நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடிப் பதினெட்டு
அன்பினில் மனந்தொட்டு
ஆடிக் கொண்டாடிடுமே..
கார்முகில் கனங்கெட்டு
நெற்றியில் நீர்மொட்டு
ஏர்வழி நூறாகுமே..
காவிரிக் கரைதொட்டு
கழனியில் முளைகட்டு
கதிர்களும் விண்முட்டுமே..
ஓடிடும் நீர்தொட்டு
உதித்திடும் உயிர்கட்கு
ஓங்கிய பொருளாகுமே..
கூடிக் குளிர்ந்திட்டு
கோதையின் தமிழ்தொட்டு
கொண்டாடு பண்பாடியே..
சூழ்ந்திடும் இருள்கெட்டு
சூரியன் ஒளிபட்டு
வாழ்ந்திட வாழ்வாகுமே..
நாற்றினைக் கைதொட்டு
சேற்றினில் தான்நட்டு
காத்திடப் பொன்சேருமே..
பொன்மகள் கரந்தொட்டு
பொலிந்திடும் நலம்எட்டு
பூமீது புகழாகுமே..
காவிரிப் படிக்கட்டு
காதலின் கல்வெட்டு
கைவளை மொழியாகுமே..
கண்களின் மைதொட்டு
காவியம் பலகட்டு
தென்றலும் தூதாகுமே..
தீந்தமிழ்த் தேன்தொட்டு
தீவினை விலக்கிட்டு
விளக்கிட வழிகாணுமே..
வாழ்ந்தவர் தாள்தொட்டு
வாழ்வதில் இசைகொட்டு
குன்றேறிப் புகழ் வீசுமே..
***
நாடெங்கும் வாழ்க..
நலமெலாம் சூழ்க..
அனைவருக்கும்
ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ