நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 24, 2021

தடம் பார்த்த நடை

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

***

" தந்த தன.. தானன னா..  ஆஆ!... "

- என, தொலை தூரத்துத் தெம்மாங்கு சத்தம்...

அந்தத் தெம்மாங்கு - அது ஒன்றே - நீண்டு விரிந்து விளைந்திருக்கும் வயற்காட்டினைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது..

நன்றி - ஓவியர் திரு. மாதவன்

தெம்மாங்கினைத் தொடர்ந்து -
தென்னங்கனி பிளந்தாற்போல,
காளை ஒருவனின் கம்பீரமான குரல்..
அவனருகில் இளங்கன்னி ஒருத்தி!..

இருந்தும் -  சிறிது சோகமும் கூட!..

ஏன்!.. எதற்கு?..

தொடர்ந்து கேட்போம் வாருங்கள்..

" ஒட்டுக் கேட்பது தவறில்லையா?.. "

" அடுத்த வீட்டுக் கதவில் காதை வைத்துக் கேட்பது தான் தவறு.. பெருந்தவறு!.. இங்கே வெட்டவெளியில் காற்றலையில் அல்லவா தெம்மாங்கு தவழுகின்றது... கேட்டு மகிழ்வதில் தவறே இல்லை!.. "

" தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?.. "

" அதென்னங்க தாழையாம் பூ முடிச்சி?... "

" இருங்க... இந்தப் பையனோட பாட்டுக்கு அந்தப் பொண்ணும் இசைப்பாட்டு பாடுது.. முதல்ல பாட்டைக் கேட்போம்.. அப்புறமா.. அர்த்தத்தைப் பார்ப்போம்!.. "

" பாளை போல் சிரிப்பிருக்கு.. பக்குவமா குணமிருக்கு..
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா...
இந்த ஏழைகளுக்கென்ன
வேணும் சொல்லையா!.. "

" ஆகா!... "

" தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால்
போதுமா.. அது
மானாபிமானங்களைக் காக்குமா?..
மானாபிமானங்களைக் காக்குமா?.. "

" மானமே ஆடைகளாம்
மரியாதை பொன்னகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே - எங்கள்
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!..
நாட்டு மக்கள் குலப்பெருமை தோன்றுமே!.. "

" அடடா!..." 

" அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா?. - வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!..
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா!.. "

" மண் பார்த்து விளைவதில்லை.. மரம் பார்த்து படர்வதில்லை..
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா... - அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!...
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா!... "

" தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
வாழை இலை போல வந்த பொன்னம்மா!..
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?.. "

" அற்புதம்.. அற்புதம்!.. ஆனா.. அவங்க ரெண்டு பேரும் அப்படியே மாடு கன்றை ஓட்டிக்கிட்டு போறாங்களே?.. "

" ஆமாம்.. சாயங்காலப் பொழுதாச்சே... வயக்காட்டு வேலைய முடிஞ்சது.. வீட்டுக்குப் போக வேணாமா?... கம்புக்கு களை எடுத்தாச்சு.. தம்பிக்கும் பொண்ணு பார்த்தாச்சு.. அப்படிங்கற மாதிரி... வரப்போட வரப்பா வேலையும் பார்த்தாச்சு.. வருங்காலத்துக்கு வேண்டியத பேசியும் ஆச்சு!.. "
 
" அப்போ - ரெண்டு பேருக்கும் பிரியம் தானே.. காதல் தானே!.. "

" காதல் தான்... ஆனா, அதுக்கும் மேலே!... அதனால தான் - தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து.. ந்னு வார்த்தை வந்தது!... "

" அதுக்கு என்னங்க அர்த்தம்?... "

மல்லிகைப் பூ முல்லைப் பூ இந்த மாதிரி பூவெல்லாம் ரெண்டு நாள்ல வாடிப் போனா -  வாசமும் சேர்ந்து காணாப் போயிடும்.. ஆனா, இந்த தாழம்பூ இருக்கே - அது ஒரு தனி ரகம்.. நாளாக நாளாகத் தான் அதனோட மடல்கள்..ல இருந்து வாசம் வீசும்... "

" அது சரி!... "

" அந்தக் காலத்தில சின்ன பெண்ணுங்களுக்கு சடை அப்படின்னாலே - தாழம்பூ சடை தான்.. குஞ்சம் தான்!.. போற பக்கமெல்லாம் வாசம் கமகம...ன்னு!.. " 

" சரி.. அதுக்கும் இதுக்கும் என்னாங்க சம்பந்தம்?.. "

" இருக்கே!... தாழையாம் பூ முடிச்சி.. அதுக்கப்புறம்?... "

" தடம் பார்த்து நடை நடந்து!... "

" அப்படின்னா.... பாதையைப் பார்த்து நடக்கிறது... கிராமங்கள்.. ல சொல்லுவாங்க... வயக்காட்டுத் தடம்... வண்டித் தடம்.. ஒத்தையடித் தடம்.. "

" ஆமாங்க... நானும் படிச்சிருக்கேன்... ரயில் தடம் புரண்டது.. அப்படின்னு போடுவானுங்க... அதுக்கு இது தானா அர்த்தம்!... நல்லாயிருக்கே!... "

" பாதையைப் பார்த்து நடக்கிறது.. ன்னா..  பார்க்கிறது எல்லாமும் பாதை இல்லை.. நல்லவங்க பாதம் பட்டது தான் பாதை.... அவங்க நடந்தது தான் நடை... அதுதான் தடம்.. அந்தத் தடம் பார்த்து நடக்கிறது தான் வாழ்க்கை!...

தடம் மாறாம நடந்தா வாழ்க்கை இனிக்கும்.. மணக்கும்.. தடம் மாறி நடந்தால் - தடுமாறி நடந்தால் அதுவே
கசக்கும்.. கழுத்தை நெரிக்கும்.. மனசாட்சி அக்கினியா எரிக்கும்!.. "

" அடடா!.. நீங்க என்ன தமிழ் வாத்தியாருக்குப் படிச்சீங்களா?... "

" படிக்கலாம்..ன்னு தான் போனேன்... கைப்பணம் அதிகமா கேட்டானுங்க.. கொடுக்க முடியலே.. அதனாலே படிக்க முடியாமப் போச்சு!... "

" ஓ.. அப்பவே.. இதெல்லாம் உண்டா?.. "

" அப்ப ஆரம்பிச்சது தானே!... இன்னைக்குப் புரையோடிப் போய்க் கிடக்கு... "

" சரி.. வாழை இலை போல வந்த பொன்னம்மா.. அப்படின்னா!.. "

"  பொன்னம்மா..ன்றது அந்தப் பொண்ணோட பேரு.. பொன் - தங்கம்..ன்னு தெரியும்.. அதோட பெருமையும் புரியும்... அப்படி குணமுடைய பொண்ணு வாழையில போல வந்தாளாம்!... " 

" அது தான் எப்படி..ங்கறேன்!.. "


" பச்சைப் பசுந்தளிரா வாழைக் குருந்து மேல வந்து - அப்படியே மயில் தோகை மாதிரி விரிஞ்சும் விரியாம ரொம்பவும் மென்மையா இருக்கும்.. தொட்டாலே கிழிஞ்சு போயிடும்.. இதுக்கு தான் தலை வாழை இலை..ன்னு பேரு!.. "

"அடடா!.. "

" இப்படி எந்த ஒரு குறையும் இல்லாம முன்னவங்க போன தடம் பார்த்து 
நடப்பவளே.. காஞ்சாலும் காயாத தாழம்பூவை சூடிக்கிட்டு சிரிப்பவளே!... என் வாசலுக்கு என்ன வாங்கிக்கிட்டு வந்தாய்?... அப்படின்னு கேக்கிறான்... புரிஞ்சுதா!... "

" இதுக்கும் மேல புரியாம இருக்குமா!...

அதுக்குத் தான் அந்தப் பொண்ணு சொல்லுது... மானம் மரியாதை.. இதுக்கு மேல என்ன வேணும் - ஏழையாப் பொறந்த எங்களுக்கு!... "

" ஆகா!... என்னா ரசனை!... ஒருத்தரோட மனசு அவரோட சிரிப்பில தெரியும்.. அப்படி..ன்னு சொல்லுவாங்க.. அதுபோல கன்னையனோட மனசு அவனோட தென்னம்பாளைச் சிரிப்பில தெரியுது... இல்லீங்களா!.. "

" அதுல பாருங்க!... பொன்னும் பொருளும் பூந்தட்டும் சீதனமும் மானம் மரியாதையான வாழ்க்கைக்கு போதுமா!.. அப்படின்னு.. கேக்குறதுக்கு - அந்தப் பொண்ணு சொல்லுது -

தன் மானம் தான் இடுப்புச் சேலை... சுயமரியாதை தான் நகை நட்டு.. என்னோட வழித்துணை தான் பரம்பரையா வர்ற நாணம்!.. இதெல்லாம் இருந்தா போதுமே.. எங்க குலப்பெருமை எட்டுத் திக்கும் கொடி கட்டித் தோன்றுமே!... - அப்படின்னு!... என்ன அருமையா இருக்கு!.. "

" அந்த நாணம் இல்லாதது தான் - நாட்டுல நடக்கிற எல்லா தப்புக்கும் காரணம்!..  தப்பு செய்றதுக்கு வெட்கப்படறவங்க ஒழுக்கம் தவறி நடக்க மாட்டாங்க!..

கடமைய செய்றதுக்குக் காசு வாங்குறதுல இருந்து -

அடுத்தவன் பொண்டாட்டிய அடுத்தவ புருசனை இழுத்துக் கிட்டு ஓடறது வரைக்கும் - வெட்கம் கெட்டவங்க செய்யிற வேலை தானே!.. "

" சரியாச் சொன்னீங்க!.. இருந்தாலும் கன்னையனுக்குச் சந்தேகம் வருது.. பொன்னம்மா நம்மைப் பார்த்து ஆளழகு ..ன்னு சொல்லிடிச்சு.. அதுக்கு நாம தகுதியா?.. நமக்குத் தான் ஒரு கையும் காலும் வெளங்காதே!.. அவளை எப்படி நாம காப்பாத்த போறோம்!... அதனால அவனே கேட்கிறான்... "

" கைகால் விளங்காதவன் மேல யார் இஷ்டப்படுவாங்க!.. நீ என்ன தான் எம் மேல இஷ்டப்பட்டாலும் உங்க வீட்டில சம்மதிப்பாங்களா!... முடவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படறது யாருக்குத் தான் சந்தோஷமா இருக்கும்?.. "

" ஆமா.. மனக்குறை இருக்கும் தானே!... "

" அதுக்கு பொன்னம்மா சொல்லுது பாருங்க... மண்ணைப் பார்த்தா பயிர் வளருது?.. மரத்தைப் பார்த்தா கொடி படருது?.. "

" அந்தப் பயிர்லயும் கொடியிலயும் குத்தம் குறை உண்டா?.. என்னோட கண்ணு ரெண்டையும் பாருங்க... அதுல ஒரு களங்கமும் உண்டா..நீங்க என்னைப் புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா?.. சொல்லுங்க!.. "

" பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்கிறதே - ஒரு புண்ணியம்!.. "

அதுக்கு மேல கன்னையனுக்கு கேள்வி ஏதும் இல்லை!.. நாம காப்பாற்றலே.. ன்னாலும் அவ நம்மளைக் காப்பாற்றிடுவா... ன்னு நம்பிக்கை பிறக்குது... அப்புறம் என்ன!... கள்ளச் சிரிப்பு தான்.. குறும்புப் பார்வைதான்!...

" இந்தப் பாட்டுல - களங்கமில்லாத அன்பு தான்.. வாழ்க்கைக்கு அடிப்படை.. ன்னு சொல்றாங்க.. இல்லையா!.. "

இப்படியெல்லாம் தான் அன்றைக்கு வாழ்ந்தாங்க... ஆனா இன்றைக்கு நடக்கிறதெல்லாம் கேள்விப்பட்டா...

ரத்தம் கொதிக்குது... வேணாம்!... அந்தப் பேச்சை விடுங்க... ஏதோ இன்னைக்குப் பொழுது நல்லபடியா ஆனது... இன்னொரு சமயம் சந்திப்போம்!...

நல்லது.. மறுபடியும் பார்ப்போம்!..
* * *


ஜூன் 24..

கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கும்
மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்களுக்கும் - பிறந்த நாள்..


கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய பாடல்களுள் -
மண் மணக்கும் பாடல் ஒன்றினை - என்னளவில் வழங்கியுள்ளேன்..

காலத்தை வென்று நிற்கும் - தாழையாம் பூ முடித்து - எனும் இனிய பாடலை
இங்கே - கேட்டு மகிழுங்கள்..

மெல்லிசை மன்னரின் இசையில் பாடியவர்கள் -
T.M. சௌந்தரராஜன், P. லீலா..

நடித்து வண்ணம் கூட்டியவர்கள் -
சிவாஜி கணேசன், சரோஜாதேவி..

இந்தப் பாடல் பெரும் சிறப்பு எய்துவதற்குக் காரணமான - 
மகத்தான கலைஞர்களையும் நினைவு கூர்தல் மகிழ்ச்சி..


மேலும் - அவர்கள் இன்று இல்லை என்று நினைக்கவே முடியவில்லை..

அவர்கள் வழங்கிய இனிய பாடல்களுடன் தான் நாளும் பொழுதும் விடிகின்றது..

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. - என்றார் கவியரசர்..

அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..

அவ்வண்ணமாகிய 
அந்த மாபெரும் வித்தகர்களை 

நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..  
***

ஞாயிறு, ஜூன் 20, 2021

ஸ்ரீ சுதர்ஸன ஜெயந்தி

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
இன்று
ஆனி மாதத்தின்
சித்திரை நட்சத்திரம்..


சக்கரத்தாழ்வார்
என்று போற்றப்படும்
ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி..

சக்கரத்தாழ்வார் திருமேனியும்
அவரது சாந்நித்யமும்
பிரசித்தமானவை..

எதிர்பாராது ஏற்படும்
விபத்துகளிலிருந்து
சுதர்சனர் காத்தருள்வார்
என்பது பக்தர்களின்
நம்பிக்கை..

பெருமானின்
திருவுளப்பாங்கினை அறிந்து
முந்தி வந்து
அடியவர்களைக் காத்தருள்வது
சக்ராயுதம்..


ஆனையைப் பிடித்த
முதலையை வீழ்த்தியது
அவ்வண்ணமே..

பெருமானின் திருக்கரத்திலிருக்கும்
பிரயோகச் சக்கரம்
வெகு பிரசித்தம்..

சக்ராயுதத்தை
சுடராழி என்றுரைப்பார்
அருணகிரிநாதர்..

தமிழில்
ஆழி எனில் கடல் என்றும்
சக்கரம் என்றும் பொருள்
விளங்குகின்றது..

இராமாயணத்தில்
ஸ்ரீ பரதன்
சக்கரத்தாழ்வாரின் அம்சம்..

சலந்தராசுரனைப் பிளந்த
சக்கரத்தை வேண்டி
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
சிவ பெருமானை நோக்கித்
தவமிருந்ததாக
சிவ புராணங்கள் பேசுகின்றன..

சக்கரம் மாற்கீந்தானும்
சலந்தரனைப் பிளந்தானும் ...
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு..

இராவணனை
ஸ்ரீராமபிரான் தனது
கணைகளால் வீழ்த்தினார்
என்று நாமெல்லாம் இருக்க
அப்பர் பெருமானோ -
வீடவே சக்கரத்தால் எறிந்து
பின் அன்பு கொண்டு..
- என்று திருப்பதிகத்தில்
வர்ணிக்கின்றார்..

அத்தகைய
சக்கரத்தினைப் பெற வேண்டி
ஸ்ரீ ஹரி பரந்தாமன்
தவமியற்றிய தலம்
திருவீழிமிழலை..


நாளும் ஆயிரம் தாமரைகளால்
வழிபாடு நிகழ்த்துங்கால்
ஒருநாள் ஒரு மலர் குறையவும்
சற்றம் தயங்காமல்
தனது விழியினைத்
தாமரை மலராக அர்ப்பணிக்க
விழியுடன் சக்ராயுதத்தையும்
ஸ்ரீ ஹரி பரந்தாமனிடம்
இறைவன் நல்கியதாக
ஐதீகம்..

அரக்கோணத்திற்கு அருகிலுள்ள
திருமாற்பேறு தலத்திற்கும்
இதுவே தல புராணம்..


நீற்றினை நிறையப் பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக்
கண் நிறைய விட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந் திழிச்சும் கோயில்
வீற்றிருந்தளிப்பர் வீழி
மிழலையுள் விகிர்தனாரே..
-: திருநாவுக்கரசர் :-
***

ஆழிசூழ் இவ்வுலகை
ஆழியே காத்திடுக..
ஆழியே போற்றி போற்றி
வாழியே போற்றி போற்றி..

ஸுதர்ஸனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரசோதயாத்..

சைவ வைணவ சமயங்களில்
புனிதமானதொரு திருவடிவம்
ஸ்ரீ சக்கரமாகிய சுதர்சனம்..
***

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூன் 18, 2021

பூக்களின் புன்னகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த ஞாயிறன்று
எபி யில்
அன்பின் ஸ்ரீராம் அவர்கள்
புன்னகைப் பூக்களைப்
பதிவாக வழங்கியிருந்தார்..

அந்தப் பதிவின் வழியே
தோன்றியவை சில வரிகள்..

காலையிலேயே பதிவைப்
படித்து விட்டாலும்
இந்தக் கவிதையின் வரிகள்
தோண்றிய போது
மாலைப் பொழுதாகி விட்டது..

அவற்றைக் கருத்துரையில்
இட்ட போது
இரவாகி விட்டது...

அப்போதே நினைத்தேன்..
இதற்கு மேல் யார் வரக் கூடும்?..
- என்று..

ஆயினும்
கீதாக்கா வந்திருந்தார்கள்..

இருந்தாலும்,
எல்லாருக்கும் ஆகட்டும்!..
- என்று இன்றைய பதிவில்
அந்த வரிகள்...

அதற்கு முன்பாகத் தங்களுடன்
சில வார்த்தைகள்..

நாம் தொலைத்தோமோ?..
அல்லது அதுவாகத்
தொலைந்து விட்டதோ!..

இயற்கை தன்னை
ஒளித்துக் கொள்ளும்
காலமாகி விட்டது..

பால் என்று தெரியும்..
இன்றைய காலகட்டத்தில்
பால் எப்படி கிடைக்கிறது.. என்பது
வளரும் பிள்ளைகளுக்குத் தெரியாது..

மிஷினில் இருந்து!..
 என்று விடை கிடைத்தால்
பிள்ளைகளின் சாதுர்யம் என்று
கொண்டாடிக் கொள்ள
வேண்டியது தான்...

பணத்தைக் கொடுத்து விட்டு
முன் பதிவு செய்து கொண்டால்
வீட்டிற்கே வெளியக ஆட்கள் வந்து
பல் துலக்கி உணவூட்டி விட்டு
வாய் துடைத்து விடுகின்ற
காலம் இது...

அவரைக் காய்.. - என்றால்
அதுவும் சுவை தான்..
அதன் சொற்செறிவும்
சுவை தான்..

பெண் குழந்தைகளின்
வளர்ச்சியை
பீர்க்கங்காயின் வளர்ச்சிக்கு
ஒப்பிடுவார்கள்..

கண்டு பூ பூத்து
காணாமல் காய் காய்க்கும்..
என்ற விடுகதையின்
விடை எத்தனை பேருக்குத்
தெரியும்?..

இதை வைத்து
சென்ற ஆண்டில்
சில வரிகள் எழுதினேன்..

அவை
மின்நிலா வழங்கிய
பொங்கல் மலர் எனும்
கடலில் கரைந்து விட்டனக

இருக்கட்டும்..
இப்போது தமிழகத்தில்
கொரோனா பூ .. என்று
பூத்திருக்கின்றதாம்..


சில நாட்களுக்கு முன்
தினமலரிலும் தற்போது
தினமணியிலும்
செய்தியும் படங்களும்...

தமிழர்கள் மிகவும்
ஆச்சர்யமாகப் பார்க்கிறார்களாம்..


கந்த வேலன் கடம்பன்
கடம்பவன வாசினி
கடம்பவனேஸ்வரர்
என்றெல்லாம் பயின்று வரும்
இந்தத் தமிழ் மண்ணில் தான்
கடம்ப மலருக்கு
கொரோனா பூ - என்று
பெயர் சூட்டியிருக்கின்றனர்..

இனி
நீ குழாய் (யூ டியூப்) குழுவாளிகள்
இப்படிச் சொன்னாலும்
சொல்வார்கள்..

பின்னாலில் வரவிருப்பதை
முன்னாழேயே உணர்ந்து
முருகனுக்கு கொரானா பூ
சூட்டிய முன்னோர்கல்!..

கொரோனா பூ!..
யாரும் அரியாத்
ரகசியங்கள்..

கொரானா பூவைப் பற்றி
சித்தர்கலின் வாக்கு..

கொராணா பூவின்
படத்தை உடனடியாக
பகிறுங்கல்..
அதிஸ்டம் தேடி வரும்..!..

( குழாய் - குழுவாளிகளின்
தன்மைக்கேற்ப
எழுத்துப் பிழைகளுடன் சொல்லியிருக்கின்றேனே அன்றி
வேறொன்றும் இல்லை..)

இருந்தாலும், இதுவே
கடம்ப மலர்.. - என்றும்
இல்லையில்லை
அது வேறு.. - என்றும்
இருவேறு கருத்துகள்
இருக்கின்றன...

அதைப் பிறகு பார்க்கலாம்..
***

இனி  - இதோ
இன்றைய பதிவு...

திங்கள் / செவ்வாயில் இதனை
வெளியிடுவதற்கு முயன்றேன்..
இணையம் ஒத்துழைக்கவில்லை..

புடலைப் பூவும் புரியாது
கடலைப் பூவும் தெரியாது..
புல்லின் பூவும் கேட்டதில்லை
நெல்லின் பூவைப் பார்த்ததே இல்லை..

கடலைக் காட்டில் காய் பறித்து
காதல் வளர்த்ததும் ஒரு காலம்
பூவும் மடலும் மறந்த தெல்லாம்
கலியில் விளைந்த அலங் கோலம்..

தாமரை மலரில் மனதினை வைத்த
தமிழும் மறந்து போனதம்மா..
மடலாய் மலராய் மனதினில் விரிந்த
தடமும் மறைந்தே போனதம்மா..

தமிழே என்றிங்கு வரும் கூட்டம்
தமிழே என்றிங்கு பெருங் கூச்சல்
தமிழின் மலரும் தெரியாமல்
தமிழின் மணமும் புரியாமல்...

தமிழே தமிழே நீ வாழ்க!...
தமிழே அமிழ்தே நீ வாழ்க!...

***

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்

ஃஃஃ

புதன், ஜூன் 09, 2021

அழைப்பவர் குரலுக்கு

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்...

இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருளால் கடந்த நிலையில் அதனை  இங்கே பதிவு செய்திருக்கின்றேன்..

நேற்று காலை ஏழு மணியளவில் திடீரென தலை சுற்றலும் வாந்தி மயக்கமும் ஏற்பட்டு நிலை குலைந்து விட்டேன்..

தற்போது ஒரு மாதமாக காலை ஐந்து மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் விடியல் 3:30 அளவில் எழுந்திருப்பது வழக்கம்..

நேற்றும் இப்படித்தான்... என்ன ஒரு வித்தியாசம் என்றால் வழக்கத்தில் இல்லாதபடிக்கு  பாட்டிலில் அடைக்கப்பட்ட சோயா பீன்ஸ் பால்  அருந்தியது தான்.. வாரம் ஒரு முறை சோயா பால் குடிப்பது என்றாலும் விடியற்காலையில் வெறும் வயிற்றில் என்பது இதுவே முதல் முறை..

தலை சுற்றல் ஏற்பட்டாலும் நினைவு தடுமாறவில்லை.. கந்தர் அலஙகாரப் பாடலுடன், முருகா.. முருகா!.. - என்றிருந்தது மனம்..

மயக்கம் ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்தே அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் செல்ல முடிந்தது.. ஆனாலும் அங்கே அனுமதிக்கப்பட வில்லை.. காரணம் எனது Civil Id  முன்பிருந்த முகவரியிலேயே உள்ளது.. அதன்படி அந்த மாவட்ட மருத்துவ மனைக்குத் தான் செல்ல வேண்டும்... இது தான் இங்கு நடைமுறை.. நம்ம ஊர் மாதிரி வேறு கூச்சல்களுக்கு இடமில்லை..

அதன்படி செல்ல வேண்டிய மருத்துவமனை ஏறத்தாழ 40 கிமீ.. அதிகப்படியான வெயிலில் அவ்வளவு தூரத்துக்கு தனியொருவனாக செல்வதற்கு என் மனம் ஒப்பவில்லை..

இக்கட்டான சூழ்நிலையில் - நீயே கதி ஈஸ்வரி!.. என்று வாடகைக் கார் மூலம் அறைக்குத் திரும்பி படுத்து விட்டேன்...

மூன்று மணி நேரம் கழித்து விழித்தேன்.. தளர்ச்சியாக இருந்தது.. தலை சுற்றல் இல்லை.. அசுத்தமாகி விட்ட உடைகளைத் துவைத்துப் போட்டு விட்டு கொஞ்சமாக கஞ்சி வைத்தேன் - கிருத்திகை சேர்ந்திருக்கும் செவ்வாய் ஆயிற்றே!..

இதற்கிடையில் இவ்விஷயத்தை வீட்டுக்கும் இங்கே நண்பர் கணேச மூர்த்திக்கும் தெரிவித்தேன்...

அதெல்லாம் ஒன்றுமில்லை.. பயப்பட வேண்டாம்.. இன்று சந்திராஷ்டமம்.. இங்கே இவனுக்கும் ராத்திரியெல்லாம் பிரச்னை.. எல்லாம் சரியாகி விடும்!.. - என்றார்கள் வீட்டிலிருந்து..

கணேச மூர்த்தி -  உடனே புறப்பட்டு வருகின்றேன்!.. - என்றார்...

அவர் வேலை செய்யும் இடத்துக்கும் நான் இருக்கும் இடத்துக்கும் ஐம்பது கி.மீ தூரம்...

அந்த அன்பு உள்ளத்துக்கு பதில் சொல்லி விட்டு மாலை ஆறு மணியளவில் சற்று தொலைவிலுள்ள தனியார் மருத்துவ மனைக்குச் சென்றேன்..

அங்கே விவரம் சொல்லி பணம் செலுத்திய பிறகு இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்கள்..

சில விநாடிகள் கழித்து அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்..

என்னை அழைத்து - உங்களுக்கு மிகவும் அதிக அளவில் இரத்த அழுத்தம் உள்ளது.. அரசு மருத்துவ மனைக்குச் செல்லுங்கள்.. இங்கே அனுமதிக்க முடியாது!.. - என்று சொல்லி வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்கள்..

அங்கிருந்து கணேச மூர்த்தி அறைக்குச் சென்றேன்.. வழக்கமான உபசரிப்பு...

நண்பர் கணேச மூர்த்தி புன்னகையுடன் சொன்னார் - இது வெறும் பித்த மயக்கம்.. வேறொன்றுமில்லை!.. - என்று..

புள்ளிருக்குவேளூர் ஸ்ரீ வைத்திய நாதரின் திருச்சாந்து உருண்டையும் திரு நீறும் கொடுத்தார்...

இது நீங்கள் எனக்குக் கொடுத்தது தான்!.. - என்று சொல்லிக் கொண்டே..

என்னிடம் இருந்தவை சென்ற ஆண்டு கொரானா தாக்கிய போது நடத்திய எதிர் தாக்குதலில் தீர்ந்து போயிருந்தது..

இரவு அப்பளம், கொத்தமல்லிச் சட்னியுடன் சாப்பாடு.. நல்ல தூக்கம்..

காலைப் பொழுது கலகலப்பாக விடிந்துள்ளது.. வீட்டிற்கு நலம் குறித்துச் சொன்னேன்... நேற்று இரவே நல்ல சகுனங்கள் தென்பட்டதாக சொன்னார்கள்.. இருந்தாலும் உள்ளுக்குள் தவிப்பு தான்...

இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது.. கழுத்து தோள்களில் லேசான அழுத்தம் தெரிகிறதேயன்றி வேறு எவ்வித சங்கடமும் இல்லை..

நேற்று எபியில் எனது ஆக்கம் வெளியாகி இருந்த நிலையில் கருத்துரைகளுக்கு நன்றி சொல்ல இயலவில்லை.. ஆனாலும் அவ்வப்போது எபிக்குச் சென்று கதைக்கான வரவேற்பினைக் கண்டு என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன்...

சற்று முன் உணவகத்திற்குச் சென்று இட்லி சாப்பிட்டு வந்தேன்..

எனக்காக மதியத்துக்கு சோறு ஆக்கி குழம்பும் வைத்து விட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார் கணேச மூர்த்தி.. மாலை திரும்பியதும் வேறொரு மருத்துவ மனைக்குச் சென்று மேலதிக ஆலோசனை பெறலாம் என்று திட்டம்...

எல்லாம் வல்ல இறைவனின் அருட்கதிர்கள் அன்பு கொண்ட நெஞ்சங்களின் கரங்களாகி உதவி செய்கின்றன...
கால்களாகி நம்முடன் நடக்கின்றன...


அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்..

ஹரி ஓம் நமோ நாராயணாய..
***

கொரோனா எனும்தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

செவ்வாய், ஜூன் 08, 2021

தூரிகை வண்ணம்

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அனைவராலும் அறியப்பெற்ற
ஓவியர் திரு. இளையராஜா (43)
அவர்கள் நேற்று
கொரானா தீநுண்மியால்
பாதிக்கப்பட்ட நிலையில்
இறைவனடி சேர்ந்தார் என்கிற
செய்தியறிந்து
கலங்காத நெஞ்சமில்லை..

இன்றைய பதிவில்
திரு. இளையராஜா அவர்களது
தூரிகை வண்ணத்தில்
காரிகை வண்ணம்..





தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தை அடுத்த
செம்பியன் வரம்பு எனும்
ஊரைச் சேர்ந்தவர்..


தனது தூரிகையால்
பெண்ணோவியங்களைப்
பொன்னோவியங்கள்
ஆக்கியவர்..


அவரது
கைவண்ணத்தில் உருவாகிய
சித்திரப்பாவை ஒருத்தி
சகுந்தலா எனும் பெயரில்
எனது கதைக்குள்ளும்
உலவித் திரிந்தாள்..

எனது பதிவுகள்
வேறு சிலவற்றிலும்
ஓவியர் இளையராஜா
அவர்களது சித்திரங்கள்
இடம் பெற்றிருக்கின்றன..

அவரை என்றென்றும்
என் நெஞ்சம்
நினைத்திருக்கும்..





அவரது பிரிவால்
துயருற்றிருக்கும் அவரது
குடும்பத்தினருக்கு
ஆறுதலையும் தேறுதலையும்
எல்லாம் வல்ல இறைவன்
அருள்வானாக...


ஓவியர் திரு. இளையராஜா
அவர்களது ஆன்மா
தனது திருவடி நிழலில்
கலந்திருக்க
இறைவன் அருள் புரிவானாக..
 ஃஃஃ

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

ஞாயிறு, ஜூன் 06, 2021

ஆனந்த ஒளி

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
விருதுநகர் மாவட்டம்
சிவகாசி நகருக்கு அருகில் இருக்கின்ற
இருக்கன்குடி  திருத்தலத்தில்
கோயில் கொண்டுள்ள
ஸ்ரீ  மாரியம்மனைத் துதித்து இரண்டு மாதங்களுக்கு
முன்பு எழுதப் பெற்ற பாடல்
இன்றைய பதிவில்... 


பிறக்கும் உயிர்க்குப் பெருந்துணையே குணம்
சிறக்கும் மனிதர்க்கு வருந்துணையே
வெறுக்கும் வினைதனைச் செய்திடினும் மனம்
பொறுக்கும் தாயே மகமாயி...1 

இருக்கன்குடி என்னும் தலத்தினளே அருள்
சுரக்கும் கற்பகத் திருவினளே..
இருகை ஏந்தி உன்னிடம் நின்றேன் 
திருக்கண் நோக்கிப் பொழிந்திடுவாய்.. 2


நேர்வழி யதனில் நின்றறியேன் நித்தம்
நின்முகம் பார்த்துப் பணிந்த றியேன்..
சீர்கொண்டு உன்புகழ் பாடுதற்கு நல்ல
தென்தமிழ்ச் சொல்லும் நானறியேன்.. 3

அன்புடன் என்னையும் சிந்தை செய்து
அருள் தர அழைத்த  அன்னையளே
உன்முக தரிசனம் முழு மதியாய் நன்மை
தந்திடக் கூடும் பெரு நிதியாய்.. 4

உறும் துயர் தீர்த்திட வரும் வகையாய்
நறுங் குழல் நாயகி என எழுந்தாய்..
கோமதி சங்கரி நாரணியாய்
குறை தீர்த்திட வரும் எழில் பூரணியாய்.. 5

இடுக்கண் தீர்க்கும் தன்மையளே
இருக்கன் குடியின் மகமாயி..
கடுக்கும் வேதனை தனைத் தீர்த்து
கொடுக்கும் கரங்களில் நலம் காட்டு.. 6


வலம் வந்து வணங்கிட நலம் தருவாய்
நலம் தந்து வளம் தந்து துணை வருவாய்
தவம் என்று அறியா மட மனதில்
சிவம் எனும் மங்கலம் தான் அருள்வாய்..7

உடற்பிணி யதுவும் நீங்கிடவே எந்தன்
உளம் உந்தன் வாசலில் தொழுதிடவே 
வலி கொண்ட நெஞ்சுக்கு வழிகாட்டு எந்தன்
விழி தனில் ஆனந்த ஒளி கூட்டு.. 8
***
அனைவரது இல்லத்திலும்
நலம் ஓங்கிடுவதற்கு
அன்னை அருள் புரிவாளாக..

ஓம் சக்தி ஓம்..

கொரோனா எனும் தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

வியாழன், ஜூன் 03, 2021

உயிர்வளி சூழ்கவே

        

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உணவே மருந்து எனும்
அமுதமொழி நம்முடையது...

நம்மைச் சூழ்ந்திருக்கும்
இயற்கையே நம்மைப்
பாதுகாக்க வல்லது..

இயற்கையை நாம் பாதுகாத்தால்
இயற்கை நம்மைப் பாதுகாக்கும்..

இன்றைய பதிவில்
தினமலர் நாளிதழில்
வெளியிடப்பட்டுள்ள
விழிப்புணர்வுக் கட்டுரை..


கட்டுரையை வழங்கியுள்ள
தினமலர் நாளிதழுக்கும்
மருத்துவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..


-: கட்டுரையாக்கம் :-
டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர், சென்னை
***

நம்  உடலில் ஆக்சிஜன் அளவை அதிகமாக ஈர்த்துக் கொள்ளக் கூடிய உணவுகளை, 'ஆக்சிஜன் ரேடிகல் அப்சார்ப் கெப்பாசிட்டி' எனப்படும், ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பை வைத்து கண்டுபிடிப்பர். இதில், குறிப்பிட்ட உணவை பரிசோதனை கூடத்தில் வைத்து, ஆராய்ச்சி செய்யப்படும். ஓ.ஆர்.ஏ.சி., அதிகம் உள்ள உணவை, நாம் அன்றாடம் சாப்பிடும் போது, நம் உடலில் ஆக்சிஜன் அளவை சீராக நிர்வகிக்க முடியும்; ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும்.


ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு. 100 கிராம் கிராம்பை பரிசோதித்ததில், அதில் மூன்று லட்சம் ஓ.ஆர்.ஏ.சி., மதிப்பு உள்ளது தெரிந்தது. இதை மசாலா குழம்பு, தக்காளி சாதம், பிரியாணி என்று அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு கிராம்பாவது நம் உடலுக்கு அவசியம்.



அடுத்து, மஞ்சளில் ஒரு லட்சத்து 2,700 ஓ.ஆர்.ஏ.சி., உள்ளது. மஞ்சளை தேனீரில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம். சமையல் அனைத்திலும் தவறாமல் மஞ்சள் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை தரும்; ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும்.

அடுத்து, பட்டை. இதை பொடி செய்து டீயில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலில் எதில் எல்லாம் சேர்க்க முடியுமோ, அவற்றில் எல்லாம் சேர்க்கலாம். கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு இவற்றிலும் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம். கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிட பழக வேண்டும்.


துளசிச் செடியை சுற்றி வரும் போது தூய்மையான ஆக்சிஜன் கிடைக்கும்.  பத்து இலைகளைப் பறித்து, சுத்தமாக கழுவிய பின், மென்று சாப்பிடலாம். நம் முன்னோர்கள் செய்வதில் நிச்சயம் அர்த்தம் இருக்கும். துளசிக்கு இதனால் தான் அத்தனை முக்கியத்துவம் கொடுத்தனர்.


இது தவிர, எலுமிச்சையை சாறு பிழிந்து குடிக்காமல், முழு பழத்தை வெட்டி, அப்படியே நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும். பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக் கடலை, காராமணி ஆகியவற்றில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும், 'லெகாமா குளோபின்' என்ற கூட்டு வேதிப்பொருள் உள்ளது.

இவை புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளவை. இரும்பு சத்து குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் குறைய வாய்ப்பு உள்ளது. ரத்தத்தில் உள்ள இரும்பும், புரதமும் சேர்ந்த ஹீமோகுளோபின், ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக் கூடியது.
பசலை கீரை, முருங்கை கீரை, தர்பூசணி, அவித்த வேர்க்கடலை, அன்னாசி உட்பட, இந்த சீசனில் கிடைக்கும் இரும்பு சத்து அதிகம் உள்ளவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.
***


கொரானா எனும் தீநுண்மியால்
ஏற்பட்டிருக்கும்
இந்த கொடுமையான காலகட்டம்
விரைவில் தொலைவதற்கு
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்வோம்

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..

காக்க காக்க கனகவேல் காக்க..
நோக்க நோக்க நொடியினில் நோக்க..

ஓம் நம சிவாய.. சிவாய நம ஓம்..
ஃஃஃ