நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 27, 2016

ஸ்ரீ வல்லப விநாயகர் 1

எத்தனை எத்தனையோ சிறப்புகளைத் தன்னிடத்தே கொண்டிலங்கும்
தஞ்சை மாநகரில் பற்பல இடங்கள் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றன..

அவற்றுள் ஒன்றுதான் -

வெள்ளப் பிள்ளையார் கோயில்!.. - என்று வழங்கப்படும்

ஸ்ரீ வல்லபை விநாயகர் திருக்கோயில்..

ஸ்ரீ வெள்ளப் பிள்ளையார்
தஞ்சை மாநகரில் பெரிய கோட்டை அகழியின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது - இந்தத் திருக்கோயில்..

திருக்கோயில் அமைந்திருக்கும் பகுதி கீழவாசல் எனப்படும்..

மராட்டிய மன்னர் சரபோஜி பெயரில் பழைமையான பேரங்காடி கீழவாசலில் தான் உள்ளது..

அந்தக் காலத்தில் பல நூறு மாட்டு வண்டிகள் புழங்கிக் கொண்டிருந்த - தொன்மையான சந்தைப் பகுதியாகும் - கீழவாசல்..

சந்தைப் பகுதியில் -
உள்ளூருக்குள் சுமை ஏற்றிச் செல்வதற்கும் வெளியூர்களுக்கு சுமை ஏற்றிச் செல்வதற்குமாக ஏராளமான இரட்டை மாட்டு வண்டிகள்..

அவை தவிர்த்து -
நகருக்குள் அங்குமிங்கும் பயணிக்க சொகுசான ஒற்றை மாட்டு வண்டிகள்..
மேலும் - குறிப்பிடத்தக்க அளவில் குதிரை வண்டிகள் - என

நூற்றுக்கணக்கில் இருந்ததால், அவற்றுக்கென-
வண்டிப்பேட்டை என்று அகழிக் கரையில் தனித்த பகுதியே இருந்தது..

அங்கே - புல், வைக்கோல், தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை கடைகளுடன் மாடுகளை ஓய்வாகக் கட்டி வைக்க நிழற்கொட்டகைகளும் அமைந்திருந்தன..

சுமை ஏற்றும் வண்டிகளில் எதிர்பாராமல் ஏற்படும் பழுதுகளை சரி செய்திட தச்சர்கள்.. கொல்லர்கள்..

மாடுகளைக் கவனிக்க வைத்தியர்கள்..

மாடுகளுக்கு லாடம் அடித்து சுளுக்கு எடுப்பவர்களும் கூட அங்கிருந்தனர்..

அப்போதெல்லாம் கோட்டையின் அகழி நீர் சுத்தமாக இருந்தது..

அதில் சந்தைக்கு வரும் வெளியூர் மக்கள் குளித்துக் களைப்பாறினர்..

மறுபுறத்தில் ஓரு ஓரமாக மாடுகளையும் குளிப்பாட்டிக் களைப்பு நீக்கிக் கரையேற்றினர்..

மாடுகள் குடிப்பதற்கென நல்ல தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டிருந்தன என்பது சிறப்பம்சம்..

ரோஜா நிறத்தில் மேலே சொல்லப்பட்டவை எவையும் இப்போது கிடையாது..

இன்றைக்கு கீழவாசலில் மாட்டு வண்டிகளைக் காண்பதே அரிது..

ஆயினும், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியின் அருகில் பழைமையான
மாட்டுக் கொட்டகை மட்டும் காலத்தின் மிச்சமாக இருக்கின்றது..

மிருதுவான மெத்தைகளும் விரிப்புகளும் திரைச் சீலைகளும் வண்ண ஓவியங்களும் - என,  அழகாக விளங்கும் பயணிகளுக்கான வண்டிகள்..

வண்டி ஓட்டத்திற்கேற்ப குலுங்கும் காளைகளின் கழுத்து மணிகள்..
சாலையில் மக்கள் ஓரமாக விலகுவதற்காக - ஜங்..ஜங்.. - என,
ஒலியெழுப்பும் சங்கிலி மணிகள்..

அவற்றையெல்லாம் இந்தத் தலைமுறையினர் முற்றாகவே இழந்து விட்டனர்..

ஆனால்,
அனுபவப்பட்டோர் காதுகளில் ஜல்..ஜல்.. எனும் சலங்கை ஒலி
இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றது..

இக்காலத்தில் மாட்டு வண்டிகள் இல்லாமற்போனாலும்
கீழவாசல் சந்தைப் பகுதியானது -

பெரிய மளிகைக் கிடங்குகள், சில்லறைக் கடைகள், எண்ணெய் மண்டிகள், பாத்திரக் கடைகள், இரும்புக் கடைகள், மரப்பட்டறைகள், கல் பட்டறைகள், பித்தளை மற்றும் எவர்சில்வர் பட்டறைகள்

- என, பரபரப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது..

இப்படிப்பட்ட கீழவாசல் பகுதியின் சிறப்புகளில் தலையானது

ஸ்ரீ வெள்ளப் பிள்ளையார் திருக்கோயில்..


இந்தப் பிள்ளையார் அகழியின் - நீரில் - வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டதால்,
வெள்ளப் பிள்ளையார்!.. என்று ஒருசாரர் போற்றுகின்றனர்..

இன்னொரு சாரார் - ஸ்ரீ வல்லபை எனும் தேவி விநாயகப்பெருமானுடன் இங்கே அரூபமாக உறைகின்றாள்.. அதனால் தான் வல்லப விநாயகர்!.. - என்று புகழ்கின்றனர்..

தவிரவும், ஸ்வேத விநாயகர் என்னும் திருப்பெயரே - வெள்ளைப் பிள்ளையார் என்றானது என்றும் குறிக்கின்றனர்..

ஸ்வேதம் எனில் வெள்ளை..

எப்படியாயினும் சிறப்பெல்லாம் விநாயகருக்குத் தான்!..

இந்தப் பகுதி வணிகப்பெருமக்களுக்கு கண்கண்ட மூர்த்தி - இவர்தான்..

ஏறத்தாழ அரை கி.மீ தொலைவுக்கு நீண்டிருக்கும் கீழவாசல் சந்தைப் பகுதியின் வடபுறமாக அமைந்துள்ளது கம்பீரமான திருக்கோயில்..

ஊர் முழுக்க - நாடு முழுக்க விநாயகப் பெருமானுக்கு கோயில்கள் விளங்கினாலும் கொடி மரத்துடன் கூடியவை ஒருசில திருக்கோயில்கள் தான்..

அந்த வகையில்,
கொடி மரத்துடன் கூடிய சிறப்பினை உடையது - இந்த திருக்கோயில்..

மூன்று நிலை ராஜகோபுரம்..

ராஜ கோபுரத்தைக் கடந்ததும் தரையில் அழகான பத்ம தளம்..

வடக்குப் புறமாக - தெற்கு நோக்கியவாறு
நடராஜப் பெருமானின் பிரம்மாண்ட சுதை சிற்பம்..

முன்மண்டபம்.. அர்த்த மண்டபம் - என, நடந்து சந்நிதியை அடைகின்றோம்..

கருவறையில் பஞ்ச லோக விமானத்தினுள் ஸ்ரீ வல்லப விநாயகர்..

இங்குதான் ஸ்ரீ வல்லபை தேவி அரூபமாக உறைகின்றனள்..

ஸ்ரீ வல்லபை தேவியுடன் விநாயகர்
எனினும், கருவறையின் இடப்புறம் ஸ்ரீ விநாயகப் பெருமானும் ஸ்ரீ வல்லபை தேவியும் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி நல்குகின்றனர்..

சங்கடஹரசதுர்த்தியின் போது எழுந்தருளும் திருக்கோலம் இதுவே...

ஆவணியில் மகா சதுர்த்தி வைபவம் பத்து நாள் விழாவாக இத்திருக்கோயிலில் வெகு சிறப்பாக நிகழ்கின்றது..

சதுர்த்தியின் மறுநாள் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் ஸ்ரீவல்லபை தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது...

இத்திருக்கோயில் நாயக்கர் காலத்தியது என்று அறியப்படுகின்றது..

மிக அழகாக எழுப்பட்டிருக்கும் இந்தத் திருக்கோயிலுக்கு -
பைரவ உபாசகரான பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகள்
முன்னின்று திருப்பணி செய்திருக்கின்றார்கள்..

25.1.1948 ல் திருக்குடமுழுக்கு நிகழ்ந்திருக்கின்றது..

திருக்கோயிலுக்கு திருப்பணி செய்வித்த
பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகளின் சுதை சிற்பம் திருக்கோயிலில் விளங்குகின்றது..

தவிரவும் -
விநாயகப் பெருமானுக்கு வலப்புறம் அருட்ஜோதி வள்ளலார் ஸ்வாமிகளும்
இடப்புறம் பாடகச்சேரி மகான் ஸ்ரீ இராமலிங்க ஸ்வாமிகளும்
விளங்குவது போல - மூன்றாவது நிலையின் மேல் சிற்பங்கள் உள்ளன..

நன்றி - முனைவர் பா. ஜம்புலிங்கம் 
நன்றி - முனைவர் பா. ஜம்புலிங்கம்  
கடந்த 2014 செப்டம்பர் மாதம் 15 அன்று
இத்திருக்கோயிலுக்கு - திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது..

இத்திருக்கோயிலைப் பற்றி -
திருக்குடமுழுக்கின் போது எடுக்கப்பட்ட படங்களுடன்
அன்புக்குரிய முனைவர் திரு. பா. ஜம்புலிங்கம் அவர்கள் விக்கிபீடியாவில் பதிவு செய்துள்ளார்கள்..

அதிலிருந்து சில படங்கள் பதிவினை அலங்கரிக்கின்றன..

படங்களை வழங்கிய
முனைவர் திரு பா. ஜம்புலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

இத்திருக்கோயிலைப் பற்றி விக்கிபீடியாவின் பக்கத்தில் வேறு பல செய்தி இணைப்புகளும் காணப்படுகின்றன..

ஆனால், அவற்றில் முக்கியமான சில செய்திகள் காணப்படவில்லை...

அந்த அரிய செய்திகளையும்
மேலும் சில படங்களையும் 
அடுத்த பதிவினில் வழங்குகின்றேன்.. 
* * *

நவம்பர் இரண்டாம் தேதிக்குப் பின் -
தஞ்சையில் இருந்தபடி புதிய பதிவுகளை வழங்க இயலாமற்போனது..

குவைத் திரும்பிய பின்னர் இரண்டு பதிவுகளை வழங்கிய நிலையில்
கடந்த நான்கு நாட்களாக Blogger அடைத்துக் கொண்டது..

அடைத்துக் கிடந்த Blogger நேற்று தாழ் திறந்து கொண்டாலும் -
இணைய வேகம் ஒத்துழைக்கவில்லை...

இனிமேல் வியாழக்கிழமை வரைக்கும் இணைய வேகம் நன்றாக இருக்கும்..

இனியொரு தடை வாராதபடிக்கு
எல்லாம் வல்ல எம்பெருமானைப் பணிந்து
என் பணியினைத் தொடருகின்றேன்..

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்..
- பழந்தமிழ்ப்பாடல்-

வாழ்க நலம்..
*** 

12 கருத்துகள்:

  1. சிறப்பான தகவல்கள். வெள்ளையாக இருப்பாரோ என நினைத்தேன். வெள்ளப் பிள்ளையார் - எத்தனை பெயர் காரணங்கள். பல தகவல்கள் சிறப்பு. மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பலகதைகளைப் படிக்கும் போது தெளிவு பெறுவதற்கு பதில் சந்தேகங்களே அதிகம் எழுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. படங்களுடன் சிறப்பான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஸ்ரீ வல்லப விநாயகர் தரிசனம் அருமை.
    பாடகச்சேரி மகான் இராமலிங்க சுவாமிகள் இராமலிங்க சுவாமிகள் திருப்பணி செய்தது என்றால் அதன் மகிமை பலமடங்கு இருக்கும்.

    மாயவரத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்து இருக்கிறேன். வண்டிபேட்டைதெருவில் மாட்டு வண்டிகள் அழகாய் நிற்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      திருக்கோயிலில் நுண்ணதிர்வுகளை நன்றாக உணரலாம்..

      மாட்டு வண்டிப் பயணம் இனியும் கிடைக்குமோ..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்ல பகிர்வு ஐயா..அறிந்திராத தகவல்கள் பல அறிய முடிகிறது. படங்களும் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..