நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 01, 2024

குரு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
திரு ஓணம்
புதன்கிழமை

இன்று 
நடராஜர் அபிஷேகம்


அரியானை அந்தணர் தம் சிந்தையானை 
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழ் ஒளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/1.
-: திருநாவுக்கரசர் :-


நிகழும் குரோதி வருடம் சித்திரை 18  புதன்கிழமை (1/5) கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திருவோண நட்சத்திரம் கூடி விளங்குகின்ற நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியில் இருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் ஒரு மணியளவில் (மாலை 5 மணி) பெயர்ச்சியாகிறார்..

பிரகஸ்பதி எனும் இவர் தேவர்களுக்கு குருவாக - நவக்ரஹ மண்டலத்தில் விளங்குபவர்..

பொன்னன் என்ற சிறப்புடைய இவர் ஒருவர் மட்டும் தான் நவகிரகங்களில் முழு சுபக் கிரகமாகத் திகழ்பவர்..


புத்திகாரகன்.. நல்ல புத்திக்கு அதிபதி.. நல்ல புத்தியை அருள்பவர்..

சப்தரிஷிகளுள் ஒருவரான ஆங்கீரஸ முனிவருடைய மகனான இவர்
எண்ணற்ற யாகங்களைச் செய்து ஈசனை வணங்கி
தேவர்களின் குருவாக வரம் பெற்றார்.. 

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வதற்கு இவர் எடுத்துக் கொள்ளும் மாதங்கள் பன்னிரண்டு..

மீண்டும் ஒரு ராசிக்குள் பிரவேசிப்பதற்கு  பன்னிரண்டு வருடங்கள்.. இதுவே வியாழ வட்டம்.. 

குருவாகிய வியாழ பகவான் சிம்ம ராசியில் இருக்க, கும்ப ராசியில் (மாசி மாதத்தில்) சூரியன் இருக்க, மக நட்சத்திரமும், நிறை நிலவும் சேர்கின்ற நாளே மகாமகப் புண்ணிய நாளாகும்.. 

ஜோதிட இயலின்படி -
மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன  நட்பு
வீடுகள். 
கடகம் உச்ச வீடு.
தனுசு, மீனம் ஆட்சி வீடுகள்.. 
ரிஷபம் மிதுனம் துலாம் பகை வீடுகள்..

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரங்கள்..


குருவிற்கு அதிதேவதை பிரம்மன்..
இவருக்குரிய உலோகம் பொன்..
இவருக்குரிய ரத்தினம் புஷ்பராகம்.
தானியம் கடலை.. இவருக்குரிய நிறம் மஞ்சள் ..
முல்லையும் ஆம்பலும் இவருக்குரியவை..
இவரது வாகனம் யானை.
திசை - வடகிழக்கு எனப்படும் ஈசான்யம்..

ஒரு ஜாதகத்தில் குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஏற்படும்.. கம்பீரமான தோற்றம், புகழ், வெற்றி, நல்ல சுற்றம், நண்பர்கள், வீடு வாகனம் இவை குருவின் அருளால் அமைகின்றன..

குரு சரியாக அமையவில்லை எனில் - 
அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுவார்..
தெய்வ நிந்தனை விளையும்..
பெரியோர் சொல் கேட்காமல்   பொய் பேசுவார். உறவுகளுடன் பகை ஏற்படும்..

தீய பலன்கள் குறைந்து நல்ல 
பெருகுவதற்கு - குரு பகவானுக்கு உரிய வழிபாட்டினை 
சரியாகச் செய்தல் வேண்டும்..

எளியோர்க்கு - தான தர்மங்கள் செய்வது பரிகாரங்கள் ஆகும்..
(நன்றி - ஜோதிட மலர்)

ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு பொன் தானம் வழங்குவதும் 
கோயிலுக்கு மஞ்சள் தானம் செய்வதும் மஞ்சள் நிறத்தில் உடுத்திக் கொள்வதும்

மஞ்சள் நிற ஆடைகளையும் கடலையையும் எளியோர்க்கு தானம் கொடுப்பதும் வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும்   உகந்தவை.. 

வீட்டில் - குரு பகவானுக்கு என்று சுத்தமான நெய் தீபம் ஏற்றி முல்லை மலர்களுடன் வழிபடுதல் வேண்டும்..
முல்லை மலர் கிடைக்காத பட்சத்தில் நறுமணம் உடைய  மலரையும் எந்த சேர்த்துக் கொள்ளலாம்..

தென்குடித்திட்டை
குரு பகவான் சிவபெருமானை வணங்கிய தலம் - 
தஞ்சையை அடுத்து - தேவாரத் திருப்பதிகம் பெற்றதான,
தென்குடித் திட்டை ..

ஸ்ரீ குரு பகவான் - திட்டை
இங்கு அமைந்துள்ள ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக் கோயிலில் - சிவ மூலஸ்தானத்திற்கும்
அம்பிகை மூலஸ்தானத்திற்கும் நடுவில் - தெற்கு நோக்கி ராஜ குருவாக  சந்நிதி கொண்டுள்ளார்..

இவரது தலங்கள்:
திருச்செந்தூர், திருவலிதாயம்..

திருச்செந்தூரில் முருகப்பெருமானிடம் தேவர்களின் இன்னல்களையும்  சூரபத்மாதியரைப் பற்றியும் விவரித்துக் கூறியதாக புராணம்..

முருகப்பெருமானை வனங்குவதாலும் பிரம்மனை வனங்குவதாலும் பிரம்மன் வணங்கி நலம் பெற்ற சிவாலயங்களைத் தரிசிப்பதாலும் தேவகுருவாகிய குருபகவானின் அருளைப் பெறலாம்..

சிவ ஆலயங்களில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை சிவ திருக்கோலமாகவே வணங்க வேண்டும்.. வேறு விதமாக வணங்குதல் தகாது..

நிகழும் குருப் பெயர்ச்சியினால் அனைவரது வாழ்விலும் நன்மைகள் பெருகட்டும்..

பீஜ மந்திரம்
ஓம் பிரஹஸ்பதயே நம:

காயத்ரி
ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே 
க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு: ப்ரசோதயாத்

ஸ்லோகம்
தேவாணாம் ச ரிஷிணாம் ச குரும் 
காஞ்சன ஸந்நிபம் புத்தி பூதம் 
திரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஏப்ரல் 30, 2024

திருவீழிமிழலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 17
செவ்வாய்க்கிழமை



திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உரியதான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை உடனாய ஶ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா
சிறப்புடன் நடந்தது..

ஆறாம் திருநாளாகிய 
வியாழன்று (சித்திரை 5 ) மக நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில்,
ஞாயிறன்று திருத்தேரோட்டம்..

சித்திரை 8 ஞாயிறன்று (21/4) ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருமுன்னர் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது..

ஒளிப்படங்களை வழங்கியோர் - துறைசை ஆதீனம்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


















கயிலாய மலையுள்ளார் காரோணத்தார்
    கந்தமா தனத்துளார் காளத்தியார்
மயிலாடுதுறையுளார் மாகா ளத்தார்
    வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபாலமும்
    அமரும் திருக்கரத்தார் ஆனேறு ஏறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
    வீழி மிழலையே மேவினாரே.. 6/51/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஏப்ரல் 29, 2024

சப்த ஸ்தானம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
திங்கட்கிழமை

திருநெய்த்தானம்










மேலே உள்ள படங்கள் சென்ற ஆண்டு சப்த ஸ்தான வைபவத்தின் போது எடுக்கப்பட்டவை..

இன்றைய பதிவில் -
கீழுள்ள  காணொளிகளில் பல்லக்குகளின் மாண்பினைக் காணலாம்.. 

தில்லை ஸ்தானம் எனப்படுகின்ற திருநெய்த்தானம் கோயிலில் நடைபெற்ற தீப ஆராதனைகள்..

திருவையாறு நண்பர்களால் வழங்கப்பட்டவை.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..





ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
    திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஏப்ரல் 28, 2024

சப்த ஸ்தானம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
ஞாயிற்றுக்கிழமை


சித்திரை 13 வெள்ளிக்கிழமை
அன்று (26/4) திரு ஐயாறு சப்த ஸ்தானப் பெருவிழாவின் இரண்டாம் நாள்.. திரு நெய்த்தானத்தில் தரிசனம்..

மேலை வானில் இறங்குகின்ற வரையில் தகித்துக் கொண்டிருந்தது வெயில்.. நிழல் மரங்கள் அகற்றப்பட்டுவிட்ட
சூழ்நிலையை அனுசரித்து முன்னிரவுப் போதில் பல்லக்குகள் அனைத்தும் சிவாலய தீப ஆராதனைக்குப் பின் திரு ஐயாறு நோக்கிப் புறப்பட்டன.. 

வழி நெடுக எட்டுப் பல்லக்குகளுக்கும் அர்ச்சனை ஆராதனை செய்து மகிழ்ந்தனர் மக்கள்..

பல்லக்குகளின் தரிசனம் இன்றைய பதிவில்..

படங்கள் : தஞ்சையம்பதி

காணொளி:
ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்..

















காணொளி வழங்கியவர் தமக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி உரிமூடிய ஒருவன்
செய்யாடிய குவளை மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே.. 1/15/1
-: திருஞானசம்பந்தர் :-
*

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***