நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 26
வெள்ளிக்கிழமை
மகிஷாசுரனின் கொடுமைகளைத் தாங்க இயலாத தேவர்கள் கண்ணீர் சிந்தியபடி எல்லாம் வல்ல பரம்பொருளைச் சரணடைந்து நின்றனர்..
அவர்களது துன்பங்களைக் கண்டு மனம் இரங்கிய திரிபுர சுந்தரி ஆகிய அம்பிகை - வாலை - சின்னஞ்சிறு பெண் எனத் தோன்றி நின்றாள்..
அவளைக் கண்டதும் மேலும் குழப்பம் எய்தினர் தேவர்கள்..
இவளா!..
இந்தப் பெண்ணா அக்கொடியவனை மாய்க்கப் போகிறாள்?..
தேவேந்திரன் வழக்கம் போலத் தடுமாறினான்...
சின்னஞ்சிறு பெண்ணால் தான் தனக்கு முடிவு என்பது மகிஷன் கேட்டிருக்கின்ற வரம் என்பதை தேவேந்திரன் மறந்திருந்தான்..
அவள் -
சின்னஞ்சிறு பெண்ணாகச்
சிற்றாடை இடையுடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே
வீற்றிருக்கும் ஸ்ரீ துர்கை!..
- என்பதனை தேவேந்திரன் உணர்ந்தானில்லை..
சின்னஞ்சிறு பெண்ணாக மலர்ந்திருக்கும் ஸ்ரீ துர்கை - சீற்றம் மிகவாகி
சிந்தூர வண்ணம் கொண்டாள்..
சிம்மம் வாகனம் என்றாயிற்று..
சிரித்தான் மகிடன்.. தனது சிரம்
அறுபடப் போவதை அறியாமல்...
ஆணவம் அவனை ஆட்கொண்டது..
அண்ட பகிரண்டமும் நடுக்கத்துடன் நடக்கப் போவதைப் பார்த்திருக்க பெரும் போர் மூண்டது..
மாயையில் உதித்த மகிடனின் வேலைகள் மகாமாயையிடம் செல்லுபடியாகவில்லை..
மகிடனின் அறியாமையைக் கண்டு மீண்டும் புன்னகைத்த அம்பிகை பேருருக் கொண்டாள்..
பதினெட்டுத் திருக்கரங்களுடன் நின்றாள்...
அத்தனை திருக்கரங்களிலும் விவரிக்கொணாதபடிக்கு ஒளி ததும்பும் ஆயுதங்கள்..
பெருங் கர்ஜனையுடன் பாய்ந்த சிங்கத்தைக் கண்டு மனம் பதைத்த மகிடன் மண்ணில் வீழ்ந்தான்...
தேவியின் திரிசூலம் தீயோனின் நெஞ்சைப் பிளந்து கொண்டு உள் நுழைந்தது..
அடியார்களுக்கும் ஆலயங்களுக்கும் அடாததைச் செய்தவன் அடங்கிப் போனான்.. அழிந்து போனான்..
அக்கினி விழிகளால் அவனைச் சுட்டு சாம்பலாக்கி இருப்பாள் தான்.. ஆனல் அவன் ஈசன் எம்பெருமானிடம் வரங்களைப் பெற்றவன்.. மேலைத் தவத்தால் வையம் துரகம் மதகரி மகுடம் என மேன்மை மிகு சின்னங்களைத் தாங்கி - அசுரர் குழாங்களைக் கூட்டிக் கொண்டு அவர் தமக்குத் தலைவன் என்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தவன்..
பெண்களைத் தவறாக நினைத்தவன்.. மங்கல மங்கையரை மதிக்க மறந்தவன்..
தாள முடியாதபடிக்குக் கோபம் பொங்கியது துர்காம்பிகைக்கு..
" டேய்!.. "
- பேரிரைச்சலுடன் மகிடனின் தலை மேல் தனது பத்ம பாதங்களைப் பதித்தாள் - அந்தரி நீலி அழியாத கன்னிகை..
இதையெல்லாம் கண்ட தேவர்கள் நடுநடுங்கிப் போயினர்..
நாங்களும் தாங்கினோமே ஆயுதங்களை!.. - என்று மனம் வெறுத்து ஆயுதங்களைத் துறந்தனர்..
நிராயுதபாணியாக நிமலையின் பாதக் கமலங்களில் சரணம்.. சரணம் என்று விழுந்தனர்..
மண்ணும் விண்ணும் பதைபதைத்து பதுமைகளாகி நின்றன.
பஞ்ச பூதங்களும் செயலற்று சிலைகளாகித் தவித்தன..
இதைத் தான் கொலு எனக் கொண்டாடிக் களிக்கின்றோம்..
இதையெல்லாம் கண்டு நகைத்த புவனேஸ்வரி அவர்களை மீண்டும் பணி செய்யப் பணித்தாள்..
அமரர்கள மீண்டும் தத்தமது ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டு அவையெல்லாம் அம்பிகையின் அருட் பிரசாதங்கள் என்று பூஜித்து வணங்கி தலைமேற்கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்..
இதையே நாம் ஆயுத பூஜை என்கின்றோம்..
மகிடனின் தலைமேல் அம்பிகை திருவடிகளை வைத்திருந்த போது தேவேந்திரன் விண்னப்பித்துக் கொண்டான்..
" தாயே.. இவனைப் பாதாளத்தில் அழுத்தி அழித்து விடாதீர்கள்... பாருலகுக்கு இவனுமொரு பாடமாக அமையட்டும்!. "
மகிடனின் முண்டம் ஸ்ரீ துர்க்கையின் திருவடிக்குக் கீழ் இருக்க -
மற்ற தண்டங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போயின..
மகிடன் இன்றும் பாருலகிற்குப் பாடமாகத் தான் இருக்கின்றான்..
நாம் தான் படித்துக் கொள்ள வில்லை...
அன்னை கிளியுடன் கொஞ்சிக் கொண்டு சாந்த ஸ்வரூபினியாக இருந்தாலும்
அவளது ஆயுதங்கள் அனைத்தும் இன்னமும்
முனை மழுங்காமல் தான் பளபளத்துக் கொண்டிருக்கின்றன..
ஃஃஃ
ஓம் சக்தி ஓம்
ஓம் சிவாய நம ஓம்
ஆஹா... என்ன ஒரு டைமிங்கான பதிவு.. புரிந்தது.
பதிலளிநீக்குஅன்னையைப் பணிவோம். அருளெல்லாம் பெறுவோம்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
அகிலம் ஆளும் அம்பிகையின் வீரதீரம் கண்டோம்.
பதிலளிநீக்குஅவள்பாதம் பணிந்து வணங்குவோம்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
சின்னஞ் சிறு பெண் பாட்டுக்கு விளக்கம் அருமை.
பதிலளிநீக்குஅன்னையின் பெருமையை புகழ்ந்து பணிவோம்.
தங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்துரையும் மகிழ்ச்சி..
நன்றியம்மா