நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 20, 2023

பிறவியற..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 4
 வியாழக்கிழமை

கீழ்த்திசையில் கோயிலை ஒட்டினாற் போல தீர்த்தக்குளம்... 



இதனால் கிழக்கு வாசல் இல்லை.. ராஜகோபுரமும் கிடையாது.. மேற்கில் தான் கோயிலுக்குள் நுழைவதற்கான தோரண வாசல்..

ஸ்ரீ அகத்திய முனிவர் இங்கு வந்த போது அவரால் இறைவனை தரிசிக்க இயலவில்லை..

அவருக்கு மீண்டும் மக்கட் பணியை முன்னிட்டு பிறப்பு இருக்கின்றதாம்!.. { இது என்னுடைய கருத்து}

இப்போது புரிந்திருக்கும் ஞாயிறன்று பதிவில் வெளியிடப்பட்ட கோயில் எது என்று!..

திருநாகேஸ்வரத்தை அடுத்துள்ள தேப்பெருமாநல்லூரில் திகழும்

பிறவிப் பிணி நீக்கும்
ஸ்ரீ வேதாந்த நாயகி உடனுறை ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி 
திருக்கோயில் தான் அது!..

இத்திருத்தலத்திற்கு
தேவாரத் திருப் பதிகங்கள் எதுவும் கிடைக்கப் பெற வில்லை..

மறு பிறவி அற்றவர்களுக்குத் தான் இங்கே வருவதற்கு இயலும் என்பது தலபுராணம்..

தினமும் சூரியனின் கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது படர்வதாக சொல்லப்படுகின்றது..




கோயில் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.. இறங்க இயலாது சுற்றிலும் புதர்கள்.. படித்துறை கிடையாது..

விநாயகர் சந்நிதிக்கு எதிரில் நாக தீர்த்த கிணறு.. 


தற்போது புழக்கத்தில் இல்லை..

தலமரம் வில்வம்.. வன்னியும் சொல்லப்படுகின்றது..

விநாயக மூர்த்தி கபால மாலையுடன் திகழ்வதாக சொல்கின்றனர்.. ஸ்வாமி பூமாலை அலங்காரங்களுடன் இருப்பதால் எதுவும் புலனாகவில்லை..

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி
இங்கு அன்னதான
தக்ஷிணாமூர்த்தி என்று விளங்குவதால் இத்தலத்தில் அன்ன தானம் செய்வதும் பெறுவதும் சிறப்பு..

ஒருசமயம் - ஈசனின் திருவிளையாடலை உணர்ந்து கொள்ளாமல்  நடந்து கொண்ட  சனைச்சரனை - இறைவன் கடுஞ்சினத்துடன் வயிரவக்கோலம் கொண்டு கடுமையாகத் தண்டித்து விட்டார்.. 

அப்போது அம்பாள் ஈசனை சாந்தப்படுத்தி வேதம் ஓதியதால் இத்தலத்தில் வேதாந்த நாயகி..

வலப்பாதத்தை முன்னெடுத்து வைத்தவளாக அம்பிகை வேதாந்த நாயகி..

வயிரவர் மற்றும் துர்க்கையின் திருமேனிகள் இரண்டு விளங்குகின்றன.. 

கிரகங்கள் அனைத்தும் சூரியனை நோக்கியதாக அமைப்பு..

மூலவர் சந்நிதிக்கு அருகில் ராகு கேது நாகங்கள்..

பிரதோஷ அபிஷேக நேரத்தில் மக்கள் நிறைந்து விட்டனர்.. 


மக்களின் மனோ பாவத்தினால்  கணபதி, முருகன், தக்ஷிணாமூர்த்தி சந்நிதிகள் - வெளியில் இருந்தே தரிசித்துக் கொள்ளும்படி
கம்பிக் கதவுகளால் அடைக்கப்பட்டிருந்தன.. 
விளக்குத் தட்டுகளில் மட்டுமே விளக்கு ஏற்றும்படியாக இருந்தது..

மூலஸ்தானத்திலும் யாரும் அனுமதிக்கப்பட வில்லை..

நந்தீசனுக்கு முன்பாக உபயதாரர்கள மட்டுமே.. 

அபிஷேகம் தீப ஆராதனை நிறைவேறிய பின்னரே கம்பிக் கதவுகள் திறக்கப்பட்டன.. 

சண்டேசர் சந்நிதி வழியாக இரும்புத் தடுப்பிற்குள் வந்து அம்பாள், எம்பெருமான் தரிசனம் செய்யும்படி செய்து விட்டதால் எளிதாக இருந்தது.. நெரிசல் தள்ளுமுள்ளு எதுவும் இல்லை..





கோயிலில் இருந்து
அரை கிமீ தூரத்தில் திருநாகேஸ்வரம் ரயிலடி.. அதன் வாசல் வரைக்கும் மக்கள் வரிசை..

நந்தீசன் முன்பாக மக்கள் முன்னதாகவே அமர்ந்து விட்டதால் அருகில் செல்வதற்கு  இயலவில்லை..

மற்ற கோயில்களில் மாதிரி நந்தியின் காதில் கிசுகிசுக்க இயலாத தவிப்பு பலருக்கும்..

ஒற்றைப் பிரகாரத்துடன் கூடிய சின்னஞ்சிறு கோயில்.. சனிக்கிழமையில் பிரதோஷம் ஆனதால் பெருந்திரள்.. ஆயிரம் பேருக்கு மேல் என்று பேசிக் கொண்டனர்..




அன்னதான தக்ஷிணா மூர்த்தி என்பதால் எல்லாருக்கும் அன்ன விநியோகம் நடந்தது..

கேட்டவர்களுக்கு நந்தீசனிடம் இருந்து வில்வ தளம், பூக்கள் வழங்கப்பட்டனவே தவிர இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட வில்லை..

நாகம் நுழைந்த கோமுகம்
2010 ல் சூரிய கிரகணத்தின் போது நாகம் இலை பறித்த வில்வ மரத்தை வணங்கி விட்டு - கோயிலில் இருந்து இரவு எட்டு மணிக்கு நாங்கள் புறப்பட்டோம்.. 



திருநாகேஸ்வரம் ஸ்டேஷனுக்கு 8:15 மணிக்கு வந்த மயிலாடுதுறை தஞ்சை பாசஞ்சர் வண்டியில் ஏறி நலமுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்..

வில்வ மரம்


கோயில்  தலபுராணச் செய்திகள் பற்பலவாக இருக்கின்றன.. அவற்றின் உண்மையை மானுடம் உணர்ந்து கொள்ள இன்னும் நாளாகும்..

நினைத்தவுடன் இந்தத் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய எவருக்கும் இயலாது என்பது உண்மை..

இதைப் பற்றி நிறைய இருக்கின்றன பேசுவதற்கு..
அடுத்தடுத்த பதிவுகளில் பேசுவோம்.. 

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சிவாயவே.. 4/11/3
- : திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

19 கருத்துகள்:

  1. // நந்தியின் காதில் கிசுகிசுக்க இயலாத தவிப்பு பலருக்கும் //

    புன்னகைக்க முடிந்தது. ஏதோ குறையாகவே தோன்றும் பக்தர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  2. 2010 சூரியகிரகணத்தில் நாகம் இலை பறித்ததா?  அது என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த சில பதிவுகளில் விவரம் தருகின்றேன்..

      நீக்கு
  3. திருநாகேஸ்வரம், அடுத்த ஒப்பிலியப்பன் கோவில், அடுத்த கோவில்  என்று சென்றிருக்கிறேன்.  இந்தக் கோவில் பற்றி அதிகம் அறிந்ததில்லை.ஒப்பிலியப்பன் கோவிலிலிருந்து குடவாசல் செல்லும்போதும் சிறிது தூரத்திலேயே சாலையின் வளைவில் ஒரு அழகிய கோவில் தெரியும்.  பெயர் மறந்து விட்டேன். அங்கு செல்லவேண்டும் என்று ஒவ்வொரு பயணத்தின்போதும் நினைத்துக் கொள்வேன்.  முடியாமல் போகும்.  அதே போல பழையாறை கோவில்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தத் தலம் வேறு எந்த வழித்தடத்திலும் இல்லை.. திருநாகேஸ்வரத்தின் ஒரு புறத்தில் உள்ள சிற்றூர்..

      நீக்கு
  4. நாகம் நுழைந்த கோமுகம் - வடிவம் அழகாக இருக்கிறது.

    என்ன கூட்டம்!!! கோயில் பற்றிய தகவல்கள் பல ஆச்சரியம். தீர்த்தம் மனம் வேதனை. கிணறு பயன்பாட்டில் இல்லை என்பது உட்பட....சுற்றிலும் உள்ள நீர் நிலைகள் எல்லாம் பாழாகும் போது தீர்த்தம் இப்படி ஆகிற்தே என்று வருத்தம். பராமரித்தால் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிணற்றில் கம்பி வலை போடப்பட்டு உள்ளது.. காற்றில் பறந்த குப்பைகளும் அதில் கிடக்கின்றன..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நாகம் இலை பறித்த வில்வமரமா!!? அதற்கான கதை அடுத்து வருமோ, துரை அண்ணா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த சில பதிவுகள் கழித்து மேல் விவரங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மக்கள் கூட்டம், வரிசையில் நின்று தரிசனம் செய்வதை பார்க்கும் போது தெரிகிறது இறைவனின் பெருமை.
    அவர் நினைத்தால்தான் தரிசனம் செய்யமுடியும் என்று தெரிகிறது.
    கோவில் விவரங்கள் அருமை.
    மனதால் வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. கோவில் விவரங்கள் அருமை.
      மனதால் வேண்டிக் கொள்கிறேன்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கோவிலின் சிறப்பை அறிந்து கொண்டேன். நாகர் படங்கள் நன்றாக உள்ளது. அத்தனை தெய்வங்களையும் பணிவுடன் வணங்கிக் கொள்கிறேன்.

    /நினைத்தவுடன் இந்தத் திருக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய எவருக்கும் இயலாது என்பது உண்மை../

    ஆம்.. எந்த ஒரு கோவிலுக்கும் செல்ல இறைவனின் ஆஞ்கையுடன் ,அவனருளும் வேண்டும். அவனன்றி ஓர் அணுவும் அசையாததல்லவா?.. அருமையான கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஒரு கோவிலுக்கும் செல்ல இறைவனின் ஆஞ்கையுடன் ,அவனருளும் வேண்டும்..

      உண்மை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  8. இத் தல இறைவனின் சிறப்புக்கள் அறிந்தோம்.

    உங்கள் பகிர்வில் இறைவனை கண்டு வணங்கும் பாக்கியம் பெற்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  9. கோயில் இருப்பதையே இப்போது தான் அறிந்து கொண்டேன். அதுவே பெரிய விஷயம். எங்கே இருந்து போகப் போறோம்? இங்கேயே தரிசனம் பண்ணிக்க வேண்டியது தான்.
    அதென்ன நாகம் இலை பறித்ததா? சூரிய கிரஹணத்தின் போது? கேள்விப் பட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த சில பதிவுகள் கழித்து மேல் விவரங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா ..
      .

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..