நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 09, 2023

நலம் வாழ்க


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 23
 சனிக்கிழமை

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கரந்தை
திருப்பதிகப் பாடல்கள்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..

உடல் உறு நோய் ஐம்பதோடு ஆறெட்டும் (தொண்ணூற்று எட்டு) - என்று நேரிடையாகக் குறிக்கின்றார் திருநாவுக்கரசு ஸ்வாமிகள்.. 

திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு ஏற்பட்டிருந்த சூலை நோய் (வயிற்று வலி) திரு அதிகையில் தீர்ந்தது..

சுந்தரருக்கு தோலில் ஏற்பட்ட நோய் திருத் துருத்தியில் தீர்ந்தது.. 

திரு ஒற்றியூரில் -
சங்கிலி நாச்சியார்க்கு அளித்த சத்தியத்தை மீறியதால் பார்வையை இழந்த சுந்தரர் திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோலைப் பெற்றார்.. 

காஞ்சியில் ஒரு கண்ணையும் ஆரூரில் மறு கண்ணையும் பெற்றார்..

நோய் வீரியத்துடன் பரவிக் கொண்டிருந்த வேளையில் தீண்டப் பெறா திருநீலகண்டம்
- என, ஞானசம்பந்தர் திருப்பதிகம் செய்தருளிய தலம் திருச்செங்கோடு..

அருளாளர் மூவருமே பிரிந்த உயிரை மீட்டு அளித்திருக்கின்றனர்..

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு -
உடல் உறு நோய் என்று நேரிடையாகக் குறிக்கின்ற தேவாரத் திருப்பாடல்கள் சிலவற்றை இப்பதிவில் காண்போம்..


பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல்தூவி
ஒத்தசொல்லி உலகத்தவர் தாம் தொழுதேத்த உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்
சித்தம் வைத்த அடியாரவர் மேல் அடையா மற்று இடர் நோயே.. 1/3/1

குழலின்வரி வண்டுமுரன் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை இண்டை புனை வார் கடவுள் என்றமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவ  நல்லூரே.. 3/82/5
-: திருஞானசம்பந்தர் :-


மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மைச் செற்ற அநங்கைக்
காய்ந்த பிரான் கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே.. 4/93/9

அரக்கனை அலற விரலூன்றிய
திருத்தனைத் திரு அண்ணா மலையனை
இரக்கமாய் என் உடலுறு நோய்களைத்
துரக்க னைத் தொண்டனேன் மறந்துய்வனோ.. 5/4/10

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறெட்டும்
ஏழைமைப் பட்டிருந்து நீர் நையாதே
கோளிலி அரன் பாதமே கூறுமே.. 5 /57/3
-: திருநாவுக்கரசர் :-


மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன்
அஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றிருந்து பெறாது ஒழிகின்ற
பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்
முற்று நீயெனை முனிந்திட அடியேன்
கடவது என் உனை நான் மறவேனேல்
உற்ற நோய் உறு பிணி தவிர்த்தருளாய்
ஒற்றியூரெனும் ஊருறை வானே.. 7/54/7

கட்ட மும் பிணியும் களைவானைக்
காலற் சீறிய காலுடையானை
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை
விரவினால் விடுதற்கரி யானைப்
பட்ட வார்த்தை படநின்ற வார்த்தை
வாராமே தவிரப் பணிப் பானை
அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை
ஆரூரானை மறக்கலுமாமே.. 7/59/2

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாம் காவிரி அகன்கரை உறைவார்
அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம் படும்பிணி இடர் கெடுத்தானை.. 7/74/1
-: சுந்தரர் :-
*
அனைவரும் 
நலமாக வாழ்ந்திடப்
பிரார்த்தனைகள்..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. சத்தியம்தான் சாத்தியமாகவில்லையே!

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான பதிவு.

    யான் உனை மறவேனேல் கடவது என்?

    சில பதிகங்களில் தட்டச்சுப் பிழை போலத் தோன்றுகிறது. பிறகு வருகிறேன்.

    நீங்கள் திருக்கண்டியூர் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவில்லை. அடுத்த முறை ஐயாரப்பன் என பல விட்டுப் போன சிவத் தலங்களுக்கு, ப்ராப்தமிருப்பின் செல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முற்று நீயெனை முனிந்திட அடியேன்
      கடவ தென்னுனை நான்மற வேனேல்
      உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
      ஒற்றி யூரெனும் ஊருறை வானே..

      இது மூல பதிவு..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான தொகுப்பு.அனைத்து பாடல்களையும் பாடி இறைவனை மனதாற வேண்டிக் கொண்டேன். சாம்பசிவம் சார் அவர்கள் விரைவில் நலபெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டும்.
    நலிவுற்ற எல்லோரும் நலமாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// நலிவுற்ற எல்லோரும் நலமாக வேண்டும். ///

      அன்பின் வருகையும் கருத்தும்
      பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நோய்கள் பற்றிய பதிகங்கள் கண்டோம்.

    பகையும், பிணியும் தொலைந்திட வைத்தியநாதன் பாதம் தொழுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும்
      பிரார்த்தனையும் மகிழ்ச்சி..

      நன்றி.

      நீக்கு
  5. மிகவும் தேவையான பதிவு. நோய் தீர்க்கும் பாடல்கள்/பதிகங்கள் இன்றைய காலத்தின் கட்டாயம். பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// நோய் தீர்க்கும் பாடல்கள்/பதிகங்கள் இன்றைய காலத்தின் கட்டாயம்.///

      உண்மை.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி.

      நீக்கு
  6. நான் போட்ட கருத்து இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  7. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..