நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 20
வியாழக்கிழமை
உணவுத் திருவிழா 4
உவர்ப்பு..
உப்புத் தன்மையை குறிக்கின்றது..
சுவைகளைச் சமன் செய்து உணவுக்கு சிறப்பினை ஊட்டுகின்றது..
இதனால் தான்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. - என்றனர் ஆன்றோர்..
தவிர்க்க இயலாத சுவை இது..
இனிப்பைப் போல அனைவராலும் விரும்பப்படுகின்ற ஒன்று.
உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது..
கீரைகள், வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங் காய் ஆகியவற்றில் அதிகமாய் இருக்கின்றது...
பூசணிக்காய் சாம்பார்
தேவையானவை :
துவரம் பருப்பு 150 gr
பூசணி 250 gr
தேங்காய் ஒருமூடி
சின்ன வெங்காயம் 15
தக்காளி ஒன்று
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் 1⁄2 tsp
சாம்பார் பொடி 2 Tbsp
பெருங்காயத்தூள் 1⁄2 tsp
மல்லித் தழை சிறிது
கல் உப்பு தேவைக்கு
தாளிப்பதற்கு :
கடலெண்ணெய் தேவைக்கு
கடுகு 1⁄2 tsp
சீரகம் 1⁄2 tsp
உளுந்தம் பருப்பு 1⁄2 tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
செய்முறை :
பூசணிக் காயை தோல் சீவி விதைகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாகவும்
தக்காளியை நாலாகவும் நறுக்கிக் கொண்டு மிளகாயை நெடுக்காகக் கீறிக் கொள்ளவும்..
தேங்காயை கால் வாசி துருவிக் கொள்ளவும்..
துவரம் பருப்பை அலசிய பின்,
சரியான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்..
பருப்பு வெந்ததும் மசித்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கின்ற நிலையில்
வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும்..
தொடர்ந்து
நறுக்கிய பூசணிக்காய் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறவும்..
தேங்காய் விழுதைச் சேர்த்து - குழம்பின் தண்ணீர் அளவைப் பார்த்துக் கொள்ளவும்..
ஏனெனில், பூசணிக்காய் வெந்து கொண்டிருக்கும் போது தண்ணீர் சுரக்கக் கூடியது... குழம்பில் எளிதாகக் கரைந்து விடும்..
அடுத்து மசித்து வைத்துள்ள பருப்பை அதனுடன் சேர்க்கவும்.
குழம்பு கொதித்து வாசம் வருகின்ற போது -
வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து ஊற்றி மல்லித் தழை தூவி இறக்கவும்..
கீரைத் தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங் காய் ஆகியவற்றில் உப்புச்சுவை இருப்பதால் தோலில் அரிப்பு ஒவ்வாமை உடையவர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது..
(ஒளிப்படங்கள் : நன்றி இணையம்)
(இங்கே படங்களுக்கும் பக்குவத்திற்கும் சம்பந்தம் இல்லை.. ஆனாலும் நன்றி..)
ஃ
நமது நலம்
நமது கையில்..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***