நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 28, 2015

தென்குடித் திட்டை

ஆதிகல்பத்தில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தும் பிரளய கால வெள்ளத்தினால் சூழப்பட்டு மூழ்கின. 

ஆனால், அந்தப் பேரூழிக் காலத்திலும் அழியாத பெருமை உடையது - திட்டை ஸ்தலம். 

கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களின் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத் தலமாக விளங்குவது திட்டை. 


இறைவன் - ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை, மங்களாம்பிகை
தலவிருட்சம் - ஆதியில் செண்பகம், தற்போது வில்வம்.
தீர்த்தம் - சூல தீர்த்தம் எனும் சக்ர தீர்த்தம்.

பிரளய காலத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும்  நீர் சூழ்ந்தது. சூர்ய சந்திரர் இறைவனுடன் ஒன்றி விட்டதால் எங்கும் இருள் கவிந்திருந்தது.

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு- இருளடைந்த பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர்.

அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளால் ஊழிப் பெரு வெள்ளத்தின் நடுவில்  மேடாக விளங்கிய திட்டு  ஒன்றினைக் கண்டு வியந்தனர். அந்த மேட்டுப் பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தோன்றிய தரிசனம் அளித்தது. அதனைக் கண்ட  மும்மூர்த்திகளும்  அதிசயித்துடன் பூஜித்தனர்.

இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்தார்.  அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, மந்த்ர, சாஸ்திர அறிவையும் அருளினார்.


இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலம்  தஞ்சை மாநகரை அடுத்துள்ள தென்குடித் திட்டை . 

பிரம்மன், மஹாவிஷ்ணு, முருகன், வசிஷ்டர், காமதேனு, ஆதிசேஷன் - ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

திருஞான சம்பந்தப்பெருமான் - பாடிப் பரவிய திருத்தலம்.

வடக்கே வெட்டாறும் தெற்கே வெண்ணாறும் பாய்ந்தோடும் சிறப்பினை உடைய திட்டை - காவிரியின் தென்கரைத் திருத்தலங்களுள் ஒன்றாகும். 

இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் .

வசிஷ்ட மகரிஷி திட்டையில் தவம் புரிந்து பிரம்மஞானிகளில் தலைசிறந்தவர் ஆனார். அதனால் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என - திருப்பெயர் கொண்டார்.  

காமதேனு வழிபட்டதால் தேனுபுரி என்றும் ஜமதக்னி முனிவருடனும் பரசு ராமருடனும் ரேணுகாதேவி வழிபட்டதால் ரேணுகாபுரி என்றும் இத்தலம் புகழப்படுகின்றது.




இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி விமானத்தின் - பிரம்ம ரந்திரத்தில் - சந்திர காந்தக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இக்கற்கள் காற்றிலிருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்ப்பதால் ஒரு நாழிகைக்கு (24 நிமிடங்கள்) ஒரு துளி நீர் என சுவாமியின் மீது விழுகின்றது. 

இத்தகைய அமைப்பு மிக மிக அபூர்வமானதாகும்.

உள் திருச்சுற்றில் மேற்கு பிரகாரத்தில் - கருவறைக்குப் பின்புறமாக  - ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் ஸ்ரீ சுப்ரமண்யப் பெருமானின் சந்நிதி விளங்குகின்றது..

ஸ்ரீ வைரவ மூர்த்தி - தெற்கு நோக்கியவராக - வடக்கு பிரகாரத்தில் தனியாக சந்நிதி கொண்டு சிறப்புடன் திகழ்கின்றார்..

குருபகவான் சந்நிதி - பின்புறம்
சூரிய பூஜை நிகழும் திருத்தலங்களுள் திட்டை திருத்தலமும் ஒன்று.  

ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் கருவறையில் சிவலிங்கத் திருமேனியின் மீது, சூரியனின் கதிர்கள் பரவுகின்றன.


சிவாலயங்களின் தெற்கு கோட்டத்தில் - தக்ஷிணாமூர்த்தி எனும் திருமேனி திகழும்.. 

சிவபெருமான் - ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து - சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த வேளையில் - தக்ஷிணாமூர்த்தி எனும் திருப்பெயர் கொண்டார்..

ஆலமர் செல்வன் எனப் புகழ்கின்றது - தேவாரம்..

வியாழன் எனும் பிரகஸ்பதி - சூர்யமண்டலத்தினுள் - தானுமொரு கிரகமாகத் திகழ்பவர்.. 

தேவர்களுக்குக் குருவானதால் வியாழகுரு எனவும் வழங்கப்படுவார்..

தக்ஷிணாமூர்த்தி -  ஈசனின் திருக்கோலம்.. 
பிரகஸ்பதி - வியாழன் எனும் தேவகுரு..

இறையன்பர்கள் - இதனை மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி - கூகுள்
நவக்கிரகங்களுள் ஒருவரான பிரகஸ்பதி எனும் வியாழ குரு, தனி சந்நிதியில்
சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் - தெற்குமுகமாக நின்ற திருக்கோலத்தில் ராஜகுரு என அருள் பாலிக்கின்றார்

தேவகுரு ஸ்ரீ பிரகஸ்பதி
சப்தரிஷிகளுள் ஒருவரான ஆங்கீரஸ முனிவரின் மகனாகிய பிரகஸ்பதி வாழ்வில் உன்னத இடத்தை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் - கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார்.

பிரகஸ்பதியின் தவத்துக்கு இரங்கிய எம்பெருமான் - திட்டை ஸ்தலத்தில் அவருக்குக் காட்சி கொடுத்தார்.

அதன் பயனாக - கிரக பதவி பெற்று - நவக்ரகங்களில் சுப கிரகமாக ஏற்றம் பெற்றார்.

நவக்கிரகங்களுள் முதன்மையாகி தேவர்களுக்குக் குரு எனும் நிலையைப் பெற்றார்.. வியாழன் எனும் பெயரும் பெற்றார்..

ஒருவருக்கு தலைமைப் பதவி, அதிகாரம், செல்வம், கல்வி, ஒழுக்கம், பிள்ளைப்பேறு ஆகியவை - சுபக்கிரகமாகத் திகழும் குரு பகவானின் கருணையினால்  கிடைக்கிறது.

உலகம் முழுதும் உள்ள பொன் பொருள் சுகபோக விஷயங்களுக்கு குருவே அதிபதி..

ஆண், பெண் எவராயினும் அவருடைய திருமணம் தடைப்படுமேயானால், அதை நிவிர்த்தி செய்து அருள்பவர் - குருபகவான்.

இத்திருக்கோயிலில் நவக்கிரக மண்டலம் வேறுபட்டு விளங்குகின்றது..

மேற்கு நோக்கிய சூரியனுக்கு எதிர்முகமாக வியாழகுரு விளங்குகின்றார்.


தேவகுருவின் சுழற்சி வட்டமே வியாழ வட்டம் எனப்படுவது..

குருபகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார்  ஓராண்டு காலம் தங்கியிருப்பார். அனைத்து ராசிகளையும் அவர் கடந்து வர பன்னிரு ஆண்டுகள் ஆகும்..

இதுவே  வியாழ வட்டம்  - மகாமகம் எனப்படுவது.

குரு பகவான் ஒருவரே - நவக்கிரஹ மண்டலாதிபதிகளுள் - சுப கிரகம். எனவே தான் குரு பார்க்க கோடி நன்மை என்றனர் பெரியோர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வியாழகுரு சிவபூஜை செய்து நலம் பெற்ற தலம் தான் - தென்குடித் திட்டை..

இத்திருக்கோயிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி அன்பர்கள் நலனுக்காக சிறப்பான முறையில் லட்சார்ச்சனையுடன் சிறப்பு அபிஷேக அலங்கார மகாதீபாராதனைகளும் நிகழும்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்வர்.

வருடந்தோறும் குருபெயர்ச்சியில் பங்கேற்று குருபகவானை தரிசிக்கத் திரளும் பக்தர்கள் வசதிக்கென  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு மிக்க திட்டை ஸ்தலம் - தஞ்சை மாநகரின் வடகிழக்காக 6 கி.மீ தொலைவில் விளங்குகின்றது.


ஸ்ரீநவநீதகிருஷ்ணன் சந்நிதி
மேலும், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்குப் பின்புறமாக -
ஸ்ரீ நவநீத கிருஷ்ணனின் திருக்கோயில்..

ஸ்ரீருக்மணி சத்யபாமா ஹேமாம்புஜ நாயகியுடன் - நவநீத கிருஷ்ணன் திருச்சேவை சாதிக்கின்றான்..

கோயிலினுள் - தெற்கு முகமாக ஸ்ரீசீதாராமனின் சந்நிதி..

ஸ்ரீராமபிரானைத் தொழுவானாக - வடக்கு முக ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தி..

ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் வரப்ரசாதி..

எண்ணிய நல்ல காரியங்களை நிறைவேற்றித் தருவதில் வல்லவர்..

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகின்றது..

சீட்டு எழுதிக் கட்டுவதும் மட்டைத் தேங்காய் கட்டுவதும் - சிறப்பு வேண்டுதல்கள்..

ஸ்ரீநவநீத கிருஷ்ணனை சேவிப்பவராக கருடாழ்வார்..



கோயிலினுள் ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதியும்  திருச்சுற்றில் ஸ்ரீ ஹேமாம்புஜ நாயகி. ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ சக்ரத்தாழ்வார் ஸ்ரீ யோகநரசிம்ஹ மூர்த்தி - விளங்குகின்றனர்..

திருச்சுற்றில் பவள மல்லியும் திகழ்கின்றது..

இன்று தென்குடித் திட்டையில் தெய்வ தரிசனம் கண்டு - சில படங்களைப் பதிவு செய்துள்ளேன்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து  -  திருக்கருகாவூர் செல்லும் நகரப் பேருந்துகளும்  ஆவூர், பட்டீஸ்வரம் வழியாக கும்பகோணம் செல்லும் புறநகர் பேருந்துகளும் திட்டை வழியே செல்கின்றன.

ரயில் வசதியும் உண்டு. மயிலாடுதுறை மார்க்கத்தில் - தஞ்சை ஜங்ஷனை அடுத்த ஸ்டேஷன். அனைத்து பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன.

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத்தை உணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே(3/35)
-: திருஞான சம்பந்தப்பெருமான் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

19 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி தென்குடித் திட்டை தலம் பற்றிய அரிய விடயங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தென் குடித்திட்டை கோவிலின் வரலாறும் அங்கிருக்கும் சிலைகளும் கோவிலின் அழகுமாய் படங்களுடன் அருமையான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. 2013-ம் ஆண்டு ஆலயதரிசனத்துக்காகப் பயணித்தபோது கரந்தை ஜெயக்குமார் மற்றும் ஹரணியை சந்தித்து விட்டு தென் திட்டைக்குடிக்குப் போனது நினைவில் பசுமையாக. நாங்கள் போகும் முன் இத்தனை விஷயங்கள் பற்றிக் கேள்விப்பட்டதில்லை நன்றியும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. தென்குடித் திட்டை தலத்தைப் பற்றிய அனைத்து சிறப்புகளையும் அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திட்டை குரு சன்னதி பற்றிய அழகு விளக்கம், நானம் அங்கு சென்றுள்ளேன். புகைப்படங்கள் அனைத்தும் அழகு, அதிலும் தங்கள் கையில் பவழமல்லி தவழும் அழகு இன்னும் சிறப்பு,,,,, வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் என்று படிக்கவும், கரந்தைக் கோயில்கள் தானா அடுத்து, ம்ம் நடக்கட்டும். விடுமுறை எல்லாம் கோயில் தரிசனம்,,,,,,, வாழ்த்துக்கள்.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகை மகிழ்ச்சி..
      பவளமல்லி என்றுமே அழகு தான்..
      தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. சிறப்பானதோர் கோவில். குடும்பத்தினருடன் அங்கே சென்று தரிசனம் செய்ததுண்டு.....

    கோவிலின் சிறப்புகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. குரு பெயர்ச்சியின் போது ஆலங்குடிக்கு அடுத்து இந்த திட்டையின் பெருமையும் பேசக் கூடிய ஒன்று. திட்டை வழியே பஸ்ஸில் சென்று இருக்கிறேன். தங்களின் ஆன்மீக தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பலமுறை இக்கோயிலுக்குச் சென்றுள்ளோம். அண்மையில் கோயில் உலாவின்போது நண்பர்களுடன் சென்றேன். தங்கள் பதிவின்மூலமாக மறுபடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தென்குடி திட்டை தலத்தை பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..