நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 13, 2025

இயற்கை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 30
செவ்வாய்க்கிழமை

காணக் கிடைத்த கருத்தில் இருந்து இந்த ஆக்கம்..


குடமுருட்டி ஆற்றுக்கு வடகரை..

இரண்டு காணி அளவுக்கு தோப்பு..
நிருதி மூலையில் வேப்ப மரம்..

 வேப்ப மரத்தை அடுத்து கிணறு.. 

சற்று தள்ளினாற் போல மா மரம்.. அதன் நிழலில்  தெற்கு பார்த்த கூரை வீடு.. வீட்டுக்குள் ஐந்தாறு மட் பாண்டங்கள் அகப்பைகள்..

பூசைப் பெட்டி..
அதற்கு அருகில் காமாட்சி விளக்கு ஒன்று..

இரவுப் பொழுதுக்காக அரிக்கேன் விளக்குகள் சில..

காணியைச் 
சுற்றிலும் கிளுவை மரங்களும் மூங்கில் வேலியும்.. 
வேலிப் படலில் இப்போதைக்கு பாகல் கொடி ..

இருந்தாலும் கால சூழ்நிலையில் பீர்க்கும் படரும்..
சுரையும் படரும்..

வாசலின் அருகாக  நன்றியுள்ள நாய் ஒன்று.

அந்தப் பக்கமாக தொழுவம்.. வைக்கோல் போர்..

பால் பீய்ச்சுவதற்கு ஒரு பசுவும் அதன் கன்றும்.. கூடுதலாக
பத்து ஆடுகள்..

சந்தைக்குப் போவதற்கும் வருவதற்குமாக பார வண்டி ஒன்று..

இரண்டு மாடுகள் 
உழவுக்கும் மற்ற வேலைகளுக்கும்..

ஒரு ஏர் கலப்பை... சின்னதும் பெரியதுமாக இரண்டு மண் வெட்டிகள்... மூங்கில் கூடைகள்..

மூலையில் இருக்கின்ற எருக் குழிக்குள் எருவைக்  கிளறிக் கொண்டு ஒரு சேவல்.. கூடவே
ஐந்து கோழிகளும் அவற்றின்  குஞ்சுகளும்...

வீட்டைச் சுற்றிலும் பத்துப் பதினைந்து  தென்னை மரங்கள்...
கீழ்ப்பக்கத்தில் தென்னைக்கு  அருகில் முருங்கை மரம். கறிவேப்பிலைச் செடி..

பக்கத்தில் பத்து வாழை மரங்கள்..
வாழையைச் சுற்றிலும்  தானாகவே தழைத்து வளரும் கீ்ரைச் செடிகள்...

பண்ட பாத்திரம் கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகள்... மீதமுள்ள இடத்தில்  கம்பும் சோளமும்...

விளைச்சல் வீட்டிற்குள் இருக்கும் தானியக் குதிருக்குள்..

நோயும் பிணியும் நெருங்கியதே இல்லை..

ஆகச் சிறந்த  தற்சார்பு வாழ்க்கை..

இப்படியும் இருந்தது
 நம்மிடத்தில்..

அதைத் தொலைத்து விட்டு வெகு தொலைவிற்கு வந்து விட்டோம் நாம்.. 

வாழ்க நலம் 

நமக்கு நாமே
சொல்லிக் கொள்ள வேண்டியது தான்

ஓம் சிவாய நம
**

8 கருத்துகள்:

  1. அங்குக்
    கேணியருகினிலே - தென்னைமரம்
    கீற்று மிள நீரும்,
    பத்துப் பனிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும் - நல்ல
    முத்துச் சுடர்போலே - நிலாவொளி
    முன்பு வரவேணும்; அங்குக்
    கத்துங் குயிலொசை - சற்றே வந்து
    காதிற் படவேணும்; - என்றன்
    சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
    தென்றல் வரவேணும்
    பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
    பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
    கூட்டுக் களியினிலே - கவிதைகள்
    கொண்டுதர வேணும் - அந்தக்
    காட்டு வெளியினிலே - அம்மா நின்றன்
    காவலுற வேணும்; - என்றன்
    பாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்

    பாரதியின் ஆசையும் இதுவாகத்தான் இருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகாகவியின் பாடலைப் பதிவு செய்தமைக்காக மகிழ்ச்சி...

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. என்ன ஒரு வாழ்க்கையாக இருந்திருக்கும் அது.. தன்னிறைவான வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. தொலைத்தவற்றை மீட்டுப் பார்ப்பதில் சுகமே.

    படமும் அவ்வாழ்க்கையின் நினைவுகளும் கண்முன்னே வந்துபோனது. சிறுவயதில் கிராமத்தில் அக்கம்பக்கம் ஆறேழு வீடுகளும், மூன்று நான்கு காணிகளும் எமது விளையாட்டு இடங்களாக இருந்தன.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  4. கிராமத்து வீட்டின் அழகை கொல்லைப்பக்கம் சிறிய தோட்டம் வீட்டுக்கு வேண்டிய காய்கறிகள் போட்டு கொள்வது என்று
    இருப்பார்கள். உரம் அடிக்காத காய்கள் ஆறிக்கியம் தந்தன

    உங்கள் உடல் நிலை சரியாகி விட்டதா?
    நலம் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..