நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 06, 2026

சேற்று நண்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 ஞாயிற்றுக்கிழமை


சுற்றுப்புறச் சூழலில் கவனம் வைத்திருப்பது ஒரு கலை... 

அது எல்லாருக்கும் கை கூடி வருவதில்லை..

இந்தப் பதிவு எதற்கு என்று ஸ்ரீராம் அவர்களுக்குத் தெரியும்..

தாமிரபரணியுடன் சிற்றாறும் கயத்தாறும் கலக்குமிடமே முக்கூடல்..

இவ்விடத்தில் எழுந்ததே  முக்கூடற்பள்ளு....

இதில் காட்டப்பட்டிருக்கின்ற மழைக் குறிகள்...

ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல்
சூழ மின்னுதே..

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்று அடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே..

சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்றடைக்குதே - மழை
தேடியொரு கோடி வானம்
பாடி ஆடுதே..

போற்று திருமால் அழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே...


ஆற்றில் நாளை வெள்ளம்  வரப்போகின்றது, அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகின்றன.

மலையாள  திசையிலிருந்தும், ஈழத் திசையில் இருந்தும் மின்னல்கள்  மின்னுகின்றன.

நேற்றும் இன்றும்  பலத்த காற்று சுழன்றடிக்கிறது.
கிணற்றுத் தண்ணீரில் கிடக்கும் சொறித்தவளைச் சத்தமிட்டு மழை வரப்போகும் செய்தியை மக்களுக்குச் சொல்கிறது.

மழையினால் வெள்ளம்  நிரம்பினால் சேற்று நண்டு என்ன ஆகும்? 
அதற்காக அந்த நண்டு முன்னெச்சரிக்கையாக அந்தச் சேற்றை கொண்டே தன்னுடைய வளையை அடைத்துக் கொள்கிறது.

மழையைத் தேடி ஒரு கோடி வானம்பாடி பறவைகள் விண்ணில் மகிழ்ச்சியாகப் பாடித் திரிகின்றன.

எல்லோரும் போற்றி வழிபடுகின்ற அழகர் கோயில்  பண்ணைச்  சேரியில் சேர்ந்து வாழ்கின்ற மக்களாகிய நாம் அனைவரும் மழையை வரவேறறுப் பாடுவோம், துள்ளித் துள்ளி ஆடுவோம்...

பிறத்தியான் வந்த பிறகு தான் கல்வி கிடைத்தது என்று அடி வருடிகள் சொல்வதற்கு முன்பே நண்டு சேற்றைக்  கொண்டு வளையடைக்கத் தெரிந்து வைத்திருக்கின்றது...

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கிய வகை...

இதனை இயற்றியவர் யார் என்று தெரிய வில்லை....

 நலம் வாழ்க
***

வெள்ளி, செப்டம்பர் 04, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை


மூடிக்கிடந்த கோயில் கதவுகளை திருநாவுக்கரசர் திறக்கவும்
ஞானசம்பந்தப் பெருமான் அடைக்கவும் பாடியருளிய
திருமறைக்காடு தலத்தில் சுந்தரர் பாடியருளிய
திருப்பதிகத் திருப்பாடல்.

யாழைப் பழித்தன்ன மொழி
  மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
  வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழில் ஊடே சென்று
  பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்கு
  உண்ணும் மறைக்காடே... 7/71/1

யாழிசையைப் பழித்த  சொற்களை உடைய மங்கையை ஒரு பாகத்தில் உடையவனும், பேழை போன்ற சடைமுடியில் பிறை நிலவைச் சூடினவனும் ஆகிய இறைவனே...

உனது இருப்பிடத்தை அறிந்து வழிபட வேண்டின், 

அது, எளிய குரங்குகள் தாழம் புதர்களின் இடுக்கு வழியே, வாழைத் தோட்டத்தின் உள்
நுழைந்து, அங்கே  கனிந்திருக்கின்ற வாழைப் பழங்களைப் பறித்து உண்கின்றதான திருமறைக்காடு அல்லவா!..

இன்று
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்


க்ருஷ்ணாய வாசுதேவாய
கோவிந்தாய ஹரி ஓம்

ஓம் சிவாய நம ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 01, 2026

நலம் வாழ்க

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
செவ்வாய்க்கிழமை


மறுநாள் திங்களன்று காலை திருச்செந்தூரில் இருந்து  புறப்பட்டு பகல் பதினோரு மணியளவில் உவரி கோயிலை வந்தடைந்தோம்...

உச்சிப் போதில் ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனுக்கும் ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடஸ்வாமி, ஸ்ரீ இசக்கியம்மன் ஆகிய மூர்த்திகளுக்கும்  பரிவார தேவதைகளுக்கும்
அலங்காரத்துடன் பஞ்ச முக தீப ஆராதனை நடந்தது...

நள்ளிரவு ஒரு மணிக்கும் இவ்வாறே நிகழ்ந்தது...


மறுநாள் செவ்வாய்க்கிழமை நண்பகலில் சாமி அழைப்பு... 

அக்னி சட்டி ஏந்தி வந்த சாமி, எல்லாக் குறைகளையும் தீர்த்து வைக்கிறேனப்பா... என்றது..

இவ்வாறே நள்ளிரவு ஒரு மணிக்கு சாமி அழைத்த போதும் நான் துணைக்கு இருக்கிறேன்.. கவலைப் படாதேப்பா... என்றது...

மறுநாள் புதன்கிழமை உச்சிப் போதில் கொதிக்கின்ற மஞ்சள் நீரில் விளையாட்டு..

கொதிக்கின்ற மஞ்சள் நீரில் விளையாடி வந்த சாமி - தான் அணிந்திருந்த  மல்லிகை மாலையுடன் குங்குமம் கொடுத்து ஆசி நல்கியது..

இதுவே மகாப்ரசாதம்...

புதன்கிழமை மதியத்துடன் கொடை விழா நிறைவு  பெற்றது..

வியாழனன்று பௌர்ணமி.
நிறை நிலா நாளில் குல தெய்வத்தின் கோயிலில் தங்குவது சிறப்பு என்பதால் அங்கே இரவு தங்கி விட்டு வெள்ளியன்று மாலை தஞ்சைக்குத் திரும்பினோம்...

மூன்று நாட்களும் ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி பக்தர் பேரவையினர் அன்னதான உபசரிப்பு வழங்கினர்..

கடற்கரைக் கோயில் என்பதால் ஒருநாள் சிறிது நேரம் மட்டும் கடல் அருகே நின்றிருந்தேன்...

பதிவிலுள்ள இரண்டு படங்களும் எனது தம்பி எடுத்தவை...

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மகா தீப  அலங்கார ஆராதனைகளைப் படம் எடுக்க இயலவில்லை...

இந்த அளவுக்கு எல்லாம் சிறப்பாக நடந்ததே மகிழ்ச்சி...

வேதனை தருகின்ற 
முழங்கால் வலி விரைவில் சரியாக வேண்டும்...

அன்றைக்கு நினைவின்  பிழையால் விடுபட்டிருந்த தஞ்சை  ஜம்புலிங்கம் ஐயா, கரந்தை ஜெயக்குமார், அன்பின் கில்லர் ஜி, குமார் ஆகியோரையும் இத்தருணத்தில் நினைவில் கொள்கின்றேன்..

2022 ல் திருச்செந்தூரிலும் உவரியிலும் நான் எடுத்த ஒளிப்படங்களை வரும் நாட்களில் மீண்டும் பதிவில்  தருகின்றேன்...

 நலமும் வளமும் 
இறையருளால்
அனைவரது வாழ்விலும்
பொலிவதாக!..
***