தமது மரணத்தைத் தழுவிக் கொள்ளவேண்டும்!..

ஆனால், அப்படியெல்லாம் பேராசைப்படமுடியுமா - நம்நாட்டில்!...

பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தை மனம் தெளியவேண்டும்...
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவேண்டும்...
அதற்கு நாமெல்லாரும் வேண்டிக் கொள்வோம்..

ஓம் 
சக்தி சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. குட்மார்னிங். இந்நாள் இனிய நாளாகட்டும்.

    பதிலளிநீக்கு
  2. என்ன எழுதி என்ன செய்வது! திருந்துபவர்கள் தானாகத் திருந்த வேண்டும். பெண்ணைத் தான் அனுபவிக்கப் பிறந்தவள் என்னும் எண்ணம் கொண்டவர்கள் மனது மாறினால் தான் உண்டு. அதிலும் கடையேனிலும் கடையோன் ஒருவனுக்கு 66 வயசாம்! பேத்தி வயசிருக்கும் குழந்தையைப் போய்ச் சீரழித்து அதைப் படங்கள், வீடியோ என எடுத்து! அந்த அம்மா வீட்டிலே தான் இருந்திருக்காங்க! விஷயம் தெரிஞ்சும் சொல்லலை போல! இப்போ வீட்டுக்கு வந்த உறவினப் பெண் மூலமா வெளியே வந்திருக்கு! :( குழந்தை மனம் பாதிக்கப்படாமல் நல்லபடியாக வாழ வேண்டும். இனியாவது அந்தக் குழந்தை வாழ்க்கையின் சுகம் என்றால் என்ன எனத் தெரிஞ்சுக்கணும்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    முடிவில் சொன்னீர்களே அது மட்டுமே நம்மால் இயலும் போல...

    எத்தனை வரலாற்றுச் சான்றுகள் பிரமிக்க வைத்தன விடயங்கள்.

    பதிலளிநீக்கு
  4. //இதெல்லாம் என்ன பிறவிகள்//

    ஈனப்பிறவிகள். மிருகங்கள் கூடச் செய்யாதிப்படி.

    உங்கள் பாணியில் சிறந்த உதாரணங்களுடன் அழகாய் எழுதி இருக்கிறீர்கள். இன்றைய நீதி பாதிக்கப்பட்டவன் கொல்லப்படுவதே. குற்றவாளிகளுக்குப் பரிந்து பேச கூட்டம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. முன்னர் ஜவர்லால் ஒரு பதிவு போட்டிருந்தார். காந்திஜி செய்த மிகப்பெரிய தவறு சிறைச்சாலையின் மீது இருந்த பயத்தை மக்களிடமிருந்து அகற்றியதுதான் என்று. அதனால் பயம் அகன்ற மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குற்றங்களைப் பெருக்கிக் கொள்ளத் தலைப்பட்டனர் என்று. கொஞ்சம் தூரப்பார்வைதான். ஆனால் சட்டென விலக்க முடியாத பார்வை.

    அதையே அப்படிச் சொன்னால் இந்த ஈனப்பிறவிகளை மன்னித்துத் தையல் இயந்திரம் வழங்குவோரை என்ன சொல்ல? முதல் வேலையாக அந்த உறுப்பை வெட்டியிருக்க வேண்டாம்?

    பதிலளிநீக்கு
  6. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் அது எப்பை குற்ற்மிழைக்கப்பட்டவருக்கு நீதியாகும் தண்டனை பற்றியெல்லாம் யோசிக்கிறர்களா தவறு இழைக்கும் போது பெரும்பாலோர் ஏதோ ஒருபோதைக்குஅடிமையாகியெ குற்றம்செய்கிறார்கள் அம்மாதிரி லாகிரிப்பொருட்களே கிடைக்காமல் செய்தால் ஒரு வேளை குற்றங்கள் குறையலாம்

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா செய்தி நான் லேட்டாகத்தான் வாசித்தேன் அதுவும் இன்றுதான்..விசுவின் தளத்திலிருந்துதான் தெரியும். ரொம்பவே மனது வேதனை..

    தில்லி நிகழ்வில் அந்தப் பையன் விடுதலை ஆனது பெரிய தவறு. என்ன சட்டம் இது? சட்டம் ஓர் இருட்டறை என்பது போல் சட்டத்தில் நிறைய ஓட்டைகள்.

    அதெப்படியோ அவர்களுக்கு இப்படிச் செய்யும் போது நாம் மாட்டிக் கொள்வோம் தண்டனை கிடைக்கும் என்று கூடத் தெரியாதா? இப்படிச் செய்தவர்களுகுப் பெண் குழந்தைகளை யாரேனும் இப்படிச் செய்தால்?

    சரி செய்தியில் அந்தத்தாய் இப்படிச் சொன்னதாக சொல்லப்பட்டுள்ளது. அவருக்குப் பள்ளியிலிருந்து தாமதமாக வரும் குழந்தை ஃப்ளாட்டிற்குள் எங்கேனும் விளையாடிக் கொண்டிருப்பாள் என்று னினைத்ததாக...

    இந்தச் செய்தி உண்மை என்றால்....கண்டிப்பாக அந்தத் தாய் என்னைப் பொருத்தவரை ......சரி நான் எதுவும் சொல்லவில்லை...அக்குழந்தையின் தாய் வேலைக்கு எதுவும் செல்லவில்லை என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

    நம் குழந்தை வரும் நேரம் தப்பியது என்றால் ஏன் வரவில்லை என்று வெளியில் வந்து பார்க்க மாட்டோமா? ஒரு தாய் தன் குழந்தை அதுவும் பெண் குழந்தை பள்ளிக்குப் பேருந்தில் சென்று வரும் குழந்தை, செவிகேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தை தாமதித்தால் உடனே முதல் நாளே அந்தத் தாய் என்ன ஏது என்று விசாரித்திருக்க மாட்டாரோ? விளையாடிக் கொண்டிருப்பாள் என்று எப்படி அப்படி நினைக்க முடியும்? அதுவும் குறைபாடுள்ள குழந்தையை..அதுவும் அந்த ஃப்ளாட்டில் அதிகம் பேர் இல்லை நிறைய காலியாக இருந்தன என்றும் சொல்லப்படுகிறாது அப்படியானால் குழந்தை எங்கு சென்று விளையாடியிருப்பாள் என்று பார்க்க வேண்டாமா? பயமா இருக்காதா ஆள் அரவமற்ற இடத்தில்?....எனக்குப் புரியவில்லை..

    அந்தக் குழந்தை இப்படிச் செய்யப்பட்டு வரும் போது குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்காதா? சோர்வு இருக்காதா? சோர்வு தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்லமாட்டார்களா? அதுவும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டக் குழந்தை வீட்டிற்கு வரும் போது இத்தனையும் நடந்து வரும் போது சோர்வு, மயக்கம் என்று இருந்திருக்குமே..அதுவும் அக்குழந்தை வயதுக்கு வந்தது போல் தெரியவில்லை. தெரிந்திருந்தால் வேறு ரீதியில் போயிருக்கும்...வயதுக்கு வரவில்லை என்றால் அந்த உறுப்புகள் எப்படி பாதிக்கப்பட்டு எந்த அளவிற்கு அக்குழந்தை சொர்வுடன் இருந்திருகும். அதுவும் மிரட்டப்பட்டு..எனும் போது மன ரீதியாகவும் இருந்திருக்குமே...எப்ப்படி அக்குழந்தை சர்வ சாதாரணமாகப் பள்ளிக்குப் போய் வந்தது? ..ஒரு தாய்க்கு இது கூட கண்டுபிடிக்க முடியாதா? இதற்கு எல்லாம் படிப்பறிவு எதுவும் தேவையில்லையே......உணர்வுதானே முக்கியம்? என்னவோ போங்க எனக்கு ஒன்றும் புரியவில்லை...எங்கேயோ ஏதொ மிஸ் ஆகிறது...இடிக்கிறது...நான் வாசித்த செய்திகள் கொடுத்தவற்றிலிருந்து. நம் யாருக்கும் நேரடியாக எதுவும் தெரியாதுதான்...செய்திகள் சொல்வதுதானே...

    எனக்கு நிறையக் கேள்விகள் எழுகின்றன. பலியானது அக்குழந்தை. பாவம். இனியேனும் அக்குழந்தை ஆரோக்கியத்துடன், மகிழ்வுடன் இருக்கட்டும்...வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அப்படிச் செய்தவர்களின் பெண் குழந்தைகளுக்கு இப்படி நேர்ந்தால் என்று வந்திருக்க வேண்டும்...

    வயதுக்கு வந்தது போல் தெரியவில்லை....வந்திருந்தால் என்று வந்திருக்க வேண்டும்...அடிக்கும் போது தெரிந்திருந்தால் என்று வந்துவிட்டது..துரை அண்னா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நீதி செத்து கொண்டிருக்கிறது ஐயா,
    அநீதி முளை விட்டுக்கொண்டிருக்கிறது...
    வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
  10. மிருகங்களை விட கீழான மனிதர்கள்...


    என்ன சொல்ல..

    மனம் இந்த செய்திகளை பார்த்து பார்த்து ..கொடுமையின் உச்சத்தில்...

    7 மாதங்கள் இன்னும் நினைக்வே முடியவில்லை...என்ன ஜென்மங்கள் இவர்கள்...

    இவர்களை போல் பல ஓநாய்கள் நம்மை சுற்றி ...தடுப்பு வலை போட்டு விழிப்போடு தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும் போல்..

    எங்கு போகுது என் நாடு ...உலைகளம் என மனம்,....

    பதிலளிநீக்கு
  11. நான் செய்தியைப் படிக்கவில்லை, படிக்கும் விருப்பமுமில்லை.

    ஆனால் உங்கள் இடுகை எதைப் படிக்கவேண்டுமோ அதனை மட்டும் சொல்லிச் செல்கிறது.

    மஹாபாரதச் சம்பவம், பொற்கைப் பாண்டியன் என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறது.

    நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. கோயமுத்தூரில் இத்தகைய செயல் நடந்தபோது ஒருவனை போலீஸ் சுட்டுக் கொன்றது. இத்தகைய வழக்குகளில் நம் நாட்டுச் சட்டம் மெதுவாகச் செயல்பட்டு சரியான தண்டனை வழங்குவதில்லை.

    துணைவேந்தரின் ஒரே மகன் நாவுக்கரசு கொலைசெய்யப்பட்டான் (ஹாஸ்டலில்). அதற்கு என்ன நீதி வழங்கப்பட்டது? குற்றவாளி, பாதிரியாராக மாறி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றான். இதுவா நீதி?

    பதிலளிநீக்கு
  13. கொஞ்சம் மனம் நடுங்கித்தான் போகிறது,,/

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..