நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 06, 2025

நிவேதனம் 3

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
மூன்றாம் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

அந்த வகையில் இன்று
புளியோதரை

தேவையான பொருட்கள்:

புளி, நல்லெண்ணெய்,
உலர்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,
மஞ்சள் தூள், கடுகு, வெந்தயம், கொத்தமல்லி விதை வேர்க்கடலை, பெருங்காயம், 
கறிவேப்பிலை, கல் உப்பு -

ஆகிய இவற்றை தக்க அளவில் எடுத்துக் கொண்டு அவரவர் விருப்பப்படி புளிக் காய்ச்சல் தயார் செய்து கொண்டு -

வாணலியை சூடாக்கி,  நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிதம் செய்து -

குழைந்து விடாமல் 
வடித்தெடுக்கப்பட்ட பச்சரிசி சாதத்தை தேவையான அளவு இட்டு முன்பே செய்து வைத்திருக்கின்ற புளிக் காய்ச்சலை விருப்பப்படி சேர்த்து நன்றாகக் கிளறி எடுத்தால் -

பாரம்பரிய புளியோதரை...

ஓம் ஹரி ஓம்
**

சனி, அக்டோபர் 04, 2025

புரட்டாசி 3

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
மூன்றாம் 
சனிக்கிழமை


இன்று
கோடிஹத்தி 
ஸ்ரீ ஸ்ரீ நிவாசப்பெருமாள் தரிசனம்..


வானமுட்டிப் பெருமாள் எனப்படுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள்..
தாயார் ஸ்ரீ மகாலக்ஷ்மி..

நின்ற திருக்கோலத்தில்  சேவை சாதிக்கின்றார்..

பிப்பல மகரிஷிக்கு தரிசனம்.. அவர் பெயரால் தீர்த்தம்.. அருகில் காவிரிக் கரை.

அத்தி மரத்தில் தோன்றிய பெருமாள் - சங்கு, சக்கரம், கதை, வரத அபய ஹஸ்தங்களுடன் பதினாறு அடி உயரம் கொண்டு பிரமாண்டமாகக் காட்சி தருகின்றார்..
எனவே தான் 
வானமுட்டிப் பெருமாள் என, செல்லப்பெயர்..

தொன்மையான பெயர்  - கோடி ஹத்தி விமோசனப் பெருமாள் என்பதாகும்.. 

கோடி ஹத்தி என்ற திருப்பெயரே இன்றைக்கு கோழி குத்தி என்றாகி விட்டது..

மன்னன் ஒருவனின் குஷ்ட நோயைத் தீர்த்து அருளியதாக ஐதீகம்..

புராதன கோயில் முற்றிலும் சிதைந்து விட தஞ்சை மராட்டிய மன்னர் காலத்தில் கோயில் மீண்டும் உருவாகியிருக்கின்றது..

அத்தி மரத்தில் திருவடிவம்..
அத்தி மரத்தின் வேர்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகச் சொல்கின்றனர்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த கோயிலுக்கு மானியங்கள் அளித்து, திருக்கோயில் பணிகள் செய்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன..
(நன்றி விக்கி)

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வானதிராஜபுரம் செல்லும் பேருந்துகள் கோயில் வழியாக செல்கின்றன..

கடந்த வருடங்களில்
மயிலாடுதுறைக்கு  
சில முறை
சென்றிருந்தும் இங்கு தரிசனம் செய்யும் பேறு 
இன்னமும் கிடைக்கவில்லை..

பெருமாளே சரணம் 
-::-

ஓம் ஹரி ஓம்
நமோ ஸ்ரீநிவாசாய
**

வெள்ளி, அக்டோபர் 03, 2025

வெள்ளி

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வெள்ளிக்கிழமை


பந்தாடு மங்கையர் 
செங்கயற் பார்வையிற் பட்டுழலும்
   சிந்தா குலந்தனைத் தீர்த்தருள்வாய் 
செய்ய வேல்முருகா
      கொந்தார் கடம்பு புடைசூழ் 
திருத்தணிக் குன்றில் நிற்கும்
  கந்தா இளங்குமரா 
அமராவதி காவலனே.. 79.. 
-: கந்தரலங்காரம் :-
 நன்றி கௌமாரம்


செம்மையான வேலாயுதத்தைத் தாங்கி அருளும் பெருமானே!

பந்துகளுடன் விளையாடுகின்ற அழகிய பெண்களின் கயற் கண்களில் 
அடியேன் அகப்பட்டு உழல்கின்ற  கவலையை -  இன்னலைப் போக்கிக் காத்திட வேணும்..  

பூங்கொத்துகளுடன் கூடிய கடம்ப வனம் சூழ்ந்திருக்கின்ற
திருத்தணி மலையின் மீது நின்றிருக்கின்ற கந்தனே குமரனே.. 


வானுலகத்தின் அமராவதி நகரினைக் காத்தருள்கின்ற பெருமானே!..
(தஞ்சையம்பதி
-::-
 
முருகா முருகா
ஓம் நம சிவாய 
**

வியாழன், அக்டோபர் 02, 2025

விஜயதசமி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
வியாழக்கிழமை


அனைவருக்கும்
ஸ்ரீ விஜய தசமி
நல்வாழ்த்துகள்


மனிதரும்  தேவரும்  மாயா முனிவரும்  வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.. 4

சுந்தரி எந்தை துணைவி  என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னயன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கை சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே.. 21


மணியே மணியின் ஒளியே  ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.. 24


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினிவாராகி சூலினி மாதங்கி என்று
ஆய கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி பட்டர் :-
-:-


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ் அடிமை
     செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
     கணக்காக வையாது நின் திரு உளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து, இனல் படாது, நல் வரம்அளித்துப் பாதுகாத்து அருள் செய்ய
     வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
     பதாம்புய மலர்ப் புங்கவி புராந்தகி புரந்தரி புராதனி
     புராணி திரிபுவனேசுவரி
மருந்தினும் நயந்த சொல் பைங்கிளி வராகி எழில்
     வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
     சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!.. (7)
-: அபிராமி பட்டர் :-


ஓம் சக்தி ஓம்
**

புதன், அக்டோபர் 01, 2025

கலைமகள் நவமி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை


இன்று 
ஸ்ரீ சரஸ்வதி பூஜை

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்

சகலகலாவல்லி மாலையைப் பாடி, 
ஸ்ரீ சரஸ்வதி தேவியை  வழிபட அன்னையின் அருள் கிடைக்கும் என்பது  நம்பிக்கை..


ஸ்ரீ குமரகுருபரர் அருளிச் செய்த
சகலகலாவல்லி மாலை
(சில பாடல்கள் மட்டும்)

வெண்தாமரைக்கு அன்றி நின் 
பதந்தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ 
சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக 
உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே 
சகல கலாவல்லியே. 1

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த 
கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் 
வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்
தொண்டர்செந் நாவில் நின்று
காக்குங் கருணைக் கடலே 
சகல கலாவல்லியே. 4

பஞ்சப்பி இதந்தரு செய்யபொற் 
பாதபங் கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே 
நெடுந் தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் 
செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசு ஒத்திருந்தாய் 
சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் 
தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுது எளிது எய்த 
நல்காய் எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் 
கனலும்வெங் காலும் அன்பர்
கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் 
சகல கலாவல்லியே. 6.

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவது மே சதா
 

நன்றி 
இணையம்

ஓம் சிவாய நம ஓம்
**