நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆடிப்பெருக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடிப்பெருக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 01, 2016

தண்ணீரும் காவிரியே..

நலம் தரும் பொன்னி
நீரளந்த மேகத்துக்கும் வாழ்த்துச் சொல்லடியோ - தங்கம்
சீரளந்த காவிரிக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

ஏரளந்த மயிலைக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ - வரப்பில்

சேறளந்த உழவனுக்கும் வாழ்த்துச் சொல்லடியோ

நாற்றளந்த காற்றுக்குந்தான் வாழ்த்துச் சொல்லடியோ - தென்னங்  

காற்றளந்த கழனிக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ!..  

நாற்றுநட்ட நங்கைக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லடியோ - வயலில்

களையெடுத்த கன்னிக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லடியோ!..


கதிர் பார்த்த கந்தனுக்கும் வாழ்த்துச் சொல்லடியோ - களத்தில்
கரை சேர்த்த ஐயனுக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..  

கதிரடிச்ச தம்பிக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லடியோ - பதரை
தூத்தி விட்ட பாசத்துக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

நெல்லளந்த கருணைக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ - களத்தில்
பொன்னளந்த சாமிக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ!..

நிறைபாரம் வண்டிக்குந்தான் வாழ்த்துச் சொல்லடியோ - நிமிர்ந்து
நடைபோடும் காளைக்குந்தான் வாழ்த்துச் சொல்லடியோ!..

சீரளந்த ஊருக்குந் தான் வாழ்த்துச் சொல்லடியோ - வீட்டில்
சோறளந்த தெய்வத்துக்கும் வாழ்த்துச் சொல்லடியோ!..

கல்லணையில் பொங்கி வரும் பொன்னி
அடாடா... அருமை.. அருமை!.. அசத்திட்டீங்க.. அக்கா!..

வாம்மா.. தாமரை!.. முன்னமே வந்துட்டியா?..

நீங்க ஆனந்தமா.. உழவுப் பாட்டு பாடிக்கிட்டு இருந்தப்பவே வந்துட்டேன்.. இடையில தொந்தரவு செய்ய வேணாம்..ன்னு தான்... அக்கா... எவ்வளவு அருமையா அட்டகாசமா பாடுறீங்க... பொறாமையா இருக்கு அக்கா!...

அதெல்லாம் ஒன்னுமில்லை.. தாமரை.. நான் பாட்டுக்கு ஏதோ... தெரிஞ்சதை பாடினேன்... இதில என்ன ஆச்சர்யம் இருக்கு?...

உங்களுக்குத் தெரியாது அக்கா.. சந்தம் எல்லாம் அருமையா இருக்கு.. வயற் காட்டில நாத்து நடுற பொண்ணுங்க பாடுற மாதிரியே இருக்கு...

தாமரை... நான் படிக்கிறப்போ.. மூனு வருஷம் வயக்காட்டுல ஒத்தையடிப் பாதையிலதான் பள்ளிக் கூடம் போனேன்.. அது தான் வாழ்க்கையில மறக்க முடியாத விஷயம்.. நாங்க பத்து பொண்ணுங்க... வழி நெடுக பாடிக்கிட்டும் ஓடிக்கிட்டும்... அந்த நாளெல்லாம் இனி யாருக்கும் கிடைக்காதும்மா!..

நிஜந்தான் அக்கா!.. வயற்காட்டையெல்லாம் அழிச்சி வீட்டு மனையா ஆக்கிட்டாங்க... இனி வரப்பாவது.. களத்து மேடாவது.. எல்லாம் கனவு மாதிரி போச்சு...

தாமரை.. நாளைக்கு ஆடிப் பதினெட்டு.. ஞாபகம் இருக்கா!..

என்னக்கா.. இந்த மாதிரி கேட்டுட்டீங்க... மறக்க முடியுமா!... காலையிலயே பெரிய மார்க்கெட்டுக்குப் போய் - காதோலை.. கருகமணி.. மஞ்சள் சரடு, விளாம்பழம், பேரிக்காய், கொய்யாப்பழம், மாம்பழம், நாவற்பழம், தாம்பூலம் எல்லாம் வாங்கிட்டோம்.. காலையில காப்பரிசி செஞ்சதும் பூச்சந்தைக்குப் போய் பூ வாங்கிக்கிட்டு ஆற்றுக்குப் போய் சாமி கும்பிட்டு வர வேண்டியது தான்..

நாங்க சாயங்காலமா ஆற்றுக்குப் போகின்றோம்.. பசங்க பள்ளிக்கூடம் விட்டு வரணும் தானே...

கரந்தையில கருணாசாமி கோயில்ல இருந்து அம்பாள் புறப்பட்டு புற்று மாரியம்மன் படித்துறைக்கு வந்திருப்பா.. அப்படியே தரிசனம் செஞ்சுட்டு வரலாம்..


திருவையாற்றில் சுழித்தோடும் காவேரி
இந்த வருஷம் காவேரியில தண்ணி முன்னாலேயே திறந்து விட்டுட்டாங்க.. திருவையாற்றுல.. படித்துறைய அலசிக்கிட்டு புதுத் தண்ணி ஓடுது.. டீவி-ல பார்த்தேன்... ஜனங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்!..

அதனல தானே - தண்ணீரும் காவிரியே!.. அப்படி..ன்னு ஔவையார் பாடினாங்க!.. காவேரியில தண்ணீர் வந்தால் தான் வாழ்க்கையே.. விவசாயம் ஆரம்பிக்க இதுதானே ஆதாரம்..

ஆடிப்பட்டம் தேடி விதை..ன்னு சொல்வாங்களே!.. வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைக் காட்டிலும் - அவரை, பாகல், சுரை, பீர்க்கு..ன்னு விதை போடுவாங்க.. வயக்காட்டுல விவசாய வேலைகள ஆரம்பிபாங்க..  

ஆமாம் அக்கா!.. நிலம் செழிக்க நீர் வேண்டும். நீர் செழிக்க இயற்கை வளம் வேண்டும்... காடு கரையை அழிக்காமல் இருக்கணும்..

நம்முடைய வாழ்க்கையே இயற்கையோடு  - பின்னிப் பிணைந்த வாழ்க்கை தானே!... இயற்கையை எல்லா விதத்திலும் ஒத்து உணர்ந்து வாழ்ந்தார்களே!.. அந்த பாரம்பர்ய வாழ்க்கையில ஒரு நாள் தான் ஆடிப்பெருக்கு..

ஆமாம்.. அக்கா!.. நீங்கள் சொல்வது சரிதான்!..

இப்பவும் காவிரிக் கரையில எங்கே பார்த்தாலும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பா சந்தோஷமா கொண்டாடுவாங்க...

புதுமணத் தம்பதிகள் புதுத் தண்ணியில குளிச்சி முழுகி புது வேட்டி சேலை கட்டிக்கிட்டு காதோலை கருகமணி மஞ்சள் குங்குமம் இதெல்லாம் சீதனமா ஆத்துல விடுவாங்க.. சிலபேரு வீட்டிலேயே குளிச்சிட்டு வர்றதும் உண்டு...

அக்கா.. இந்த பதினெட்டாம் பெருக்கு காவிரி ஆத்தங்கரையில மட்டுந்தான் கொண்டாடுவாங்களா?.. 

இல்லேம்மா... தஞ்சை நாகை திருவாரூர் திருச்சி.. ந்னு எல்லா மாவட்டங்கள்.. லயும் சிறப்பாகக் கொண்டாடுவாங்க ... ஸ்ரீரங்கம் காவிரியில பெருமாள் தீர்த்தமாடி காவிரிக்கு சீர் கொடுப்பார்..

ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சோழ வளநாட்டில் - காவிரி மட்டுமல்லாது வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, வடவாறு, புது ஆறு இப்படி எல்லா ஆத்தங்கரையிலயும் கொண்டாட்டமா இருக்கும்..

கடைமடைப் பகுதிகள்..ல காவிரித் தண்ணி போய்ச் சேரலைன்னாலும்.. வீடுகள்..லயும் கிணற்றங்கரையிலயும் சந்தோஷமா சாமி கும்பிடுவாங்க...

அக்கா.. இந்த வருஷம் ஆடி அமாவாசையும் சேர்ந்து வருது.. இல்லையா!..

ஆமாம்.. உங்க அத்தான் காலையிலயே.. திருவையாற்றுக்குப் போய் குளிச்சிட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு ஐயாறப்பர் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வந்து விடுவார்... சரியான நெரிசலா இருக்கும்.. 



அருள்மிகு அறம் வளர்த்த நாயகி
இப்போ திருவையாற்றுல.. ஆடிப்பூர திருவிழா நடந்துகிட்டு இருக்கு.. ஒவ்வொரு நாளும் அலங்காரமா அறம் வளர்த்த நாயகி திருவீதி எழுந்து வர்றா.. 

அதோட அப்பர் ஸ்வாமிகள் கயிலாய தரிசனம் கண்டதும் ஆடி அமாவாசை.. நாளில் அப்படி..ன்னு ஐதீகம்..

அக்கா.. நீங்க.. திருவையாற்றில் கயிலாய தரிசனம் பார்த்திருக்கீங்களா..

ஒரு தடவை பார்த்திருக்கின்றேன்... ஆயிரக்கணக்கில கூடியிருப்பாங்க.. ஜனங்க...

நாளைக்கு நாமும் திருவையாற்றுக்கு போவோமா.. அக்கா!..

போகலாமே.. இங்கே மத்தியானம் அமாவாசை விரதம் முடிச்சதும் கொஞ்ச நேரம் ஓய்வு.. சாயுங்காலமா போகலாம்.. உங்க அத்தானும் வருவார்..ன்னு நினைக்கிறேன்..

சரி அக்கா.. நான் புறப்படுகின்றேன்..


இந்தாம்மா.. தாமரை.. குங்குமம் எடுத்துக் கொள்!..

அக்கா.. குங்குமம்..ன்னதும் ஞாபகத்துக்கு வருது.. உங்க தஞ்சையம்பதியார் கோலக் குங்குமம்..ன்னு ஒரு பதிவு எழுதியிருக்காங்க.. படிச்சீங்களா?...

ம்.. படிச்சேனே...நல்லா.. எழுதியிருந்தாங்க!..

நாமளும் ஒரு நாளைக்கு குங்குமம் செய்வோம்..அக்கா!.. சரி.. நான் நாளைக்கு சாயுங்காலம் வருகின்றேன் அக்கா!...

ஆகட்டும் தாமரை!...


ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி..
வாடியம்மா எங்களுக்கு வழித் துணையாக
எம்மை வாழவைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக!..

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள்..
அனைத்து அறங்களும் பொங்கிப் பெருகட்டும்!..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
***

சனி, ஆகஸ்ட் 03, 2013

நடந்தாய் வாழி காவேரி!

இன்று ஆடிப்பெருக்கு.

காவிரிக் கரையின் இருமருங்கிலும் வாழும் மக்களுக்கெல்லாம் தேனாகத் தித்திக்கும் நன்னாள்.


இறையறம் ,  மனையறம் - இவ்விரண்டிலும் ஆனந்தம் பொங்கிப் பெருக  நீர் வளமே அடிப்படை. 

தட்சிணாயனம் எனக் குறிக்கப்படும் - சூரியனின் தென் திசைப் பயண காலத்தின் முதல் மாதமாகிய ஆடியில் தான் அகமும் புறமும் செழிக்க எத்தனை எத்தனை விசேஷங்கள்!..  

விவசாயிகள் தங்கள் உழவுப் பணிகளைத் துவக்கும் மாதம் ஆடி மாதம்!.. 

நாம் சோற்றில் கையை வைக்க வேண்டி,  உழவர் - தங்கள் காலைச் சேற்றில் வைக்கும் மாதம்.

''..தண்ணி.. எப்ப திறக்குறாங்களாம்?..'' - என,   காவிரிக்கரை விவசாயிகள் எல்லோரும் எதிர்பார்க்கும் மாதம்!...


ஆடிப்பட்டம் தேடி விதை - என்பது பொருள் நிறைந்த சொல்வழக்கு.

நிலம் செழிக்க நீர் வேண்டும். நீர் செழிக்க குன்றாத இயற்கை வளம் வேண்டும்.

இயற்கையை நாம் வாழும் வாழ்க்கையோடு  - பின்னிப் பிணைத்தனர் நம் முன்னோர்.

அத்துடன் நிற்காமல் - இயற்கையைப் பலவிதங்களில் போற்றி மகிழ்ந்தனர்.

அந்த பாரம்பர்யப் பண்பாட்டின் அடையாளங்களில் ஒன்று தான் ஆடிப்பெருக்கு எனும் திருநாள்.

இப்போதும் காவிரிக் கரை மக்களால் சிறப்புடன்  நடத்தப்படும் விழா ஆடிப் பதினெட்டாம் நாளில் நடத்தப்படும் ஆடிப்பெருக்கு விழா.

இல்லறம் ஏற்ற தம்பதிகள் பொங்கி வரும் காவிரியில் நீராடி, மங்கலப் பொருட்களைச் சமர்ப்பித்து வணங்குவர்.

வீட்டுத் தோட்டத்திலும் கொல்லைக் காட்டிலும் - அவரை, பாகல், சுரை, பீர்க்கு என தோட்டப் பயிர்களுக்கு விதையிடுவர். மகிழ்ச்சியுடன் விவசாய வேலைகளைத் தொடங்குவர். 

ஆடிப்பெருக்கு - கரைபுரண்டு வரும் காவிரிக் கரையில் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும்.

ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சோழ வளநாட்டில் - காவிரி மட்டுமல்லாது வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, அரசலாறு, வடவாறு, புது ஆறு  - என அதன் கிளை நதிகள் பலவற்றின் கரைகளும் சிறப்பாக விழாக்கோலம் கொள்ளும். 


நதியின் படித்துறைகளை சுத்தம் செய்து, அதிகாலையிலேயே நீராடி - தலை வாழையிலையில்  மஞ்சள் பிள்ளையாருடன் விளக்கேற்றி வைத்து -

காப்பரிசி, தாம்பூலம், மஞ்சள் குங்குமம், சந்தனம், மங்களச் சரடு, காதோலை கருகமணி, விளாம்பழம், நாவற்பழம், பேரிக்காய், வாழைப்பழம், எலுமிச்சங் கனி, நறுமலர்கள் - என எல்லா மங்கலப் பொருட்களையும் சமர்ப்பித்து தூப தீப கற்பூர ஆரத்தியுடன் காவிரியை வணங்கி  மகிழ்வர். 

ஓடும் நீரில் மலர்களைத் தூவி தீபங்களை மிதக்க விட்டு -  

ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி!.. 
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக -எம்மை 
வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக!.. 

- என மனதார வேண்டிக் கொள்வர். 

மணமான இளம் பெண்கள் தாலிச்சரடை மாற்றிப் புதிதாக அணிந்து கொண்டு தம்பதியராக - மணமாலையினை ஓடும் நதியில் இட்டு, மங்கல வாழ்க்கைக்கு துணையிருக்க வேண்டிக் கொள்வர்.

பெண்கள் - மூத்த சுமங்கலியர் தம் கைகளால் ஆராதிக்கப்பட்ட மஞ்சள் சரடினை அணிந்து கொள்வதிலும் மஞ்சள் குங்குமம் பெற்றுக் கொள்வதிலும் ஆனந்தம் கொள்வர்.

யாராயிருந்தாலும்  - ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கி மகிழ்வர்.  இல்லத்தில் அன்பின் உறவுகளுடன் கூடிக் குதுகலித்து உளம் பூரித்து மகிழ்வர்.


''வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி!..''  - என்பது பட்டினப் பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் எனும் பெரும் புலவரின் திருவாக்கு!.. 

''மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடையது போர்த்து கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி!..''  - என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் புகழ்கின்றார். 

தொண்டரடிப் பொடியாழ்வார் - அரங்கனைப் போற்றித்துதிக்கும் போது - கூடவே - '' கங்கையிற் புனிதமாய காவிரி!..'' - எனப் புகழ்ந்து பாடுகின்றார். 

நவீன வாழ்க்கை முறையினால் நதிக் கரைகளை விட்டு நீங்கி   - வாழ வேண்டிய சூழ்நிலையில் இருப்போர் கூட , தம் வீட்டிலேயே நலந்தரும் நதி மங்கையரைப் போற்றி வணங்கலாம்!..

ஒரு செம்பில் மஞ்சள் கரைத்த நீரை நிறைத்து  -  அதற்கு மலர்களைச் சூட்டி திலகமிட்டு பூஜை மாடத்தில் வைத்து,  காப்பரிசியுடன் கனிவகைகளைச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வணங்கி இன்புறலாம். 


புது ஆற்றில் புது வெள்ளம் பொங்கிவர வேண்டும்!.. 
புது நாற்றும் பூங்காற்றில் அசைந்தாட வேண்டும்!.. 
இளம் பயிரின் முகம் பார்த்து வான் பொழிய வேண்டும்!.. 
களம் நிறையும் கதிர்மணியால் ஊர் வாழ வேண்டும்!.. 


இறைவனிடம் நாம் - வேண்டிக்கொள்வது, அருளும் பொருளும்  நிறைந்த ஆனந்த வாழ்வினையே!..

அத்தகைய ஆனந்த வாழ்வினுக்கு ஆதாரம் - நீர்வளம்!..

அதனால் தான்  - ''..தண்ணீரும் காவிரியே!..'' - என்கின்றார் ஒளவையார்.


தேவாரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருத்தலங்கள் சிறப்பிக்கப்படும் போது  - காவிரியும் சேர்த்தே சிறப்பிக்கப்படுகின்றாள்.  

முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி (2/106) எனவும் பாய்புனல் வந்தலைக்கும் பழங்காவிரி (2/119) - எனவும் திருஞானசம்பந்தப் பெருமான் சிறப்பிக்கின்றார். 

வாழைக்குலை தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக் காவிரி (7/77)  - என சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகழ்கின்றார். 

கொழித்தோடுங்  காவிரிப் பூம்பாவை (4/12) என்றும் விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி இட்டநீர் வயலெங்கும் பரந்திட (5/75) என்றும் - புகழ்ந்துரைக்கும் திருநாவுக்கரசு சுவாமிகள் வேறொன்றையும் முக்கியமாகக் குறிப்பிடுகின்றார். 

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் 
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென் 
ஒங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென் 
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே (5/99) 

எங்கும் ஈசன் நிறைந்துள்ளான். அவன்  - அருள் பெற வேண்டி அறம் செய்யாது -  கங்கை, காவிரி, குமரி முதலான தீர்த்தங்களில் நீராடுவதனால் எந்தப் பயனும் இல்லை!..  - என்பது இதன் உட்பொருள். 

ஈசன் அருள் பெற அறஞ்செய்ய வேண்டும்.

மனிதன் செய்ய வேண்டிய அறங்களுள் எல்லாம் மிகப் பெரியது - சிறந்தது - இயற்கையைப் பாதுகாத்தல்!.. 

இயற்கையை நாம் பாதுகாத்தால் - 
இயற்கை நம்மையும்  நம் குலத்தையும் பாதுகாக்கும்!..
* * *