நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி முதல் நாள்
சனிக்கிழமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKHVXS2-y3usMCEMfCF3ge7Z-a3rMFc7DvR_Obu2SzlcAJf9oyyGdcdDuXC3FouUtqG7gWOpciqEZ1F7Sp8d1nMnohxkBU1zsyQUPL4PDW1G8djdAmrgR8bw64ctXJ8PmibkZvQpvbv-lganTFzYuMdXgMXRzrOS1dQfMlgrHMNH3uc0QToWDsOlUQjGo/w290-h400/Screenshot_20220702-135452_Chrome.jpg)
ஆனி..
தமிழ்ப் பஞ்சாங்கத்தின்படி
வருடத்தின் மூன்றாவது மாதமாகும்...
சூரியன் மிதுன ராசியில்
விளங்குகின்ற மாதம்..
உத்ராயண புண்ணிய காலத்தின் ஆறாவது மாதம் ஆனி..
தேவர்களின் மாலைப் பொழுது என்பதாக ஐதீகம்..
கோயில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம் ஆனி..
இம்மாதத்தின் நிறைநிலா நாள் சிறப்புடையது..
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவடிப் பேறு பெற்ற நாள் ஆனி மாதத்தின் மக நட்சத்திரம்..
ஆனி உத்திர நாளில் தான் சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகப் பெருமானுக்கு உபதேசம் செய்ததாக ஆன்றோர் குறிப்பு..
ஆனி மாதத்தின் உத்தர நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகின்றது..
ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்..
அம்மையார் என்ற புகழுக்குரிய காரைக்கால் புனிதவதியார் ஈசனுக்கு மாம்பழத்துடன் அமுது படைத்த நாள் ஆனி பௌர்ணமி..
காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, மாங்கனித் திருவிழா நடைபெறுகின்றது..
ஈசன் - விடை வாகனத்தில் வீதி வலம் அருளும் போது அம்மையாரும் உடன் எழுந்தருள்கின்றார்.. அப்போது மக்கள் மாங்கனியை வழங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்..
மேலும் - பல சிவாலயங்களிலும் லிங்கத் திருமேனிக்குப் பழ அபிஷேகம் நிகழ்த்தப்படுகின்றது..
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் திருக்கோயிலில் ஆனி பௌர்ணமி நாளில் ஸ்வாமிக்கு வாழைப்பழக் குலைகள் சமர்ப்பித்து வணங்குவர்...
திருச்சிராப்பள்ளி - உறையூரில் மேற்கூரையோ விமானமோ இல்லாத கருவறையில் குடி கொண்டிருக்கின்ற ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது..
ஆனி மாத பௌர்ணமியில், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா...
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***