நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 29, 2015

இனியொரு முறை...

நெஞ்சம் இன்னும் அமைதி பெறவில்லை..

நேற்று முதல் நிம்மதியான உறக்கமும் இல்லை..

அரிது.. அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!.. - என்றார் ஔவையார்..

அப்படிப் பிறந்தாலும் ,

அப்துல் கலாம் அவர்களைப் போல் வாழ்வது அரிது..


சென்று வருக.. ஐயா.. சென்று வருக!..
அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் ஸ்ரீ ஜன்பால்சிங் -  தனது Facebook - பக்கத்தில் - கலாம் அவர்களின் கடைசி நிமிடங்களைப் பதிவிட்டுள்ளார்..

அதிலிருந்து ஒரு பகுதி..

ஜூன் 27.

குவாஹாத்திக்கு ஒன்றாக விமானத்தில் புறப்பட்டபோது பகல் மணி 12.


டாக்டர் கலாம் அவர்கள் 1-ஏ , எண் கொண்ட இருக்கையில் அமர்ந்திருந்தார்.. அவர் அடர் நிறத்தில் ஆடை அணிந்திருந்தார்.

நல்ல நிறம்!.. என, அவரிடம் - அவரது ஆடையைச் சுட்டிக் காட்டி சொன்னேன்.

அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை - அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நேரம் என்று!..


அப்துல் கலாம் அவர்களுடன் - ஸ்ரீஜன்பால் சிங்
விமானத்தில் இரண்டரை மணி நேரப் பயணம்..
அதன் பின் அங்கிருந்து ஷில்லாங் - ஐ. ஐ. எம். நோக்கி - காரில் மீண்டும் இரண்டரை மணி நேரப் பயணம்..


விமானம், கார் - என பயணமே ஐந்து மணி நேரத்தை விழுங்கி விட்டது. ஆனாலும் - பயணத்தின் போது நிறைய பேசினோம்..

பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் அவரை வெகுவாகவே பாதித்திருந்தது.. 

அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. 

அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ. ஐ. எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு -

வாழ்வதற்கு உகந்த பூமி..

பஞ்சாப் சம்பவத்தையும் அவர்  பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம் அவர்கள் - 

மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்தப் பூமியை வாழ்வதற்குத் தகுதி அற்றதாக மாற்றி வருகின்றன.

வன்முறையும் சுற்றுச்சூழல் மாசும் சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் முப்பதாண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்..

இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் எதிர்காலம் உங்கள் கைகளிலே இருக்கின்றது - என்றார்.

அதற்கு அடுத்த நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியானது.


அவரது பண்பாட்டிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு..

எங்கள் வாகனத்திற்குப் பாதுகாப்பாக ஆறு வாகனங்கள் வந்தன. 
நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம்.

எங்களுக்கும் முன்னதாகச் சென்ற ஜிப்ஸி வாகனத்தில் மூவர் இருந்தனர். இருவர் அமர்ந்திருக்க ஒருவர் நின்றபடியே பயணித்தார். 

ஒருமணி நேரப் பயணம்.. 

அவர் ஏன் நின்று கொண்டே வருகிறார்?.. அவர் சோர்ந்து விடுவார். அவருக்குத் தண்டனை போல் இருக்கின்றதே.. ஏதாவது செய்யுங்கள்.. ஒயர்லெஸ்ஸில் தகவல் அனுப்பி அவரை உட்காரச் சொல்லுங்கள்... 

- என, கலாம் அவர்கள் என்னிடம் கூறினார்.

நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன்.. ஆனால் கலாம் அவர்கள் சமாதானம் அடையவில்லை. 

ரேடியோ கருவி மூலமாக தகவல் அனுப்ப முயன்றோம். 
அது சரிப்பட்டு வரவில்லை.. 

அடுத்த ஒன்றரை மணி நேரப் பயணத்தின் போது ஷில்லாங் சென்றதும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!... - என மூன்று முறையாவது கூறியிருப்பார்..

ஷில்லாங் சென்றதும் அந்த வீரரைத் தேடிக் கண்டு பிடித்து அழைத்துச் சென்றேன்..

பாதுகாப்பு படை வீரருக்கு நன்றி
அந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம் அவர்கள் - சோர்வாக இருக்கின்றாயா?.. ஏதாவது சாப்பிடுகின்றாயா?.. எனக்கேட்டார்.

எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகி விட்டது. அதற்காக நான் வருந்துகின்றேன்!.. - என்றார்..

அதைக்கேட்டு வியந்த - அந்த வீரர் ,
சார்.. உங்களுக்காக நான் ஆறு மணி நேரம் கூட நிற்பேன் !.. என்றார்..

அதன்பிறகு கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்குச் சென்றோம். 

அவர் எப்போதுமே குறித்த நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவர்.  மாணவர்களைக் காக்க வைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்..

அவருக்காக ஒலிபெருக்கியைச் சரி செய்து -கருத்தரங்கு குறித்து சுருக்கமாகக் குறிப்பு வழங்கினேன்.. 

மேடையில் ஏறி இரண்டு நிமிடங்களே பேசியிருப்பார்.. நீண்ட இடைவெளி.. 

நான் அவரைப் பார்க்க - அவர் கீழே சரிந்தார். நாங்கள் அவரைத் தூக்கினோம். 

மருத்துவர்கள் விரைந்து வந்தனர். 
என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தனர். 

ஒரு கையால் அவரது தலையைத் தாங்கியிருந்தேன்.. 

பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசி பார்வையை என்றென்றைக்கும் மறக்க இயலாது. 

எனது கையை இறுகப் பற்றி - என் விரல்களைத் தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டார்.. 

அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது.. அவர் எதுவும் பேசவில்லை.. 
வலியை சிறிதும் காட்டவில்லை.. அவரது கண்களில் ஞானஒளி வீசியது.

ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் மருத்துமனையை அடைந்திருந்தோம்.

ஆனால் - அப்போதே ஏவுகணை நாயகன் விண்ணில் பறந்திருந்தார்.

அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.

எனது மூத்த நண்பருக்கு எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன்..

உங்கள் நினைவுகள் என்னை விட்டு நீங்காது. அடுத்த பிறவியில் சந்திப்போம்.

Facebook-ல் வந்ததை ஓரளவு சுருக்கமாக பகிர்ந்துள்ளேன்..
* * *
சகோதரருடன் கலாம் அவர்கள்
அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கினை சொந்த ஊரில் நடத்தப்பட வேண்டுமென - அவரது சகோதரர் குடும்பத்தினரும் உறவினர்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அந்த அளவில் - அப்துல் கலாம் அவர்களின் பூத உடலைச் சுமந்து கொண்டு தலைநகரிலிருந்து இன்று காலை 8.15 மணியளவில் புறப்பட்ட தனி விமானம் - பகல் 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது..

தமிழக அரசின் சார்பில் மாநில ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோர் பெற்றுக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்..

அஞ்சலிக்குப் பின் - அப்துல் கலாம் அவர்களின் பூதவுடலைச் சுமந்து கொண்ட ராணுவ ஹெலிகாப்டர் ராமேஸ்வரம் நோக்கிப் பறந்தது.

புன்னகை ததும்ப இன்முகம் காட்டிச் சென்ற தங்கமகன் பூமாலைகளுடன் சடலமாக வந்து இறங்கிய கொடுமையை எண்ணிக் கண்ணீர் வடித்து நிற்கும் மக்களின் அஞ்சலிக்காக - அப்துல் கலாம் அவர்களின் பொன்னுடல் - 

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மைதானத்தில் இரவு எட்டு மணி வரைக்கும் வைக்கப்பட்டிருக்கும்..

அதன் பின் - கலாம் அவர்களின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது..

நாளை (27) காலை எட்டு மணியளவில் - அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா - பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது..

பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகைக்குப் பின்,
ராமேஸ்வரம் - தங்கச்சி மடம் சாலையில் உள்ள அரசு நிலத்தில் நல்லடக்கம் நடைபெறுகின்றது..

பொக்ரான் குண்டு வெடிப்பு
குடியரசுத் தலைவராக பவனி








சாலையோர உணவகத்தில் எளிய உணவு

கோடிக்கணக்கான மக்களின் கண்ணிலும் கருத்திலும் கலந்திருந்த அப்துல் கலாம் அவர்கள் -

தாய் மண்ணில் - தாயின் மடியில் அடைக்கலம் ஆகின்றார்..


பொன்னுடல் நீங்கி புகழுடல் ஆனது..

மண்ணிலிருந்து மாமனிதர் மறைந்தாலும் 
கண்ணிலிருந்தும் கருத்திலிருந்தும் 
எண்ணங்களிலிருந்தும் மறைவதேயில்லை..
எழுச்சிமிகும் பாரதத்தின் இளையோர் மத்தியில் 
அவர் என்றென்றும் திகழ்ந்திருப்பார் - 
அக்னிச் சிறகுகள் கொண்ட அன்பின் பறவையாக!..

என்றும் தங்கள் நல்லாசிகளுடன்!..
இனியொரு முறை.. இனியொரு முறை..
இப்படியொரு பண்பாளரைக் காண இயலுமா!?..
கண்ணுக்கெட்டிய தொலைவிற்கும் தெரியவில்லை!..

வையம் உள்ளளவும் புகழ் கொண்டு வாழ்வார்!..
* * *

18 கருத்துகள்:

  1. ஆம் ஐயா மனம் நெகிழ்கிறது. நல்லதொரு மனிதப்பிறவி அவர்.
    அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். ஆள்பவர்கள் புரிந்து கொண்டால் இன்னும் நலம். .அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் இவ்வையத்தில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிமை என்பதற்கு அவர் வாழ்க்கையே அடையாளம்..
      அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்..

      நீக்கு
  2. மறைந்த மாமனிதரைப் பற்றிய பதிவு மனதை மிகவும் நெகிழ வைத்தது. இவர் போல் இன்னொருவரை எப்போது காண்போம்? எப்போதும் மாணவர்களைச் சந்திப்பதையே விரும்பியவர். அவர் இறுதி மூச்சும் மாணவர் முன்னாலேயே போய்விட்டது. தமிழனின் பெருமையை உலகளவில் உயர்த்திய கலாமுக்கு வீரவணக்கம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாணவர்களின் சந்திப்பில் மகிழ்ச்சி கொண்ட மாமனிதர்..
      அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்..

      நீக்கு
  3. முகநூலில் வாசிக்கும் போது கலங்கினேன்... இப்போதும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது மறைவினால் கலங்காத கண்களும் உண்டோ..
      அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்..

      நீக்கு
  4. ஐயா.. மறைந்த மாமேதையின் இறுத்தித் தருணங்களும் அதற்கு முந்தையதான நிழற்படங்களுமென இட்ட உங்கள் பதிவு கண்டு
    மனம் கனத்தது. கண்கள் வழிகின்றன..!

    அற்புத மனிதர் அவரின் நல் வழிகாட்டலை ஏற்று அனைவரும் நடப்போம்!
    அதுவே அவருக்கு நாம் செய்யும் மரியாதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமனிதரின் வழிகாட்டிலை ஏற்று நடப்பதே உண்மையான அஞ்சலி..
      அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

      நீக்கு
  5. வணக்கம்,
    மனம் இன்னும் கனத்து கிடக்கிறது, எத்துனையோ இழப்புகளைப் பார்த்து இருப்போம் உறவிலும், ஆனால் இவ்விழப்பு இன்னும் அதிகமாய் வேதனைத்தருகிறது,
    அவரின் வாக்கு நிறைவேற நாம் செயல் வடிவம் கொடுக்கனும் அது ஒன்றே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி,
    அம்மா அவரின் மறைவு 27, என் பிறப்பு 27 , நான் விஞ்ஞானி என்ற இரண்டாம் வகுப்பு மாணவனின் உரையாடலைக் கேட்ட நான் அதிசயத்துப் போனது என்னவோ உண்மை, அதனை பதிவாக்க இருந்தேன், தங்கள் அஞ்சலியில் அதனை பதித்துப் போகிறேன். அம் மாணவனை அடுத்த 27ல் சொல்கிறேன்,
    அவரின் கனவாகும் என நம்புவோம்,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய எண்ணங்களுடன் ஒருதலைமுறை தோன்றியிருக்கின்றது..
      அதற்குக் காரணம் - அப்துல் கலாம் ஐயா அவர்கள்..
      அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

      நீக்கு
  6. அமரர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய வண்ணப் பதிவு நெஞ்சை உருக்குகின்றது. அவரது நல்லடக்க நிகழ்ச்சியின் நேரடிக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்து முடித்தேன். வெறும் சாதாரண அரசாங்க ஊழியர், நாட்டுக்கே குடியரசுத்தலைவராக வர முடியும் என்ற உயர்நிலையை இந்தியாவில்தான் காண முடியும். அவ்வகையில் அவரை அப்பதவிக்குக் கொண்டுவந்த அப்போதைய பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கும், அவரது பெயரை முன்மொழிந்து அவரை வாஜ்பாயின் பார்வைக்குக் கொண்டுவந்த அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும். ...ஒரு அற்புத மனிதர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரது எழுத்துக்களில் நம்மையும் நமது இளைய தலைமுறையையும் அவர் என்றென்றும் ஊக்குவித்து வழிகாட்டுவார் என்பது உறுதி. - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது எளிமையும் அடக்கமும் அறிவும் - என்றும் மறக்க இயலாதவை.. மாமனிதரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

      நீக்கு
  7. வலைத்தளங்களில் நிறைய இரங்கல் பதிவுகள் வந்துவிட்டன. ஆனால் இந்தப் பதிவு நெஞ்சை நெகிழவைத்து விட்டது. எல்லோர் மனதையும் சோகத்திலாழ்த்தும் இந்த மறைவு மனம் விட்டு அகல்வது கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது தனித்துவமான குணாதிசயங்கள் - போற்றுதலுக்குரியவை..
      மாமனிதரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

      நீக்கு
  8. இம்மாமனிதருக்கு ஈடு இணை எவருமில்லை. நல்ல புகழஞ்சலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு இணையாக ஒருவரையும் காணவில்லை..
      வையத்தில் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

      நீக்கு
  9. ஈடு இணையற்ற மாமனிதர் ஐயா! அவரது படத்தில் பாருங்கள்..குழந்தைகளுடன் அவர் இருக்கும் போது அந்த மனத்தின் பிரதிபலிப்பு முகத்தில்....எவ்வளவு கனவு கண்டிருப்பார்...கல்வித்துறையில்....மனம் விம்முகின்றது. இன்னும் அவர் இருந்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகின்றது...

    நாம் அவரது வழித்தடங்களைப் பின்பற்றுவோம்...அவரது கனவை நனவாக்குவோம்....தங்களது பதிவு அருமை ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈடு இணை கூற இயலாதவண்ணம் எளிமையாக வாழ்ந்தவர்..
      என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..