நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 24, 2014

நவராத்திரி

அம்பிகைக்குரிய விசேஷங்களுள் மிக முக்கியமானது நவராத்திரி விழா.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பினை உடையது.

சூரியன் கன்னி ராசியில் திகழும் புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் ஆரம்பித்து தசமி திதியுடன் நிறைவு பெறுவது நவராத்திரி விழா.


இது சாரதா நவராத்திரி எனப்படும். இதுவே வீடுகள் தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது.

ஆயினும், தை மாதம் ஸ்யாமளா நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரி, ஆடியில் ஆஷாட நவராத்திரி என மேலும் மூன்று நவராத்திரி வைபவங்கள் பாரதத் திருநாட்டில் ஆங்காங்கே தொன்று தொட்டு அனுசரிக்கப்படுகின்றன.  

சாரதா நவராத்திரி தவிர்த்த ஏனைய வைபவங்கள் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் முறையாக நடைபெறுகின்றன.

பொதுவாக நவராத்திரி பூஜைகள் சூர்ய அஸ்தமனத்திற்குப் பின் -  முன்னிரவு நேரத்தில் செய்யப்படும்.

சக்தி வழிபாட்டுக்குரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்பட வேண்டியது என்றாலும் விரதம் மேற்கொள்வது அவரவர் விருப்பம்.

ஈசனை வழிபடுவதற்கு ஒரு ராத்திரி எனில் ஈஸ்வரியை வழிபட நவராத்திரி.  

நவம் -   என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் விழாவிற்குப்பின் பத்தாம் நாள் விஜய தசமி.

ஸ்ரீராமபிரான் ஸ்ரீதுர்கா பூஜை செய்த பின்னரே, இராவணனுடன் போர் புரிந்தார் - என்று ஆன்றோர் கூறுவர்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடிந்ததும் வன்னி மரத்தின் உள்ளிருந்து ஆயுதங்களைத் திரும்பவும் எடுத்த நாள் விஜய தசமி. 


புரட்டாசிக்குப் பின் குளிரும் பங்குனிக்குப் பின் கோடையும் ஆரம்பிக்கின்றன. மக்களை -  பலவித பிணிகள் துன்புறுத்தி நலியச்செய்யும் காலம். 

இவ்வேளையில், பிணிகளின் தாக்குதலில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள  - இறையருளை நாடுவது நவராத்திரியின் நோக்கம் என்பர் ஆன்றோர்.
தனிச் சிறப்புடைய நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. 

எனினும் - எல்லாரும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். 

இதனால் அனைவரும் பெறுவது - மனமகிழ்ச்சியும் பரிபூரண திருப்தியுமே!..

நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில்-

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி வழிபாடு மூன்று நாட்களும், 
ஸ்ரீமஹா லக்ஷ்மி வழிபாடு மூன்று நாட்களும்,
ஸ்ரீஞான சரஸ்வதி வழிபாடு மூன்று நாட்களும் - நிகழ்கின்றன
.



விஜய தசமி எனும் பத்தாம் நாள்
அம்பிகை மகிஷாசுரனை வெற்றி கொண்டு 
காலடியில் போட்டு மிதித்த நாள். 

ஆணவம் அழிந்த நாள். 
மூர்க்கம் முடக்கப்பட்ட நாள். 
பெண்மை வென்ற நாள்.

வீரர்களின் இதயக்கோயிலில் உறைபவள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி.  
அவளுடைய திருக்கோலங்கள் ஒன்பது. அவை -

வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை.

ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி -  லக்ஷ்மி, சரஸ்வதி எனும் திவ்ய ஸ்வரூபங்களைத் - தன்னுள் கொண்டு முப்பெரும் சக்தியாக இலங்குபவள்.

இந்த முப்பெரும் சக்திகளும், மேலும் மும்மூன்று அம்சங்கள் கொண்டு  -

மகேஸ்வரி, கெளமாரி , வராகி, 

மகாலெக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி,

சரஸ்வதி, நாரஸிம்ஹி, சாமுண்டி -

 - என ஒன்பது தேவியர்களாகப் பொலிகின்றனர்.

நவராத்திரியில் கன்யா பூஜை என்பது ஒரு மரபு.  

இல்லங்களில் சக்தி ஸ்வரூபம் அமைத்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புஷ்பாஞ்சலியுடன் தூப தீப ஆராதனைகள் செய்து தினமும் ஒவ்வொரு விதமான நிவேத்யம் படைத்து உள்ளன்புடன் வணங்க வேண்டும். 

அத்துடன் - ஏழைகளுக்கு தானமும் செய்தல் வேண்டும்.

வீட்டில் அழகாக கொலு வைக்கலாம். அதுவும் இயன்றால் தான். 

ஒன்பது நாளும் இயன்ற அளவில்  சுண்டலும் சித்ரான்னமும் பழவகைகளும் அம்பிகைக்கு நிவேத்யம் செய்வது அன்பின் வெளிப்பாடாக இருத்தல் வேண்டும். 

அன்புக்கு வசமாகும் அம்பிகை - ஆடம்பரங்களை வெறுப்பவள்!.. 

 

ஸ்ரீசரஸ்வதி மூலஸ்தானத்தில் வீற்றிருந்து அருள் பொழியும் திருத்தலம் கூத்தனூர். 

கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் எழுப்பிய திருக்கோயில் இது. 

திருஆரூர் -   மயிலாடுதுறை  சாலையில் பூந்தோட்டம் எனும் சிற்றூருக்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் அரசலாற்றின் கரையில் அமைந்துள்ளது கூத்தனூர் கிராமம்.
 
கூத்தனூர் சரஸ்வதி திருக்கோயிலில்  நவராத்திரி விழா தொடங்கியுள்ளது.

இன்று (செப்/24) முதல் புரட்டாசி/19  (அக்/5) ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன்  நவராத்திரி விழா நடைபெறுகின்றது.

ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்ரீ சரஸ்வதி அம்பாளுக்கு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் மஹாதீபாராதனையும் நிகழ்கின்றது. 

மாலை வேளைகளில் இலக்கியச் சொற்பொழிவுகளும் இசை நிகழ்ச்சிகளும் பரத நாட்டியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இரவில் ஸ்ரீவிநாயகப் பெருமான் திருவீதி உலா எழுந்தருள்கின்றார்.

முதல் நாள் : செப்டம்பர்/24 - பாலிகை இடுதல், ரக்ஷாபந்தனம்.

{1}செப்டம்பர்/24 புதன் - ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அலங்காரம்.
{2}செப்டம்பர்/25 வியாழன் - சந்தனக்காப்பு அலங்காரம்.
{3}செப்டம்பர்/26 வெள்ளி - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அலங்காரம்.

{4}செப்டம்பர்/27 சனி - ஸ்ரீ மகாலக்ஷ்மி அலங்காரம்.
{5}செப்டம்பர்/28 ஞாயிறு - ஸ்ரீ சாகம்பரி அலங்காரம்.
{6}செப்டம்பர்/29 திங்கள் - ஸ்ரீ சந்தானலக்ஷ்மி அலங்காரம்.
{7}செப்டம்பர்/30 செவ்வாய் - ஸ்ரீ மீனாக்ஷி அலங்காரம்.
{8}அக்டோபர்/01 புதன் - ஸ்ரீ மஹாசரஸ்வதி அலங்காரம்.
{9}அக்டோபர்/02 வியாழன் - ஸ்ரீ சரஸ்வதி பூஜை. ஸ்ரீபாத தரிசனம்.

பக்தர்கள் மூலஸ்தானத்தின் அருகில் சென்று அம்பாளின் திருவடித் தாமரைகளைத் தொட்டு வணங்கலாம்.
{10}அக்டோபர்/03 வெள்ளி - விஜயதசமி.
காலையில் - பால வித்யாரம்பம், ஸ்ரீ அம்பாள் ஏகாதச ருத்ராபிஷேகம்.
இரவு - நவசக்தி அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, ஸ்ரீ அம்பாள் திருவீதியுலா .
{11}அக்டோபர்/04 சனிக்கிழமை காலையில் ஸ்ரீஅம்பாள் மஹாஅபிஷேகம், மஹா தீபாராதனை. இரவு  ஸ்ரீ அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல்.

{12}அக்டோபர்/05 ஞாயிறு - ஸ்ரீ அம்பாள் ஊஞ்சல் உற்சவம்.
மஹா தீபாராதனை. விடையாற்றி. பாலிகை விடுதல். 

அக்டோபர்/06 முதல் அக்டோபர்/13 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை. தொடர்ந்து மஹா தீபாராதனை நிகழ்கின்றது.
அக்டோபர்/13 காலை ஒன்பது மணியளவில் உற்சவர் பிராயசித்த அபிஷேகம், யதாஸ்தான பிரவேசம்.



நவராத்திரி கொலு அமைத்தல் எனில் அவரவர் பாரம்பர்ய வழக்கப்படி அமைக்கலாம். 

கீழ்ப்படியில் ஓரறிவுடைய தாவரங்களின் அம்சங்களை அமைத்து மேலே செல்லச் செல்ல சிற்றுயிர்கள் பறவைகள் விலங்குகள்  மனிதர்கள் ஞானியர் தேவர்கள் என அமைத்து, 

மேல்படியில் முழுமுதற்பொருளான ஸ்வாமி அம்பாள்  ஸ்வரூபத்தினையும் பூரண கும்பத்தினையும் நிறுவ வேண்டும்.

நவராத்திரி விழாவின் போது ஒவ்வொரு வீடும் ஒருகோயிலாக ஆகின்றது.

நாளும் மாலை நேரத்தில் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்!.. -  என கொலு மண்டபத்தில் ஆராதனைகளைச் செய்து, 

அருகில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர் நண்பர்களையும் அழைத்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். 

தீப ஆராதனைக்குப் பிறகு நிவேதன பிரசாதத்துடன் மங்கலப் பொருட்களை மகிழ்ச்சியுடன் கொடுத்து உபசரித்தல் மரபு. ஒருவருக்கொருவர் அன்பின் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம். 

ஏற்ற தாழ்வின்றி கொள்வதும் கொடுப்பதும் நவராத்திரியின் மாண்பு!..

புல் பூண்டுகள் எனத் தொடங்கி பூரண கும்பம் எனும் நிலையில் நிறைவுறும் கொலு அமைப்பினை உற்று நோக்கினாலே நவராத்திரி கொலுவின் அர்த்தம் விளங்கி விடும். 

நவராத்திரி கொலு என்பது ஒரு அருட்குறிப்பு. 

புல் பூண்டுகள் எனத் தொடங்கும் ஒவ்வொருவருடைய வாழ்வும் பூரண கும்பம் எனப் பொலிவுற வேண்டும். அதுவே நமது வேண்டுதல்!..


நவராத்திரி - அம்பாள் மகிஷனுடன் நிகழ்த்திய நாடகம்!..
அதன் மறைபொருள் - பெண்மையின் வெற்றி என்பது தான்!.. 

பெரும் சக்தியான பெண்மையைப் பேதைமைப் படுத்தும் எதையும் - பெண்மை வெற்றி கொண்டு வீழ்த்தும் என்பதே உண்மை!..

பெண்மை என்பது பேரறிவு!.. 
பெண்மை என்பது பெருஞ்செல்வம்!.. 
பெண்மை என்பது பேராற்றல்!..

சுந்தரி எந்தை துணைவி என்பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே!..{8}
அபிராமி அந்தாதி

ஓம் சக்தி ஓம்.
* * *

14 கருத்துகள்:

  1. நவராத்திரி சிறப்பு செய்திகள், படங்கள், கூத்தனூர் விழா விவரங்கள் எல்லாம் மிக அருமை.

    பெண்மையை போற்றும் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் - மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  2. நவராத்திரி விளக்கவுரையுடன் படங்கள் அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் அன்பு வருகையும் கருத்துரையும் - மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  3. நவராத்திரிப் பெரு விழா அறிந்தேன் ஐயா
    ஒரு காலத்தில் கரந்தையில், கந்தப்ப செட்டியார் சத்திரத்தில்
    ஆளுயர பொம்மைகளின் கொலு நடைபெறும், சிறு வயதில் பார்த்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நானும் சிறு வயதில் கரந்தை கந்தப்ப செட்டியார் சத்திரத்தில் கொலு அலங்காரங்களைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

      ஆனால் - இன்றைக்கு சத்திரமும் எதிரில் உள்ள வடவாற்றின் படித்துறையும் சொல்லும் தரத்தில் இல்லை.
      மீட்டெடுக்க முடியுமா!?..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் - மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  4. ஒன்பது தேவிகளின் நாமங்களையும் இட்டு
    அவர்கள் சிறப்புகளையும், வழிபடுதலால்
    மாந்தருக்கு கிடைத்திடும் அருள் பற்றியும்
    விளக்கமாக சொல்லியமைக்கு

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் தளத்தில் இந்த பதிவினை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  5. ஏற்ற தாழ்வின்றி கொள்வதும் கொடுப்பதும் நவராத்திரியின் மாண்பு!..

    நவராத்திரியின் சிறப்புகளை அருமையாக படங்களுடன்
    பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகையும் பாராட்டுரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நவராத்திரி குறித்து படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் அன்பு வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நவராத்திரி சிறப்புப் பகிர்வு மிகச் சிறப்பாக அமைந்து விட்டது.

    படங்கள் ஒவ்வொன்றும் அழகு. பாராட்டுகள் துரை செல்வராஜூ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் இனிய வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..