நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 27, 2017

பண் உகந்த பரமன்

இன்று ராகு கேது பெயர்ச்சி 

சாயாக்கிரகங்களாகிய ராகுவும் கேதுவும் -
தலை கீழாகச் சுற்றி வருவதாக குறிக்கப்படுகின்றது..

இன்று மதியம் 12.48 மணியளவில் -

ராகு - சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் 
(மக நட்சத்திரம் முதல் பாதத்திலிருந்து ஆயில்யம் நான்காம் பாதத்திற்கும்)

கேது - கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்
(அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதத்திலிருந்து அவிட்டம் இரண்டாம் பாதத்திற்கும்)

பெயர்ச்சி ஆகின்றார்கள் - என, கணித்துள்ளனர்..

ராகு கேது பெயர்ச்சியினால் -
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் ?..

அதெல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம்..


இதற்கு என்னென்ன பரிகாரம்?..


முடிந்தவரைக்கும் ராகு கேது இருவருக்கும் ஐஸ் வைக்கலாமா!.. 

அதற்கெல்லாம் இருவரும் மயங்கி விடுவார்களா?..

அதற்கெல்லாம் மயங்க மாட்டார்கள்.. 

வருவது எதுவானாலும் அனுபவித்துக் கழிக்க வேண்டியது தான்..
ராகுவும் கேதுவும் நமக்குக் கொடுப்பதெல்லாம் - 
போன ஜன்மத்தின் கணக்கு வழக்கில் மிச்சம் மீதி தான்!..

ஆனாலும் - பரிகாரம் என்பது அவரவர் விருப்பம்..




புகழ் பெற்ற சிவாலயங்களிலும் குறிப்பாக நாகம் வணங்கியதாக புகழ்ந்துரைக்கப்படும் திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

வீட்டின் அருகில் உள்ள திருக்கோயிலில் இறைவழிபாடு செய்வது சாலச் சிறந்தது..

ஏழை எளியோர்க்கு உதவுவது மிகச் சிறந்தது..

நாகம் வழிபட்டதாகச் சொல்லப்படும் சிவாலயங்களுள் சிறப்பான தலம் -

திருப்பாதாளீச்சரம்.. 

இத்திருத்தலம் இன்றைக்கு பாமணி என்று வழங்கப்படுகின்றது..

பாம்பணி என்பதே பாமணி என்று மருவியது என்கின்றனர்..

இத்திருத்தலம் - மன்னார்குடியில் இருந்து 2 கி,மீ., தொலைவில் உள்ளது..

இத்திருத்தலத்தில் இன்று ராகு கேது பெயர்ச்சி சிறப்பாக நடைபெறுகின்றது..

இத்திருத்தலத்தில் -
திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டு திருப்பதிகம் அருளியுள்ளார்..

திருநாவுக்கரசரும் சுந்தரரும் தமது திருவாக்கினால் குறித்துள்ளனர்..

திருப்பாதாளேஸ்வரம் குறித்த முந்தைய பதிவை இங்கே காணலாம்..

இன்றைய பதிவில்  இடம்பெற்றுள்ள ஸ்வாமி அம்பாள் படங்கள் தேவார திருத்தலங்கள் எனும் தளத்திலிருந்து பெறப்பட்டவை..

ஏனைய படங்கள் - எனது கைவண்ணம்.. 

இன்றைய பதிவில் - திருஞானசம்பந்தப் பெருமான் அருளியுள்ள திருப்பதிகம் இடம்பெறுகின்றது.. 

இத்திருப்பதிகம் முழுதும்  
ஈசன் எம்பெருமான் தனது செஞ்சடையின் மேல் பிறை, ஊமத்தம் பூ , கொன்றை மலர் ஆகியவற்றுடன்  கங்கையணிந்து உமையொரு பாகனாகத் திகழ்வதனை ஞான சம்பந்தப் பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்..

மேலும் - 

ஈசனின்  திருமேனியில் நாகம் விளங்குவதை - 
திருப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாடலிலும் குறித்தருள்கின்றார்...      

இத்திருப்பதிகத்தினால் நமக்கு என்ன நன்மை!?..

பாம்புகள் என்றாலே மனித குலத்தில் 99.9% பேருக்கு அச்சம் தான்.. 

அதிலும் விஷமுடைய  நாகங்கள் என்றால் சொல்ல வேண்டியதில்லை..

அத்தகைய நாகங்கள் நம்முடைய வழியில் இருந்து விலகுகின்றன...

அவ்வளவு தானா?...

அதை விட மேலாக -

மனித வடிவுடன் அலையும் நாகங்கள் பற்பல..

அவைகளும் நம்மை விட்டு விலகும்.. அல்லது,
நாம் அவற்றை விட்டு விலகுவோம்!...


திருத்தலம்
திருப்பாதாளீச்சுரம் - பாமணி


ஸ்ரீ பாதாளேஸ்வரர்
ஸ்ரீ அமிர்த நாயகி
இறைவன் - ஸ்ரீ நாகநாதர், பாதாளேஸ்வரர்
அம்பிகை  - ஸ்ரீ அமிர்த நாயகி

தல விருட்சம் - மா
தீர்த்தம் - நாக தீர்த்தம்



திருஞான சம்பந்தர் அருளிய திருப்பதிகம்
முதலாம் திருமுறை
திருப்பதிக எண் - 108.


காவிரித் தென்கரையின்
நூற்று நான்காவது திருத்தலம்..

திருப்பதிகம் வழங்கியோர் 
தருமபுர ஆதீனம்
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


மின்னியல் செஞ்சடைமேல் விளங்குமதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையாள் ஒருபாகத்து அமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே..(01)

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில் நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலினால் இனியான் உறைகோயில் பாதாளே!..(02)

நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்றெரித்து உகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே..(03)


அங்கமும் நான்மறையும் அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே..(04)

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவுந் திகழ்வித்துத்
தேய்பிறையும் அரவும் பொலிகொன்றைச் சடைதன் மேற்சேரப்
பாய்புனலும் உடையான் உறைகோயில் பாதாளே!..(05)

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன் மேலன்று
விண்ணியன் மாமதியும் உடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும் 
 பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே..(06)


விண்டலர் மத்தமொடு மிளிரும் இளநாகம் வன்னிதிகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்து உரைவேத நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே!..(07)

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன்தலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்கணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே!..(08)

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே!..(09)


காலையி லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன்று 
ஆல விடநுகர்ந்தான் அவன் தன்னடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே!..(10)

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத்து இருப்பாரே!..(11)
- திருச்சிற்றம்பலம் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *  

செவ்வாய், ஜூலை 18, 2017

திருப்பாதாளீச்சரம்

ஒரு சமயம் நான்முகனுக்கு திருப்பாற்கடலில் இருந்து அமுத மயமான நான்கு மாங்கனிகள் கிடைத்தன..

அவற்றை என்ன செய்வதென்று யோசித்தார்..

முடிவில் -

நான்கு மாங்கனிகளில் இரண்டினை ஆனைமுகனுக்கும் அறுமுகனுக்கும் வழங்கி மகிழ்ந்தார்..

மீதமுள்ள இரண்டு பழங்களையும் காஞ்சி மற்றும் திருப்பாதாளீஸ்வரம் ஆகிய தலங்களில் செய்த சிவபூஜையில் சமர்ப்பித்து வணங்கினார்...


அதனால்,

திருப்பாதாளீஸ்வரம் எனும் தலத்தில் ஈசன் எம்பெருமானுக்கு மாங்கனி நிவேதனம் செய்வதனால் தீராத வல்வினைகள் எல்லாம் தீர்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு..

இத்தலத்தில் அம்பிகைக்கு அமிர்த நாயகி என்பது திருப்பெயர்..

இங்கே சிவபூஜை செய்வதற்கு நாட்டம் கொண்ட ஆதிசேஷன் -
தனஞ்சயன் எனும் முனிவராக தவமிருந்து வழிபட்டபோது -

அவரது தவத்திற்கு இரங்கிய எம்பெருமான் -
பாதாளத்திலிருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டார்..

அதனால் -
திருப்பாதாளீஸ்வரம் என்பது திருப்பெயர்..

ஆனாலும்,
இன்றைக்கு இத்தலம் பாமணி என்றழைக்கப்படுகின்றது..

இத்திருத்தலம் எங்கே இருக்கின்றது?..

மன்னார்குடியில் இருந்து வடக்காக 2 கி.மீ., தொலைவில்..

திருப்பாதாளீச்சுரம்
- பாமணி -


இறைவன் - ஸ்ரீ நாகநாதர், திருப்பாதாளீஸ்வரர்,
அம்பிகை - ஸ்ரீ அமிர்த நாயகி..
தீர்த்தம் - நாக தீர்த்தம்
தல விருட்சம் - மா மரம்..

சுகல முனிவர் என்பவர் இத்திருவூரில் இருந்து தவம் புரிந்த வேளையில் அவருடைய பசு - மேய்ச்சல் நிலத்தில் ஒரு புற்றினைக் கண்டது..

உள்ளுணர்வினால் புற்று சிவலிங்க வடிவமாக இருப்பதைக் கண்டு தினமும் புற்றின் மீது பால் சொரியலாயிற்று..



இதன் பிறகு பசுவின் மடியில் பால் குறைவதைக் கண்ட முனிவர் பசுவின் நடவடிக்கைகளைக் கவனித்தார்..

அப்பசு மேயும் பொழுது புற்றில் பால் பொழிவதையும் கண்டார்...

எல்லாவற்றையும் கடந்த முனிவர்..
ஆனாலும் ஆய்ந்து அறியாமல் சினங்கொண்டு -
புற்றினுள் பாலைச் சொரிந்த பசுவைப் பிரம்பால் அடித்து விட்டார்..

இதனால் மிகுந்த வேதனையடைந்த பசு -
புற்றின் மேல் மோதி தனது ஆற்றாமையைக் காட்டியது...

அங்கிருந்த குளத்தில் வீழ்ந்து தன்னுயிரைத் தியாகம் செய்தது..

அவ்வேளையில் - ஈசன் எம்பெருமான் விடை வாகனராக
அந்தப் பசுவிற்குக் காட்சி நல்கி மோட்சமளித்தார்..

பசு வழங்கும் கொடையாக
என்றென்றும் எப்போதும் பால், தயிர் மோர், வெண்ணெய், நெய் - எனும் ஐந்தையும் மங்களப் பொருட்களாக தேவரும் மனிதரும் போற்றி மகிழ்வர் என வரமளித்தார்..

மேலும் - அந்தப் பசுவின் வம்சமாக
மகிஷம், நந்தா, பத்ரா, சுமனா, சுபத்ரா -
எனும் இனங்கள் பல்கிப் பெருகவும் வரமளித்தார்..


பொதுவாக சுயம்பு லிங்கங்கள் புற்றுருவானவை..
நித்ய அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை..
விசேஷ காலம் எனில் கவசம் சாத்தி திருமுழுக்கு செய்விக்கப்படும்..

ஆனால் -
இத்திருத்தலத்தில் - சிவலிங்கத் திருமேனிக்கு வழக்கமான அபிஷேகங்கள்     கவசம் சாத்தப்படாமல் நிகழ்வுறுகின்றன..

அபிஷேக வேளையில் பசு முட்டியதால் ஏற்பட்ட பிளவினை சிவலிங்கத்தின் திருமேனியில் காணலாம்...

கடந்த ஞாயிறன்று (16/7) இத்திருத்தலத்தில் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன்..

இதற்கு முன் பலமுறை இங்கே சென்றிருக்கின்றேன்..

ராகு கேது மற்றும் கால சர்ப்ப  தோஷ நிவிர்த்திக்கான பரிகார தலம் என்பதால் ஞாயிற்றுக் கிழமை மாலை  (4.30 - 6.00) ராகு காலத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நிகழ்வுறுகின்றன..

மகா மண்டபத்தினுள் தென்புறமாக அமைந்துள்ள ஆதிசேஷனுக்கு
சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நிகழ்கின்றன...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிலா ரூபத்தின் முன்பாக நடைபெற்ற பரிகார பூஜைகள் - தற்போது முன் மண்டபத்தில் ஆதிசேஷனின் உற்சவ பஞ்சலோக திருமேனிக்கு நடைபெறுகின்றன..

திருக்கோயிலின் எதிரில் நாக தீர்த்தம்..

ராஜகோபுரம் இல்லை..தோரண வாயிலாக விளங்குகின்றது..

திருக்கோயிலில் தென்புறமாக சிறு கோயிலில் ஸ்ரீ காளியம்மன் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனள்..

திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் தென்புறமாக தல விருட்சமாகிய மாமரம்..

கொடி மரம்.. விமானத்துடன் கூடிய நந்தி மண்டபம்..

வட புறம் ஸ்ரீ அமிர்த நாயகி அம்பிகையின் சந்நிதி..
தனியாக திருச்சுற்றுடன் விளங்குகின்றது..

இந்த சுற்று மண்டபத்தின் சுவர்களில் தான்
தல புராண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன..

அம்பிகையை வலம் வந்து வணங்கிய பின் திருக்கோயில் தரிசனம்..

திருமூலத்தானத்தினுள் கருணையே வடிவாக எம்பெருமான்...
வெள்ளிக்கவசம் திருமேனியை அலங்கரிக்கின்றது...

பாசப் பழிகளைக் களையும் பரமன் சூழொளி விளக்கில் ஒளிர்கின்றான்..

பார்க்கப் பார்க்க பரவசம் மேலிடுகின்றது.. உள்ளம் புத்துணர்வு பெறுகின்றது..

சந்நிதியின் வலப்புறம் சோமாஸ்கந்த திருமேனி..
இடப்புறம் - சிவகாம சுந்தரியுடன் நடராஜப் பெருமான்...

தெற்குப் புறமாக ஒரு வாசலும் இருக்கின்றது..

இந்த வாசலின் அருகில் தான் ஆதிசேஷனின் திருமேனி...
எந்த வினையானாலும் வந்த வழி ஏகிட வேண்டும்.. - என, வேண்டிக் கொள்கின்றோம்..

திரும்பவும் அதிகார நந்திவை வலம் வந்தால்  -  தெற்குப் பிரகாரம்..

திருக்கோட்டத்தில்  அழகான நர்த்தன விநாயகர்..

அடுத்து சிங்கங்கள் தாங்குகின்ற மண்டபத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி..

கன்னி மூலையில் க்ஷேத்ர விநாயகர்..

அடுத்ததாக - திருமாளிகைப் பத்தியில் -
வள்ளி தெய்வயானையுடன் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி..

எதிரில் திருக்கோட்டத்தில் அண்ணாமலையார்..

முருகன் சந்நிதியை அடுத்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி சந்நிதி..
இங்கே ஸ்ரீ காளியும் ஸ்ரீ சரஸ்வதியும் ஒருங்கே உறைகின்றனர்..

திருக்கோயிலின் வாயு மூலையில் துளசி மாடம்...


வடக்குப் பிரகாரத்தின் திருக்கோட்டத்தில் ஸ்ரீ நான்முகன் ஸ்ரீ துர்கை..
ஸ்ரீ சண்டேசர் சந்நிதி..

திருமதிலின்  ஓரமாக அமிர்த கூபம் எனும் கிணறு..

ஈசான்யத்தில் மேற்கு முகமாக ஸ்ரீ பைரவ மூர்த்தி...

ஞாயிறன்று தேய்பிறை அஷ்டமி ஆனபடியால் ஸ்ரீ வயிரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றிருந்தன..

அருகில் நவக்கிரக மேடை..

அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் மாணிக்க வாசகருடன் சந்திரன்..
அந்தப் பக்கமாக சூரியன்...

மீளவும் - ஸ்ரீ நாகநாதர் தரிசனம்..
சொல்லொணாத அமைதி மனதில் ததும்புகின்றது..

மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது - திருக்கோயில்..

கடந்த ஏப்ரல் 2/ 2017 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது..

திருஞான சம்பந்தப்பெருமான் இத்தலத்திற்கு திருப்பதிகம் அருளியுள்ளார்..

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் தம் திருவாக்கில் வைப்புத் தலமாக விளங்குகின்றது..

திருக்கோயிலில் எடுக்கப்பட்ட படங்களுள் ஒரு சில படங்கள் மட்டுமே இன்றைய பதிவில்...

அடுத்தொரு பதிவு மேலும் சில தகவல்களுடன் தொடரும்..

திருப்பாதாளீச்சுரம் எனும் பாமணி மிகச் சிறிய கிராமம்..
கோயிலின் அருகில் தேநீர்க்கடைகள் கூடக் கிடையாது..

அர்ச்சனைப் பொருள்கள் கோயில் வளாகத்தில் கிடைக்கின்றன..

மன்னார்குடி  நகரப் பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கு  ஒரு முறை பேருந்துகள் இயங்குகின்றன..

விருப்பம் எனில் ஆட்டோவில் செல்லலாம்..

திருக்கோயிலிலிருந்து வெளியே வந்து பேருந்திற்காகக் காத்திருக்கும்போது
மீண்டும் இத்திருக்கோயிலுக்கு வரும் நாளை எண்ணுகின்றது - மனம்..


அங்கமும் நான்மறையும்  அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல் சூழ்ந்த பாதாளே!.. (1/108)
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *