நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 29, 2016

தஞ்சையில் கருடசேவை

திருஞானசம்பந்தப் பெருமான் முக்தி பெற்ற -
வைகாசி மூல நட்சத்திரத்தினை அனுசரித்து,

வருடந்தோறும் - தஞ்சை மாநகரில்,
முத்துப் பல்லக்குத் திருவிழா வெகுசிறப்பாக நிகழ்கின்றது.

அந்த வகையில் - கடந்த (மே/24) செவ்வாய்க் கிழமை
முத்துப் பல்லக்குத் திருவிழா நடைபெற்றது.

அன்றைய தினம் இரவு - திருஞானசம்பந்தப் பெருமானுடன்
தஞ்சை மாநகரிலுள்ள பிள்ளையார் கோயில்கள் மற்றும் முருகன் திருக்கோயில்களில் இருந்து மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் - உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர். 

விடிய விடிய ராஜவீதிகள் நான்கிலும் திருவீதி உலா
சிறப்புடன் ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. 

இதையடுத்து -


தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத சிறப்பாக - 
(மே/28)  நேற்றைய தினம் 23 கருட சேவை நடைபெற்றது..

முத்துப் பல்லக்கு திருவிழாவில் -
திருஞானசம்பந்தப் பெருமான் சிறப்பிக்கப்படுவதைப் போல - 

கருட சேவை திருவிழாவில் - 
திருமங்கை ஆழ்வார் சிறப்பிக்கப்படுகின்றார்..

திருமங்கை ஆழ்வாரால்  - 

''வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை மாமணிக் கோயில்!''.. 

- என போற்றி வணங்கப்பட்ட திவ்ய தேசம் தஞ்சை யாளி நகர்..

சிறப்புடைய தஞ்சை மாநகரில் -
மகத்தான கருட சேவைப் பெருவிழா நேற்று மங்கலகரமாக நிகழ்ந்துள்ளது.

அன்ன வாகனத்தில் ஆழ்வார்
மகோத்சவத்தின் முதல் நாளாகிய நேற்று முன்தினம் - வெள்ளியன்று
தஞ்சை யாளிநகர் ஸ்ரீ வீரநரசிம்ஹப் பெருமாள் திருக்கோயிலில்
திருமங்கை ஆழ்வார் எழுந்தருளி திவ்யதேசப் பெருமாளை மங்களாசாசனம் செய்வித்தார். 

அன்றிரவு திவ்ய தரிசன சேவை நிகழ்ந்தது.  

நேற்று (28/5) அதிகாலையில், தஞ்சை மாமணிக் கோயிலிலிருந்து
திருமங்கை ஆழ்வார் அன்னவாகனத்தில் எழுந்தருள -  

தஞ்சை மாமணிக்கோயில்  ஸ்ரீநீலமேகப் பெருமாளும் ஆண்டாளும், ஸ்ரீமணிக் குன்றப் பெருமாளும், தஞ்சை யாளிநகர் ஸ்ரீ நரசிம்ஹப் பெருமாளும் கருட வாகனத்தில் ஆழ்வாருக்குத் திருக்காட்சி நல்கி சேவை சாதித்தனர்.

தேவியருடன் பெருமாள்
காலை 6.30 மணியளவில் -
அன்ன வாகனத்தில் திருமங்கையாழ்வார் எழுந்தருளி முன்னே செல்ல -

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளுடன் ஸ்ரீநீலமேகப்பெருமாளும்   
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளும் 
யாளி நகர் ஸ்ரீ வீரநரசிம்ஹப் பெருமாளும் 

- தனித்தனியே கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

அதேவேளையில் வெண்ணாற்றின் வடகரையில் உள்ள திருக்கோயில்களில் இருந்தும் கருட வாகனங்கள் புறப்பாடாகின. 


1) ஸ்ரீ நீலமேக பெருமாள் - ஸ்ரீ ஆண்டாள்
2) ஸ்ரீ வீரநரசிம்ஹ பெருமாள்
3) ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள்
4) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - வேளூர்
5) ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் - வெண்ணாற்றங்கரை

6) ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி - பள்ளி அக்ரஹாரம்
7) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் - சுங்காந்திடல்
8) ஸ்ரீ யாதவ கண்ணன் - கரந்தை
9) ஸ்ரீ வெங்கடேச பெருமாள், கரந்தை
10) ஸ்ரீ யோகநரசிம்ஹ பெருமாள் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.


11) ஸ்ரீ கோதண்டராமர் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.
12) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - கீழராஜவீதி
13) ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள், தெற்கு ராஜவீதி
14) ஸ்ரீ ராமஸ்வாமி, ஐயங்கடைத்தெரு (பஜார்)
15) ஸ்ரீ ஜனார்த்தன பெருமாள் - எல்லையம்மன் கோயில் தெரு


16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கோட்டை
17) ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் - கோட்டை
18) ஸ்ரீ ரங்கநாத பெருமாள் - மேல அலங்கம்
19) ஸ்ரீ விஜயராமஸ்வாமி - மேலராஜவீதி
20) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மேலராஜவீதி


21) ஸ்ரீ பூலோககிருஷ்ணன் - சகாநாயக்கன் தெரு,
22) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மானம்புச்சாவடி
23) ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாள் - மானம்புச்சாவடி.


மாநகரில் திகழும் மற்ற திருக்கோயில்களில் இருந்தும் கருடாரூடராக பெருமாள் எழுந்தருளி, தஞ்சை வடக்கு ராஜவீதியின் கொடிமரத்து மூலையில் ஒன்று கூடினர்.

கோலாகலம் கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.. 

மகா தீபாராதனைக்குப் பின் - கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி என நான்கு ராஜவீதிகளிலும் சேவை சாதித்தருளினர்.

மீண்டும் கொடி மரத்து மூலையில் - ஒன்று சேரும் உற்சவமூர்த்திகளுக்கு மகாதீபாராதனை நிகழ்வுற்ற பின், 

உற்சவமூர்த்திகள் -  அவரவர் திருக்கோயில்களுக்கு திரும்பினர்.


அன்ன வாகனத்தில் - முன்செல்லும் திருமங்கை ஆழ்வாரைத்  தொடர்ந்து இருபத்து மூன்று கருட வாகனங்களின் வீதி உலா கண்கொள்ளாக் காட்சி... 

காலையில் இருந்தே ராஜவீதிகளில் ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள் - 
பகல் பொழுதில் - வெயிலையும் பொருட்படுத்தாமல் -

ஒவ்வொரு திருக்கோயிலின் பெருமாளையும் கருட வாகனத்தில் தரிசித்து, நம்மாழ்வார் அம்சம் எனும் சடாரி  சூட்டிக்கொள்வதில் ஆர்வம் கொண்டனர். 


மகத்தான கருடசேவையைத் தரிசித்திட வேண்டி - வெளியூர்களில் இருந்தும் - வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் - திரளான பக்தர்கள் தஞ்சைக்கு வந்திருந்ததாக அறியமுடிகின்றது.  


ஆதியில் பராசர மகரிஷிக்கும் மார்க்கண்டேயருக்கும் - பின்னாளில்,
திருமங்கை ஆழ்வாருக்கும் ப்ரத்யட்க்ஷமாகிய கருட வாகன தரிசனம் - 

எண்பது ஆண்டுகளுக்கு முன், தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வாழ்ந்த - ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகளுக்கு மீண்டும் அருளப்பெற்றது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  - என, பன்னிரு கருட சேவையை, ஸ்ரீதுவாதச கருடாழ்வார் ஸ்வாமிகள் தான் தஞ்சை மண்ணில் துவக்கி வைத்து மக்கள் உய்யும் வழியைக் காட்டினார். 

அந்த மகத்தான அருளாளர் தொடங்கிய கருட சேவை - இன்று பரமன் அருளால் இருபத்து மூன்று கருட சேவை என தழைத்து விளங்குகின்றது.

இந்துசமய அறநிலையத் துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சன சபையினர் இணைந்து விழாவினை வருடந்தோறும் சிறப்பாக நடத்துகின்றனர்.


அந்தவகையில் - 

மகத்தான இந்தத் திருவிழா நேற்று காலை தஞ்சை ராஜவீதிகளில் நிகழ்ந்தது..

இந்தப் பெருவிழாவினை அடுத்து -
இன்று அனைத்துத் திருக்கோயில்களிலும் நவநீத சேவை நிகழ்கின்றது..

ராஜவீதிகளில் வெண்ணெய்த் தாழியுடன் 
பல்லக்கில் பெருமாள் எழுந்தருள்வார்.

30/5 திங்களன்று விடையாற்றி நடைபெறும்.  


ராஜவீதிகளின் நெடுகிலும் நீர்மோர், பானகம், சித்ரான்னங்கள் 
- என, பக்தர்களுக்கு வழங்கி மகிழ்ந்திருக்கின்றனர் - இறையன்பர்கள்...

இன்றைய பதிவில் - 
நேற்று கோலாகலமாக நிகழ்ந்த கருட சேவையின் படங்கள்..

அன்புடன் வழங்கிய 
ஸ்ரீ சௌரிராஜன் ரகுநாதன் அவர்களுக்கும்
அனுதினம் கருட சேவை தளத்திற்கும் 
மனமார்ந்த நன்றி!..
***

இப்பெருவிழா சிறப்புடன் நிகழ்வதற்கு பலவகைகளிலும் உறுதுணையாய் விளங்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றிகளும்!..

இருப்பினும் - இந்த வைபவத்தில் கலந்து கொள்ள இயலாதவாறு மிகவும் நலிவடைந்த நிலையில் சில திருக்கோயில்களும் நகரில் உள்ளன.

எதிர் வரும் ஆண்டுகளில் அந்தத் திருக்கோயில்களில் இருந்தும் பெருமான் - திருவீதி எழுந்தருள வேண்டும் என்பது நமது பிரார்த்தனை. 

அத்துடன் வேறொரு விருப்பமும் மனதில் உண்டு. 
உலகளந்த மூர்த்தி உள்ளுறையும் எண்ணம் ஈடேறிட அருள வேண்டும்..



கருடவாகனனாக எழுந்தருளி
நம் கவலைகளைத் தீர்க்க வருபவன்
கார்மேக வண்ணன்!..

பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வதன் 
உட்பொருள் மகத்தானது.

அழைத்தவர் குரலுக்கு வருபவன் - அவன்!..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிபவன்  - அவன்!..

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளும் தண்பொருப்புவேலை - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்!.
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
* * *

8 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    கருடசேவை விழாவைப் பற்றிய விளக்கம் அழகிய படங்களுடன் நன்று வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. தஞ்சையில் இருந்தபோதிலும், அனைத்துக் கடவுளர்களையும் தங்கள் பதிவு மூலமாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ந்ன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தங்கள் பதிவு முலமாகவே கண்டோம் கருடசேவையை,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. படங்கள் அழகு. விவரங்களும். தங்கள் பதிவு மூலம் எல்லா ஊர் தெய்வங்களையும் காணவும், அறிந்துகொள்ளவும் முடிகின்றது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      23 கருட சேவையும் தஞ்சை மாநகரில் உள்ள திருக்கோயில்களில் தான்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..