நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 28, 2015

அமைதியைத் தேடி

அக்னிச் சிறகுகளை விரித்தபடி 
அந்தப் பறவை - அமைதியைத் தேடி - பறந்து விட்டது..


நம்ப முடியவில்லை..

கண்ணால் செய்திகளைப் பார்த்தும் கூட மனம் நம்ப மறுக்கின்றது..

இவர் தமக்கும் மரணம் உண்டா!.. - என்று மறுகுகின்றது..



நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி.. 
பெருமைக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர்.. 

அதையெல்லாம் விட - தாய் நாட்டின் பெருமையை - 
மாற்றாரும் வியந்து நோக்கும்படிச் செய்த வித்தகர்..

மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமானார். 

பாரதத் தாய் - தனது தவப்புதல்வனை இழந்து பேச மொழியின்றி தவிக்கின்றாள்..

இனி - இப்படியொரு புதல்வனை என்று காண்பளோ!..



அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாலை மேகலாயாவில் அமைந்துள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். 

அதனையடுத்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் - பலனின்றி உயிர் பிரிந்தது.. 

ஏழு நாட்களுக்கு நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.

வாழும் காலத்தில் புகழுடன் வாழ்ந்தவர்..



எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்!.. - என்றார்!..

தன்னுடைய இயல்பான எளிமையினால் - அன்பான மொழியினால்,
காலங்களைக் கடந்து - வானமும் வையமும் உள்ள அளவிற்கு நிலைத்திருக்கும் வாழ்க்கை அவருடையது..


கனவு காணுங்கள்.. 
அந்தக் கனவை நினைவாக்க பாடுபடுங்கள்!..

இளைஞர்களின் இதயங்களில் பதிந்த பொன்னெழுத்துக்கள் அவருடையவை..

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் (1981) பத்ம விபூஷன் (1990) பாரத ரத்னா (1997) - ஆகியன இவரால் பெருமை கொண்டன..

இன்னும் பற்பல விருதுகளும் இவரைத் தேடிவந்து - சிறப்பு பெற்றன

எளிய - மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்..
தன் விடாமுயற்சியால் - சிகரங்களைத் தொட்டவர்.




முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!..
- என்பதற்குக் கண்கண்ட அடையாளம் - மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள்..

நாட்டின் முதற்குடிமகன் என்ற பெருமை அவரைத் தேடி வந்தது..

பதவிக் காலம் முடிந்த பிறகு - நான்கைந்து பெட்டிகளுடன் - ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியவர்..

அப்படிப்பட்ட ஒருவரை - அப்போதுதான் பாரதம் கண்டு வியந்தது..


அரசியலில் ஈடுபட்டதில்லை - அவர்..

ஆனாலும், அவர் தமக்கு ஆகவில்லை என்பதற்காக - பொங்கிப் புழுங்கினர் அரசியல்வாதிகள்!..

வாழ்ந்து முடித்த பிறகும் நினைவில் நிற்கும் வாழ்க்கை அவருடையது..

வானமும் வையமும் உள்ள அளவிற்கு பாரத மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்..



மொழி கடந்து இனம் கடந்து - 
பெரியவர் - சிறியவர், படித்தோர் - பாமரர் என்றில்லாமல் -
பாரத மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இறுதி மூச்சு வரை அயராது மக்கள் பணியாற்றியவர்.

இந்த நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தித்தவர்.

வளரும் பிள்ளைகளிடமும் மாணவச் செல்வங்களிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர்.

அவ்வண்ணமாக - 
மாணவர்களிடம் பேசிக்கிட்டு இருக்கும்போதே புகழுடம்பு எய்தினார்..

இத்தகைய மரணம் இறையருள் பெற்றவர்க்கே வாய்க்கும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே பெருமை..



பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் திருப்பெயர் 
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

அவரது ஆன்மா - இறைநிழலில் 
அமைதியடைய வேண்டுகின்றேன்.. 
* * * 

23 கருத்துகள்:

  1. மாமேதை பற்றி எத்தனை விடயங்களைப்
    பகிர்ந்து கொண்டீர்கள் ஐயா!

    படித்ததும் கண்கள் கரைகின்றன.

    அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!..

    பதிலளிநீக்கு
  2. எதிர்பாராத மரணம். உங்களது கண்ணீர் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்ந்த மனிதர்.. அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..

      நீக்கு
  3. வணக்கம்,
    தங்களின் பகிர்வு அருமை,
    அவரின் மரணம் மனம் ஏற்க மறுக்கிறது என்பது எத்துனைப் பெரிய உண்மை,
    எம் ஆழ்ந்த அஞ்சலியும்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்கன் வேண்டுமென்றே பாதுகாப்பு சோதனை செய்த போதும் புன்னகையுடன் பொறுமை காத்த பண்பாளர்..

      அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..

      நீக்கு
  4. இவ்வளவு உயர்ந்த அவர் ஆத்ம
    சாந்தியோடு இறைவனடி சேர்ந்து இருப்பார் , நல்ல மனிதர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்ந்த மனிதர்.. மாணவர்களின் முன்னேற்றத்தை விரும்பினார்..
      இறைவனடியில் அமைதி பெற்றிருப்பார்..

      நீக்கு
  5. ராமேஸ்வரத்தில் அவரது இக்கத்துக்குச்சென்றிருக்கிறேன் அவரது தமையனாருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம் அவர்களது குடும்பத்ஹார் நடத்தும் ஸ்டோர்ஸுக்கும் சென்றிருக்கிறோம். அவரது எளிமை போற்றுதற்குரியது. அவரது மறைவு ஒரு இழப்பே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளரும் தலைமுறைக்கு ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார்..
      அவரது ஆன்மா அமைதி பெறட்டும்..

      நீக்கு
  6. மேலே இல்லத்துக்கு என்றும் குடும்பத்தார் என்றும் இருக்க வேண்டும் தட்டச்சுப் பிழை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் மனங்களில் அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்..

      நீக்கு
  7. அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..

    பதிலளிநீக்கு
  8. மாமனிதருக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிமையின் சிகரம் அவர்.. அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்..

      நீக்கு
  9. உண்மை ஐயா
    அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே நமக்குப் பெருமை
    அயராது பாடுபட்ட மாமனிதர்
    இனிமேலாவது ஓய்வெடுக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாணவச் செல்வங்களின் உண்மையான முன்னேற்றத்திற்குப் பாடுபட்டவர்.. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

      நீக்கு
  10. மிக எளிமையான மனிதர்! எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும், கல்வியில் நமது நாடு உயர வேண்டும் என்ற கனவு உடையவர்! அரசை நம்பாமல் நாம் முனைந்து செயல்பட வேண்டும் அப்படியானால் உலக அரங்கில் ஒப்பற்ற மேன்மையுடன் திகழும் இந்தியாவை உருவாக்க முடியும் என்று இளைஞர் சமுதாயத்திற்குச் சொல்லி வந்தவர். அவரது கனவை நனவாக்குவதில் நாமும் நமது அடுத்த தலைமுறையும் சிறிதேனும், நம்மால் இயன்ற அளவு செய்ய முனைந்தால் அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையும் அஞ்சலியும்!

    வாழ்க எம்மான்! வளர்க அவரது புகழ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களைக் கடந்த சான்றோர் அவர்..
      பிறந்த மண்ணை மிகவும் நேசித்தவர்..
      அவரது ஆன்மா அமைதியில் நிலை பெறட்டும்.

      நீக்கு
  11. காலத்தை வென்ற கலாம்! இனி ஒரு கலாம்...ம்ஹூம்! அவரின் ஆன்மா அமைதியில் உறங்கட்டும்! RIP Kalaamji:-(((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக எளிமையாக வாழ்ந்த மாமனிதர்..
      அவரது ஆத்மா அமைதியில் நிலை பெறட்டும்..

      நீக்கு
  12. மறைந்த மகாத்மா கலாம் அவர்களுக்கு நினைவஞ்சலி! இவர் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம் பெருமை! இளைஞர்களை நல்வழியில் ஊக்குவிக்கவும், வழிகாட்டவும் இவரைப் போன்ற தலைவர் இனி யார் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களைக் கடந்த சான்றோர் அவர்..
      அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் அமைதி பெறட்டும்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..