நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2026

அந்நாளில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 
செவ்வாய்க்கிழமை


 1919 ல்  ஆங்கிலேய நிர்வாகத்தின் வரைபடம்..

அந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியா
 தமிழகம், கர்நாடகா , கேரளா, ஆந்திரா என விளங்கியது..

இதில் சேராமல் மைசூர் சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் சமஸ்தானம் ஆகியவை  தனியாக இருந்தன.

மெட்ராஸ் மாகாணம் எனப்பட்ட தமிழகத்தின் பகுதிகள் ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த ஜில்லாக்கள் :-

வட ஆற்காடு
தென் ஆற்காடு 
தஞ்சாவூர் திருச்சி 
மதுரை ராமநாதபுரம் 
திருநெல்வேலி 
கோவை நீலகிரி 
செங்கல்பட்டு 
சென்ன என்பன..

இன்றைய பதிவில்
அந்நாளைய 
தென்னகத்தின் வரைபடம்.. 
 
நன்றி Fb


வாழ்க நலம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2026

ராகுவும் கேதுவும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 
ஞாயிற்றுக்கிழமை


 ராகுவும் கேதுவும்

தயாநிதி வீரராகவன்

நன்றி Fb

தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமம். 

அங்கு இளம் விவசாயி ஒருவர்.. 

மாதவன் என்று பெயர் . 

நிலம் இருக்கு, தண்ணீர் இருக்கு, உழைக்கவும் தெம்பு இருக்கு. ஆனால் மூன்று வருஷமாக விளைச்சலே இல்லை.

ஜாதகத்தை எடுத்துக் கொண்டு
ஊர்  ஜோதிடரிடம் ஓடினான். 

ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொன்னார், 

" உனக்கு ராகு தோஷம். ராகு வயலை மறைக்கிறான். 50,000 ரூபாய்க்கு பரிகார பூஜை பண்ணனும்."

மாதவன் வீட்டில் இருந்த கொஞ்ச நகையையும் விற்று பூஜை பண்ணான். மறு வருஷமும் விளைச்சல் இல்லை.

கோபத்துடன் இன்னொரு பெரிய ஜோதிடரிடம் சென்றான். 

அவர் சொன்னார், "இது ராகு இல்லை, கேது.. உன் நிலத்தை கேது பிடிச்சிருக்கு.. இன்னொரு பரிகாரம் பண்ணனும்."

மாதவனுக்கு வெறுத்து போச்சு.

நேராக ஆத்தங்கரையில் உட்கார்ந்திருந்த கோயில் குருக்களிடம்  சென்றான். அவர் ஜாதகம் பார்க்க மாட்டார்.. மனுஷங்களை மட்டும் பார்ப்பார்.

மாதவன் கத்தினான்..

"சாமி, என் ஜாதகத்துல என்ன தோஷம் இருக்குன்னு பார்த்து சொல்லுங்க. ராகுவா, கேதுவா?."

குருக்கள் அவன் ஜாதகத்தை வாங்கினார். ஒரு நிமிஷம் பார்த்தார். அடுத்த நிமிஷம் அதை இரண்டாகக் கிழித்து வாய்க்காலில் வீசி விட்டார்.

மாதவனுக்கு உலகமே இருண்டு போச்சு. 

"என்ன சாமி இப்படி பண்ணிட்டீங்க!.."

குருக்கள் சிரித்தார்..

" தோஷம் ஜாதகத்துல இல்ல.. மாதவா... உன் பழக்கத்துல இருக்கு.. மூனு வருஷமா நீ என்ன செய்தாய் ? புதுசு புதுசா விதை  வாங்கி விதைச்சு யூடியூப் - ல பார்த்துப் பார்த்து புதுப்புது மருந்தா அடித்தாய்.. ஊர் முழுக்க ஜோதிடரை தேடி அலைந்தாய் .. ஆனா, உனக்கு அடுத்த நிலத்து ராமு என்ன பண்ணான் தெரியுமா?  தினமும் காலையில அஞ்சு மணிக்கு வயலுக்கு போறான். மண்ணைப் பார்த்து. வரப்பை சரி செஞ்சான்.. ஒரே பயிரை சாகுபடி பண்ணி பொறுமையா பார்த்துக்கிட்டான்."

"ராகு உன் நிலத்தை மறைக்கலடா.. பொறுமை இல்லாத்தனம் தான் உன் கண்ணை மறைச்சிருக்கு. கேது உன் வயலை பிடிக்கல, நீ யூடியூப் பேச்சை கேட்டுட்டு மாத்தி மாத்தி செஞ்சது தான் உன் வயலை பிடிச்சிருக்கு."

"ஜோதிடம் என்பது வானிலை அறிக்கை மாதிரி. மழை வரும்னு சொன்னா, நீ குடைய எடுத்துட்டு போகணும். மழையை நிறுத்த பூஜை பண்ணக்கூடாது."

மாதவனுக்குப் புரிந்தது.. பரிகாரம் தேடுவதை நிறுத்தினான்.

அடுத்த ஆறு மாதம் ஜோதிடம், யூடியூப் என்று எதையும் பார்க்கவில்லை. 

தினமும் வயலில் இருந்தான். மண்ணைப் புரிந்து கொண்டான்.

அந்த வருஷம்  கிராமத்திலேயே அதிக விளைச்சல் அவனுக்கு தான் கிடைத்தது.

ஜாதகத்தை கிழித்த குருக்களிடம்  ஓடிச் சென்று சொன்னான் -

"சாமி.. ராகு தோஷம் போயிடுச்சு!"

குருக்கள் சொன்னார்..

"ராகு எங்கேயும் போகலடா. அவன் அங்கே தான் இருக்கான். அவன் உனக்கு தோஷத்தை கொடுக்க வரல, புதுசா ஒரு பாடத்தைக் கத்துக்  கொடுக்க வந்தான். நீயும்  கத்துக்கிட்ட.. அவ்வளவு தான்."

***

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2026

கிருத்திகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 22
வெள்ளிக்கிழமை

ஆடிக்கிருத்திகை


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ... தனதான


அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ... துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி
கௌமாரம்

முருகா முருகா
***

வியாழன், ஆகஸ்ட் 06, 2026

சங்கொலி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 21
வியாழக்கிழமை


குருஷேத்ர களத்தில் பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னதாக ஆறு சங்குகள் ஒலித்தன.. 

அந்த ஆறு சங்குகளின் பெயர்கள்.. 

1. பாஞ்சஜன்யம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடையது
வெண்ணிறத்தில் மின்னல் ஒளியுடன் இடி போல  ஒலிக்கும்... இந்த சங்கின் சத்தம் கேட்டாலே அதர்மம் நடுங்கும்..

2. அனந்தவிஜயம் : தருமருடையது
வெளிர் நீல நிறத்தில் அமைதியாக ஒலிக்கும் இது, முடிவில்லாத வெற்றியைக் குறிக்கும்.

3. பௌண்ட்ரம் : 
பீமனுடையது
பார்க்கவே பயங்கரமாக நெருப்பைப் போல ஜொலிக்கின்ற பிரமாண்டமான சங்கு இது. பீமனின் பலத்தை போலவே இதன் சத்தமும் அதிர வைக்கும்.

4. தேவதத்தம் : அர்ஜுனனுடையது
தங்க நிறத்தில் ஜொலிக்கும் இது, வெற்றியின் அடையாளம். இதன் ஒலி எதிரிகளுக்கு பயத்தை கொடுக்கும்.

5. சுகோஷம் : நகுலனுடையது
இனிய இசை போல ஒலிக்கின்ற வெள்ளிச் சங்கு. இதன் சத்தம் நல்ல செய்தியைக் கொண்டு வரும்.

6. மணி புஷ்பகம் : சகாதேவனுடையது
நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தச் சங்கின் ஒலி, ஞானத்தையும் செல்வத்தையும் குறிக்கும். 

நன்றி
மகாபாரதம் Fb

ஓம் ஹரி ஓம்
***

திங்கள், ஆகஸ்ட் 03, 2026

ஆடிப்பெருக்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 18
 திங்கட்கிழமை
மங்கல நாள்


அனைவருக்கும்
ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துகள்..
 

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில் நுழைந்து கூர்வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே.. 1/130/3

சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளுக்குள் நுழைந்து கூரிய அலகுகளால் தமது இறகுகளைக் கோதி - குளிர் நீங்கப் பெற்று பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைதனைத் தேடும் இடம் திரு ஐயாறு - என்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்..

திரு ஐயாற்றின் இத்தகைய வளத்திற்குக் காரணம் காவிரி..

அணைகள் திறக்கப்படாததால் 
தஞ்சை வள நாட்டின் ஜீவநாடியான காவிரியில் தண்ணீர் இல்லை..

தஞ்சையில் இருந்து திரு ஐயாறு வரைக்கும் உள்ள ஐந்து ஆறுகளும் வானம் பார்த்திருக்கின்றன.  
வெண்ணாற்றுப் படுகையில் மட்டும் ஏதோ கொஞ்சம்  தண்ணீர்... அதுவும் இன்னும் சில  நாட்களில் வற்றிப் போகும்...

பழி பாவங்கள் மிஞ்சிப் போனதால் காவிரி வறண்டு கிடக்கின்றாள்.. 

ஆற்று நீர் பாசனம் தொடங்கப்படவே இல்லை.. 

அடுத்த சாகுபடிக்கு முன்னதாக காவிரியாள் தந்த வயல்வெளிகளை வீட்டு மனைகளாக்கி விடவேண்டும் - என, முனைந்திருக்கின்றனர்.

ஆடிப்பெருக்கும் அதனை ஒட்டிய விழாக்களும்  விடை இன்றி தவிக்கின்றன...

ஒன்றும் சொல்வதற்கில்லை...



கூடிய விரைவில் 
காவிரியாள் தடைகளைக் கடந்து 
பொங்கி வருவாளாக..
புது வெள்ளமெனப் பெருகி வருவாளாக..

காவிரிப் பெண்ணே வாழ்க  - உன்
காலடி மலர்களும் வாழ்க வாழ்க..
***