நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 04, 2015

உதவும் கரங்கள்

நீர் கொண்ட நெடுஏரிகளின் கரைகள் உடைத்துக் கொண்டன..

எங்கெங்கும் வெள்ளக்காடு..

அதனிடையில் - ஏதும் செய்ய இயலாமல் தவிக்கும் மக்கள் வெள்ளம்..


வையக முற்றும் மாமழை தவிர்ந்து
வயலில் நீரிலை மாநிலந் தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே!,, (7/55)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

வானமும் வையமும் வறண்டு போயின.. அந்நிலையில் மழை வேண்டும்.. எனவே, மக்கள் பணிக்கென பன்னிரு வேலி நன்செய் நிலத்தைக் கோயில் காணிக்கையாக்கினார் சிவனடியார் ஒருவர்..

அதன் விளைவாக மழை பெய்தது. பெய்து கொண்டேயிருந்தது..

நிலைமை கட்டுக்கடங்காமல் ஆகி - உயிர்க்குலங்கள் தவித்தன..

பின்னும் - துயர்ப்படுத்தும் மழை நிற்க வேண்டி,மேலும், பன்னிரு வேலி நன்செய் நிலத்தைக் கோயில் காணிக்கையாக்கினார் - அந்த அடியார்..

அதன்பின் - மக்களை அல்லற்படுத்திய மழை ஓய்ந்தது.. மக்கள் துயரும் நீங்கியது..

மழையை வரவழைத்தும் நிறுத்தியும் மக்கட்பணி செய்தவர் - ஏயர்கோன் கலிக்காமர். இதனால் அறுபத்துமூவருள் ஒருவரானார்..

அவருடைய செய்கையைப் புகழ்ந்து - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய திருப்பாடல் - அது!..


சிறிதான மழைத்துளிக்கும்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பு - என ஓலமிட்ட தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களின் கூக்குரலையும் மீறிய அவலம்..

மழை நீர் எது?.. கழிவு நீர் எது?.. தெரியவில்லை..

எல்லாம் கூடி கழுத்துக்கும் மேலே கடந்து செல்கின்றன...

அத்துடன்,

பாரபட்சமின்றி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்த் துளிகளும் பயணிக்கின்றன..


ஆனாலும், இயற்கையின் சீற்றம் அடங்குவதாகத் தெரியவில்லை...

கண்ணில் காணும் இடம் எங்கும் தண்ணீர் தான்!..

அப்ப்டியிருந்தும் - கையால் ஏந்திக் குடிக்க இயலவில்லை..

அது அசுத்தம்.. இது அசுத்தம்!..
அவன் பாமரன்.. இவன் படித்தவன்!,, -  என்றெல்லாம் மிகையுடன்,
வளர்த்தெடுக்கப்பட்ட நாகரிகம் - எங்கேயோ போய்த் தொலைந்து விட்டது..

உண்ணும் உணவுக்கும் குடிக்கும் நீருக்கும் -
எவ்வித பேதமும் இன்றி - ஏங்கித் தவிக்கின்றனர் மக்கள்..

தொலைக்காட்சி வழியில் சென்னையின் துயரம் மட்டுமே - திரும்பத் திரும்ப காட்டப்படுகின்றது..

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் சென்னையை மட்டுமே வட்டமிட்டுப் பறந்திருக்கின்றனர்..

கடலூர் மற்றும் தூத்துக்குடி..




தமிழகத்தின் தொன்மையான அந்த நகர்களும் அவற்றின் சுற்றுப் பகுதிகளும் கூட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன..

அங்கிருப்பவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்..

அனைவரும் துயரத்திலிருந்து மீள வேண்டும்..

பாலுக்கும் குடிநீருக்கும் உணவுக்கும் - சென்னை மக்கள் தவித்திருக்கின்றனர்..

சோதனையும் வேதனையுமான இந்தவேளையில், மனமறிந்தே - 
அதிக விலை வைத்து பாலும் நீரும் விற்கப்படுகின்றன..

இந்தக் கயவர்கள் - இப்படிச் சேர்க்கும் பணத்திலிருந்து ஒற்றை நாணயம் கூட அவர்களுடன் வராது என்பதை உணர்ந்தார்களில்லை..


இதற்கிடையில், துயருற்ற மக்களுக்காக - பல பகுதியிலிருந்தும் உதவிக்கு என கரங்கள் நீண்டுள்ளன..

ரதி மீனா எனும் பேருந்து நிறுவனத்தினர் - அல்லற்பட்ட மக்களிடம் எவ்வித பிரதிபலனும் கருதாது - உணவு குடிநீர் வழங்கி உபசரித்து - சென்னையில் இருந்து சிதம்பரத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கின்றனர்..

திருப்பூரில் இருந்து ஒன்றரை லட்சம் சப்பாத்திகள், இரண்டே கால் லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள், மூன்றாயிரம் கிலோ பால்பவுடர், எண்பது அரிசி மூட்டைகள் , அத்யாவசிய மருந்துகள் இவற்றுடன் மேலும் பல பொருட்களும் மூன்று லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது..

சேவை அமைப்புகள் மட்டுமின்றி பற்பல குடும்பத்தினரும் அயராமல் சப்பாத்திகளைச் செய்து - ஜாம் மற்றும் ஊறுகாயுடன் - நான்கு சப்பாத்திகள் வீதம் பொட்டலமிட்டு - சேவாபாரதி மற்றும் ஸ்ரீபுரம் அறக்கட்டளையினரிடம் ஒப்படைத்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன..

இந்த பெரும் சேவையில் - பல்லடம் வனம் அறக்கட்டளை, ஸ்கை குழுமம், தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கம், அவிநாசி ரமண சேவாஸ்ரமம், சத்ய சாய் சேவாசங்கம், ராமசந்த்ரா மிஷன், சங்கர சேவாலயம் முதலான அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன..

ஸ்ரீபுரம் அறக்கட்டளையிலிருந்து மக்களிடமிருந்து சேகரித்த பத்தாயிரம் சப்பாத்தியுடன் 1000 படுக்கை விரிப்புகள். 1000 பிரட் பாக்கெட்டுகள் 3000 பிஸ்கட் பாக்கெட்டுகள், 3000 தண்ணீர் பாட்டில்கள் 20 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் 10000 பின்னலாடைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன..

தன்னார்வத் தொண்டர்களும் சென்னைக்குச் சென்றுள்ளனர்..

தஞ்சையிலிருந்து நிவாரணப் பொருட்கள்
தஞ்சையில் இருந்து உதவிக்கரம்
தஞ்சையின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பெறப்பட்ட அரிசி முதலான பல்வேறு வகை உணவுப் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், அத்யாவசிய மருந்துகள் மற்றும் நாப்கின் போன்ற அவசியப் பொருட்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து - மூன்று லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன..

அவசியத்தை முன்னிட்டு - தஞ்சை விமானப் படை தளத்திலிருந்தும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது..


ஜெயங்கொண்டத்திலிருந்து நிவாரணப் பொருட்கள்
IRCTC - வழங்கியுள்ள குடிநீர்
இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) - ஒரு லட்சம் ரயில் குடிநீர் பாட்டில்களை வழங்குவதாக அறிவித்து முதற்கட்டமாக அறுபதாயிரம் பாட்டில்களை அனுப்பி வைத்துள்ளதுடன் மேலும் உதவுவதாக அறிவித்துள்ளது..


சென்னை பெருவெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்கென்று - பதினைந்து இளைஞர்கள் தன்னார்வமுடைய நண்பர்களுடன் இணைந்து - தனியாகக் கட்டுப்பாட்டு அறை ஒன்றினை உருவாக்கி -
அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பணியாற்றுகின்றனர்.

ஒருபுறம் - லட்சக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்..

மறுபுறம் - இவர்களுக்கு உதவி செய்வதற்கு பலர் தயாராக இருந்தும் - எப்படித் தொடர்பு கொள்வது எனத் தெரியாமல் திகைக்கின்றனர்..

இந்த இரு தரப்பினரையும் இணைக்கின்றனர் - தொண்டுள்ளத்தினர்..

இணைய வசதியுடன் கூடிய 10 லேப்டாப்கள், தரைவழி தொலை பேசிகள் மற்றும் நுண்ணலை பேசிகளும் கொண்டு மக்களுக்கு உதவுகின்றனர்..

வாட்ஸ் அப் எண் -  98806 55555
டெலிகிராம் எண் - 72597 60333
மற்றும் 12 இணைப்புகளைக் கொண்ட 080400 010000 என்ற தொலைபேசி

இவற்றின் வழியாக - நாள் முழுதும் இயங்கும் இந்த நல்லோர்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..


பச்சிளங்குழந்தை மீட்க்கப்படுகின்றது




இரவும் பகலும் அயராது பாடுபட்டு வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்கும் - அனைத்து அலுவலர்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் ராணுவத்தினருக்கும் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் 

பல்வேறு சிரமங்கள் இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் - உணவு சமைத்து அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி ஆறுதல் படுத்தும் எண்ணற்ற தன்னார்வத் தொண்டர்களுக்கும்

மனமார்ந்த வணக்கமும் நன்றியும் என்றும் உரியன..

பெரியது கேட்கின் தனி நெடுவேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ கரியமால் உந்தியில் பிறந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் தம் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே!..
-: ஔவையார் :-

நம்முள்ளத்துள் இறைவன் இருப்பதைத் தெரிந்து கொண்டாலே
நம்மால் நல்லனவற்றைச் சொல்லவும் செய்யவும் முடியும்..

அந்த வகையில்,
அற்றோருக்கும் அலந்தோருக்கும் அருஞ்செயல் புரியும்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

18 கருத்துகள்:

  1. பல நல்உள்ளங்களுக்கு நன்றிகள் பல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      மனமார வாழ்த்தி - நாமும் நன்றி கூறுவோம்..

      நீக்கு
  2. உதவும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் இந்த இடர் தீர வேண்டும் விரைவில் இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      உதவும் உள்ளங்களுக்கு இறைவன் உற்ற துணையாக இருக்கவேண்டும்..
      மக்கள் துயர் விரைவில் தீர வேண்டும்..

      நாமும் வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
  3. சேவை மனப்பான்மை இருந்தும் எப்படித் தொடர்புகொள்வது என அறியாதோர் அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தகவல் ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்..
      நாளிதழ்களிலும் வெளியாகி உள்ளன..

      விரைவில் அனைவரும் நலம் பெறவேண்டும்..

      நீக்கு
  4. அனைவரும் முடிந்த அளவு உதவ கைகோர்க்க வேண்டும் அரசியல் பாராபட்சமின்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்கள் கூறுவதே அனைவரின் விருப்பம்..
      விரைவில் அனைவரும் நலம் பெறவேண்டும்..

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    உதவும் உள்ளங்களுக்கு எனது நன்றிகள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பண்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி..

      நீக்கு
  6. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இன்னல் தீரவும் இயல்பு நிலை திரும்பவும் பிரார்த்திப்போம்..

      நீக்கு
  7. போகும் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சென்னை கடலூரை நோக்கிச் செல்லும் நிவாரணப் பொருட்களை வழி மறித்துப் பறித்துச் செல்வதாக செய்திகள் வருகின்றன..

      பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுவோம்..

      நீக்கு
  8. தொண்டர்களை
    கடவுளின் பிள்ளைகளாக
    வணங்குகின்றேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    கடவுளே! கண் திறந்து பாராயோ!
    http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் யாழ்பாவாணன்..

      தவறே செய்திருந்தாலும் மக்களின் துயர் தீர்வதற்கு இறைவனை பிரார்த்திப்போம்..

      நீக்கு
  9. கடலூர் கடலைப் போல காட்சியளிக்கின்றது..
    மான் குட்டி மற்றும் குட்டிக் குழந்தையைக் காப்பாற்றியவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள் மட்டுமல்ல எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      மீட்டுப் பணியில் உதவிய கரங்களுக்கு என்றென்றும் நன்றி..
      மக்களின் துயர் தீர்வதற்கும் நிலைமை சீரடைவதற்கும் பிரார்த்திப்போம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..