நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 21, 2023

தமிழமுதம் 5

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 5
வியாழக்கிழமை

 குறளமுதம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது..7
*

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.. 5
**
அன்பின் நெல்லை அவர்களது விருப்பத்தின் பேரில் 
ஆன்றோர்களது உரையைப் பின்பற்றி திருப்பாவை பாடலுக்கு மட்டும் எளியேனின் சிற்றுரை..


மாயனை  மதுராபுரியின் மைந்தனை 
தூய நீர் பெருகும் யமுனைத் துறையின் செல்வனை
ஆயர் குலத்தின்  அழகனை 
அணி விளக்கினைத்
யசோதைக்கு பெருமை சேர்க்கின்ற தாமோதரனை -
தூய்மையுடன் மலர் தூவித் தொழுவோம்.. அவனை
வாயாரப் பாடி, மனதார சிந்தித்து வணங்குவோம்..

முன் செய்த பாவங்களும் 
இனி வரவிருக்கும் பாவங்களும் -
அவன் அருளால் நெருப்பில் விழுந்த 
தூசாக  அழிந்து போகும்..

ஆகவே அவனைப் போற்றி வணங்குவதற்கு எழுந்திருப்பாயாக!..
**

திருப்பாசுரம்


பாயும் நீர் அரங்கந்தன்னுள்  பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்வும்  மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்  துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும்  அடியரோர்க்கு அகலலாமே.. 891
**

சிவதரிசனம்
திருத்தாண்டகம்


ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூர் ஆளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.. 6/67/1
-: திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி


பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 5
-: மாணிக்கவாசகர் :-
**

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 7 - 8 


 அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.. 7

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்..8
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. பாசுரங்களும் உங்கள் விளக்கமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. மாயனை மன்னன் பாடலின் விளக்கம் நன்று.

    இன்றைய அமுதமும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  3. பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..