நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 15, 2024

திருநடனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 2
புதன் கிழமை

தஞ்சை பாபநாசம் கும்பகோணம் வட்டாரங்களில் வசந்த உற்சவ வைபவமாக ஸ்ரீ காளி திருவீதி எழுந்தருளி திருநடனம் நிகழ்த்துவது சிறப்பு..


சமயம் சார்ந்த மக்கள் தங்கள் இல்லத்தின் வாசலில் அம்மனை வரவேற்று குறை இரந்து நிற்பர்.. அம்மனும் அருள் வாக்கு கூறி வாழ்த்திச் செல்வாள்.. 

அந்த வகையில்
குழந்தையைத் தாங்கிய வண்ணம் அம்மன் நடமிடும் காட்சி..

நோய் நொடிகள் நெருங்காமல் இருக்கவும் துஷ்டங்கள் தொல்லைகள் விலகிச் செல்லவும் இப்படியான நிகழ்வுகள்..

இந்தக் காணொளி சென்ற வருடத்தில் கிடைத்ததாகும்..


அம்மா உன் கரங்கொண்டு
அரவணைத்து ஆதரிப்பாய்..
அம்மா உன் பேர் பாட 
விழியோடு மொழி கொடுப்பாய்..

அம்மா என் குரல் கேட்டு
குறை நீக்கி நலம் சேர்ப்பாய்..
அம்மா என் தமிழ் கேட்டு 
வேப்பிலையால் வினை தீர்ப்பாய்..

ஆடி வரும் பாதங்களை
அன்புடனே தொழுகின்றேன்..
அம்மா உன் அருள் கொண்டு
அனுதினம் வாழுகின்றேன்..

குற்றங்களை மறந்து விட்டு
குறுநகை நீ காட்டு..
குறுநகை தனைக் காட்டி
என்மனதை நீ தேற்று..

வேப்பிலையின் நாயகியே
வேதனையை விரட்டிடுவாய்
தீராத நோய் நொடியை 
திருவிழியால் தீர்த்திடுவாய்..

வாசல் வழி தொழுவோர்க்கும்
வாழ்வருளும் காளியம்மா 
கை கொடுத்துக் காப்பவளே
கலி தீர்க்கும் காளியம்மா..

கார் முகிலின் வடிவாகி
கருணை முகம் காட்ட வேணும்
கண் மலர்ந்து அடியாரும்
கைதொழுது போற்ற வேணும்..

வேண்டியது எல்லாமும் 
வித்தகியே நீ கொடுப்பாய்
வினைதரு வினைகளையே
வேப்பிலையால் நீ தடுப்பாய்..

நன்றான கரிமுகனும் 
நலங்கோடி தருகின்றான்
குன்றாத குளிர்நிலவாய்
குகனருள் பொழிகின்றான்..

சிவமணி திருமணியாய்
திருவருள் தான் வழங்க
கோவிந்தன் சோதரியே
குன்றாத கொடை அருள்வாய்!..


ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. அம்மா என்றாலே அருள் நிறைந்தவள்தானே...   வரங்களை அள்ளித் தர அம்மாவை இறைஞ்சுவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அம்மாவைப்பற்றிய சிறப்பான பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. காளி அம்மாவின் திரு நடனக் காட்சிகள் கண்டு வணங்கினோம். அனைவர் நலனுக்கும் அவளருளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அனைவர் நலனுக்கும் அவளருளை வேண்டுவோம். ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குழந்தையை கைகளில் தாங்கியபடி காளி அம்மனின் நடன காட்சி அற்புதமாக இருந்தது. அன்னை அனைவருக்கும் நல்லதையே நடத்தி தர அம்மனை வணங்கி பிரார்த்தித்துக் கொண்டேன் .

    தாங்கள் இயற்றிய அம்மன் பாமாலையையும் படித்து வணங்கி கொண்டேன். நீங்கள் அன்னைக்கு சூட்டிய பாமாலை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. // அன்னைக்கு சூட்டிய பாமாலை அருமை.//

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. காளியின் காணொளி அருமை. உங்கள் பாமாலை அருமை.
    அம்மா அனைவரையும் நலமாக வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// அம்மா அனைவரையும் நலமாக வைக்க வேண்டும்... ///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..