காளியண்ணன்
***
வரவு செலவு எல்லாவற்றையும் கணினியில் பதிவு செய்தாயிற்று...
நாளைக்குக் காலையில் கொடுக்க வேண்டிய பொருட்களையும் எடுத்து வைத்தாயிற்று...
இந்த அளவில் இனி வேலை ஏதும் இல்லை... சரக்கறையின் கதவைப் பூட்டியாயிற்று...
எனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்து அந்தக் கதவையும் பூட்டினேன்...
மூன்றரை மணியைக் கடந்து நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது பொழுது..
குளிர்காலம் நெருங்குவதால் இளங்காற்று சாரலாக வீசிற்று...
ஒரு குவளை தேநீர் குடிக்கலாம்...
ஆனால், நாலரை மணிதான் Restaurant திறக்கப்படும் நேரம்...
இதோ சமையற்கூடத்தின் முன் வாசல்..
வெளிக் காற்றிலிருக்கும் தூசுகளும் இதர பூச்சிகளும் உள்ளே நுழைந்து
விடாதபடிக்கு Air Curtain இயங்கிக் கொண்டிருக்க இரண்டு அடுக்கு
பாதுகாப்புக் கதவுகள்...
அந்த முன் நடையின் கடைசியில் ஊழியர்களுக்கான ஓய்வு அறை - Looker Room..
பெயர் தான் அப்படியே தவிர யாரும் அங்கே சென்று அமர்ந்து விட முடியாது..
அத்துடன் இணைந்ததான கழிவறைகளையும் வெளிப்புறங்களையும் அவ்வப்போது சுத்தம் செய்வதற்காகவே ஒருவர்...
நாற்பதைக் கடந்தவர்.. நம்மூர்க்காரர்...
அங்கேயே அமர்ந்திருக்கிறார் - நாற்காலியில்..
அதுவும் ஒருபுறம் கால் உடைந்து கேட்பாரற்று இருக்கிறது..
அதில் தான் அவர் - காளியண்ணன் - முட்டு கொடுத்தபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்...
அவரை நோக்கி நடந்தேன்..
என்னைக் கண்டதும் எழுந்தார் காளியண்ணன்...
'' என்ன இது?.. உட்காருங்கள்!... '' - என்றபடி அவரை நெருங்கினேன் ...
சிநேகமான புன்னகையுடன் நெகிழ்ச்சியானார் காளியண்ணன்..
'' உள்ளே போய்ட்டு வாங்க... இப்போ தான் சுத்தம் பண்ணினேன்!... ''
'' நான் உங்க கிட்ட பேசறதுக்குத்தான் வந்தேன்!.. '' - என்றேன்..
'' எங்கிட்டயா?... என்கிட்ட பேசறதுக்கு என்ன இருக்கு?... ''
- காளியண்ணனுக்கு வியப்பு...
'' ஏன்?... உங்ககிட்ட பேசக்கூடாதா?... ''
'' அதுக்கில்லை சார்... '' - எதற்காகவோ கூச்சப்பட்டார்...
'' இந்த சார்... கீர்... எல்லாம் வேண்டாம்... சும்மா செந்தில்...னே
கூப்புடுங்க!... ''
'' இல்லை.. சார்... இருந்தாலும்... நீங்க ஸ்டோர் கீப்பர்.. படிச்சவங்க!... ''
'' அதெல்லாம் விடுங்க!... ''
'' சரி.. தம்பி..ன்னு கூப்புடவா?... ''
'' ம்.. இது நல்லாருக்கு!... '' - என்றேன் சிரித்தபடி
'' சொல்லுங்க.. தஞ்சாவூர்...ல எந்தப் பக்கம்?... '' - என்று கேட்டேன்..
'' திருவையாத்துல இருந்து மூனு மைல்... வயலும் வயக்காட்டு வேலையுமாத்தான் இருந்தேன்... பல மாதிரியா பிரச்னை... சாகுபடி கை விட்டுப் போச்சு... இந்த நாட்டுக்கு வந்து பத்து வருசமாச்சு... ''
'' இப்போ இந்தப் பாலை வனந்தான் வயித்துல பாலை வார்த்துக்கிட்டு இருக்கு... இருக்கேன்... நல்லபடியா இருக்கேன்... பெண்ணைக் கட்டிக் கொடுத்தாச்சு... பையன் படிச்சிக்கிட்டு இருக்கான்... இன்னும் ஒரு ரெண்டு மூணு வருசத்தைஎப்படியாவது ஓட்டிடணும்... ''
'' நான் மயிலாடுதுறை... அப்பா சாகுபடியப் பார்த்துக்கிறார்...
ஏதோ ஆசைப்பட்டு வந்தாச்சு... ''
'' கல்யாணம்?... ''
'' பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க!... ''
'' நடக்கும்... நடக்கும்... நல்லபடியா நடக்கும்!... '' - ஆதரவுடன் சொன்னார்..
'' நானும் ஒரு வாரமாப் பார்க்கிறேன்... Dinning Hall...ல இருந்து
சாப்பிடாம சாப்பாட்டை எடுத்துக்கிட்டு இங்கே வந்துடறீங்க!... ''
'' நம்மால யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது தம்பி!.. '' - என்றார்..
'' யாரும் எதுவும் சொன்னாங்களா?.. அந்த மாதிரி சொன்னா அது குற்றம் தெரியுமா!... ''
'' நீங்க சொல்றது சரிதான்... ஆனா நடப்பு வேற!.. இதெல்லாம் பேசறதுக்குத்தான் நல்லாருக்கும்.. நாம ஒதுங்கி இருந்தா அவங்களுக்குச் சந்தோஷம்... ''
'' நேத்திக்கு வந்த நீங்க கேக்கறீங்க... ஆனா, இந்த மேனேஜர்... அந்த ஆளும் தமிழந்தான்... இன்னை வரைக்கும் ஒரு வார்த்தை கேட்டதில்லை தெரியுமா?.. நான் இந்த இடத்துக்கு வந்து நாலு வருசம் ஆச்சு!... ''
'' அந்த ஆளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது.. என்ன காரணம்..ன்னு எனக்குத் தெரியலை!... ''
'' கக்கூஸ் உள்ள போய்ட்டு வெளியில வர்றப்ப - ஒரே அழுக்கா இருக்கு...
சுத்தம் பண்ணக் கூடாதா... ன்னு சும்மானாலும் சொல்லிட்டுப் போவாரு!... வெளியிலே இருந்து வர்றப்ப வாசல் எல்லாம் குப்பையா கிடக்கே!...சும்மா ஒக்காந்திருந்தா எப்படி... ந்னு எகத்தாளமா கேட்டுக்கிட்டு வருவாரு!... போயி பார்த்தா ஒன்னும் இருக்காது!...''
வீணாக அலைக்கழிக்கப்படும் வேதனை கண்களில் தெரிந்தது...
'' மினிஸ்ட்ரி ஆளுங்க வந்தா எல்லாம் சரியா இருக்கணும் இல்லையா...
அதுக்காகக் கூட சொல்லி இருக்கலாம் இல்லையா?... ''
'' உங்களுக்குத் தெரியாது தம்பி... இங்கே பங்களாதேஷ் காரன் கூடத் தான் கிளீனரா வேலை செய்றான்... அவனுங்க கிட்டயும் இந்த மாதிரி சொல்லணும் இல்லையா!... சொல்லமாட்டாரு!... ஏன்னா அவன் எதுத்துக் கேட்டுடுவான்... மேல போயி கொளுத்தி விட்டுடுவான்... அதுனால பயம்!.. ''
'' நாம அப்படியா?.. காலால சொன்னதை தலையால செய்றவங்களாச்சே!... நான் இங்க வந்ததுக்குக் கூட இந்த ஆளோட அநியாயந்தான் காரணம்... ''
'' எப்படி!?... '' - என்றேன் ஆச்சர்யத்துடன்...
'' டின்..ல இருந்து எண்ணெய் எடுக்கத் தெரியாத சமயக்காரன் ஒருத்தனால நான்
கிச்சன்.. ல வழுக்கி விழுந்துட்டேன்.. இடுப்புல பலமான அடி.. ரெண்டு மாசம் ஆஸ்பத்ரி... யில இருந்தேன்.. அவனுக்கு இருபது தினார் சம்பளம் ஜாஸ்தி ஆக்குனாரு... கிச்சன் கிளீனரா இருந்த என்னை கக்கூஸ் கிளீனரா மாத்திப் போட்டாரு.. எனக்கு ஈசியான வேலையா கொடுக்குறாராம்!... ''
'' இப்போ நான் கிச்சனுக்குள்ளே நுழைஞ்சி ஒரு வெள்ளரிப் பிஞ்சோ ஒரு கோழித் துண்டோ கேக்க முடியாது... ஒடனே ஹைஜீன்... ந்னு கத்துவானுங்க... ''
'' விடியக்காலை.. ல பல்லு விளக்காத பன்னாடைகளா வருவானுங்க பலபேரு.. அவனுங்களப் பத்தி எந்த பிரச்னையும் இல்லை.. நாம குளிச்சி முடிச்சி நெத்தியில பொட்டோட வந்தா - ஏய்!.. நீ அப்பிடி... நான்
இப்பிடி...ம்பானுங்க!... ''
'' இதையெல்லாம் ஒரு மேனேஜர்கிட்ட சொன்னா என்ன..ன்னு கேக்கணுமா வேணாமா?... கேக்க மாட்டான்!... அது தான் இங்கே பிரச்னையே... ''
'' நானும் போங்கடா தொலைஞ்சி!...ன்னு விட்டுட்டேன்!... ''
மனக்குமுறலை எல்லாம் கொட்டித் தீர்த்தார் காளியண்ணன்...
அதற்குள் Staff Restaurant திறந்தாயிற்று..
'' வாங்க... டீ சாப்பிடலாம்!.. '' - என்றேன்..
'' தம்பீ ... நீங்க முன்னால போங்க... நான் பின்னால வர்றேன்.. இங்கே பொலிட்டிக் வேலையெல்லாம் கூட நடக்குது... உங்களுக்குத் தெரியாது!.. '' - என்றார் மெதுவாக...
தேநீர் அருந்துவதற்காக சமையல் கூடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறிக்
கொண்டிருந்தார்கள்..
ஒவ்வொருவர் கையிலும் சிறு சிறு பிளாஸ்டிக் டப்பாக்கள்...
'' இதென்ன இது தேவையில்லாமல்!?...'' - எனக்கு ஆச்சர்யம்..
காளியண்ணன் சொன்னார்...
'' இன்னைக்கு ஆபீசர் மெனுவில சிக்கன் டிக்கா!... ''
'' ஆமாம்!... ''
'' ஆபீசர் கேம்புக்குப் போறதுல இருந்து ரெண்டு கிலோ கைமாத்து பண்ணி இவனுங்க திங்கிறதுக்குக் கொண்டு போறானுங்க!.. '' - என்றார்..
'' கை மாத்தா!?... ''
'' ஆமாம்.. இங்கே கை மாத்து..ன்னா களவு எடுக்கறது..ன்னு அர்த்தம்!... ''
'' இது மேனேஜருக்குத் தெரியுமா?.. ''
'' முதல் பிளேட் அந்த ஆளுக்குத் தானே!.. '' - தனக்குள் சிரித்துக் கொண்டார்...
'' நீங்க இதக் கண்டுக்காதீங்க!... இங்க இதான் வழக்கம்..
அப்படியே விட்டுடுங்க!.. ''
'' அப்போ இது எல்லா Staff க்கும் கிடைக்குமா!... ''
'' உங்களுக்குக் கிடைச்சதா?... ''
'' இல்லை!... ''
'' அதான்.. அதே தான்!... ''
'' நீங்க கேட்டா கொடுக்க மாட்டார்களா?... ''
'' கேட்டா அந்த பெரிய குக்கர் கத்துவான்!.. ''
'' இதோ வர்றேன்.. நீங்க Restaurant க்குப் போங்க!.. '' - என்று சொல்லி விட்டு Hair Net அணிந்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்தேன்...
Disposable Pack நிறைய கோழித் துண்டுகளை எடுத்துக் கொண்டு வந்து
காளியண்ணனிடம் கொடுத்தேன்...
'' சாப்பிடுங்க!... ''
'' உங்களுக்கு!?... '' - அவருக்கு ஆச்சர்யம்...
'' இன்னைக்கு வியாழக் கிழமை.. நான் சாப்பிட மாட்டேன்!...''
'' ஓ... இது வேறயா!.. நானும் இப்படித்தாங்க.. நல்ல நாள்.. பெரிய நாள்..னா கவுச்சி இல்லாம இருக்கணுமே..ந்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. பட்டினி கூட கிடந்திருக்கேன்... ரெண்டு வருசமா அந்தப் பிரச்னை இல்லாமப் போச்சு!... ''
'' எப்படி?.. ''
'' நாலாவது மாடியில மணி ஐயர் இருக்கார்..ல்ல!... ''
'' ஆமா... ''
'' அவரு ஹெட்டாபீஸ்..ல வேலை செய்றாரா!.. அதனால அவருக்குத் தனி ரூம்... அவரு கம்பெனி சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டாரு.. சாயங்காலம் வேலை விட்டு வந்ததும் சமைச்சி சாப்பிடுவாரு... விசேசம்.. ன்னா கூப்புட்டுக் கொடுப்பாரு!... ''
'' நாளைக்கு வெள்ளிக்கிழமையா... மூனு வேளையும் அவரு கூடத்தான்
சாப்பாடு... காலையிலயே ரூமுக்குப் போய்டுவேன்.... அவரு குளிச்சு
முடிச்சுட்டு வர்றதுக்குள்ளே கார்பெட்டுல மெஷின் போட்டுட்டு காபிக்கு
பால் வச்சிடுவேன்... குளிச்சிட்டு வந்ததும் விளக்கேத்தி வச்சி ரெண்டு
மந்திரம் சொல்லுவாரு... சந்தனம் குங்குமம் வச்சிக்கிட்டு சோபாவுல
உட்காருவாரு.. காபி கலந்து கொடுப்பேன்.. நானும் குடிப்பேன்...
அதுக்கப்புறம் காலை டிபன் எல்லாம் அவரு செய்வாரு.. நான் கூடமாட ஒத்தாசை செய்வேன்... நல்ல மனுசன்!... ''
'' அறையை எல்லாம் சுத்தம் செஞ்சு வை!... - ன்னு அவரு சொன்னாரா?... ''
'' இல்ல.. இல்ல... நானாத்தான் இஷ்டப்பட்டு செய்றேன்... அதெப்பிடிங்க ஒருத்தர் வீட்டுல சோத்தைத் தின்னுட்டு சும்மா வர்றது?.. நம்மால ஆனது ஏதாவது அவங்களுக்கு செய்ய வேணாமா!?.. ''
'' ஒனக்கேன்டா இந்த வேலை ... ந்னு தான் அவரு கேப்பாரு!... நீங்க ஒங்க வேலையப் பாருங்க ஐயரே...ன்னு நான் சொல்லிடுவேன்...
ரெண்டு வருசமா தீவாளிக்கு வேட்டி எல்லாம் எடுத்துக் கொடுக்குறாரு!... ''
காளியண்ணனின் கண்கள் கலங்கின...
'' பாலைவனத்துல பசுஞ்சோலை...ன்னு சொல்லுவாங்க!...அது மணி ஐயரு தாங்க... இவர மாதிரி இன்னொருத்தரும் இருந்தாருங்க!...அவரும் சைவ சாப்பாடு தாங்க சாப்புடுவாரு!.. ''
'' யார் அவர்!?.. ''
'' அவரு சூப்பர்வைசருங்க... தஞ்சாவூர்க்காரர்... செல்வகுமார்..ன்னு பேரு!...''
'' அவரு எங்கே இப்போ?.. ''
'' ஐயரு மாதிரியே அவரும் நல்ல மனுசன்.... அவருக்கு இவனுங்க குடைச்சல் மேலகுடைச்சல் கொடுத்துக்கிட்டு இருந்தானுங்க... போங்கடா சர்தான்...ன்னு வேற எடத்துக்குப் போய்ட்டாரு... ''
அப்போது தான் கவனித்தேன்... Restaurant க்குள் பத்து மேஜைகள் கிடந்தன.. ஒவ்வொன்றுக்கும் நான்கு நாற்காலிகள் என்றால் இரண்டு அதிகமாகக் கிடந்தன..
'' காளியண்ணன்!.. ''
'' என்னங்க.. தம்பீ!.. '' - உற்சாகமானார்..
''இங்கே இருந்து ஒரு நாற்காலிய எடுத்துக்கிட்டுப் போயி உங்க இடத்துல
போட்டுக்கிட்டு ஜம்..ன்னு உட்காருங்க!.. உடைஞ்சி போன நாற்காலியத் தூக்கி வெளியே போடுங்க!... '' - என்றேன்..
'' வேணாந்தம்பி... யாரும் எதும் சொல்லுவாங்க!.. பிரச்னை வரும்!.. '' - என்றார்..
'' வரட்டும்... பார்த்துக்கலாம்!.. ''
'' எதுக்குத் தம்பி... புது நாக்காலி எல்லாம்!.. ''
'' சொல்றதைச் செய்ங்க!... ''
மறுத்து ஒன்றும் சொல்ல முடியாமல் அங்கிருந்து ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு நடந்தார்..
சாய்ந்து கொள்ளத் தோள் ஒன்று கிடைத்த நம்பிக்கை காளியண்ணனின் நடையில் தெரிந்தது...
ஃஃஃ