நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 17, 2022

ஐந்து வீட்டு சுவாமி 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

திருச்செந்தூரில் இருந்து 12 கிமீ., தொலைவில் 
உடன்குடி.. அங்கிருந்து 3 கிமீ., தொலைவில்
செட்டியாபத்து என்ற ஊர்.. 

தென் மாவட்டங்களில் புகழ் பெற்று விளங்கும் கோயில்களில் ஒன்றான -

ஐந்து வீட்டு சுவாமி கோயில் இந்த ஊரில் தான் அமைந்துள்ளது.


திருச்செந்தூரில் தரிசனம் செய்தபின் 29/8 அன்று மாலை 5:30 மணியளவில் ஐந்து வீட்டு சுவாமி கோயிலுக்குச் சென்றோம்..

திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து அதிகபட்சமாக நாற்பது நிமிடங்கள்.. 




ஐந்து வீட்டுசுவாமி என
பெயர் விளங்கினாலும்
இங்கே நாம் தரிசனம் செய்வது எட்டு சந்நிதிகளை..

ஸ்ரீ பெரியசுவாமி,
ஸ்ரீ வயணப் பெருமாள், 
ஸ்ரீ அனந்தம்மாள், 
ஸ்ரீ ஆத்திசுவாமி,
ஸ்ரீ குதிரைசுவாமி,
ஸ்ரீ திரு புளி ஆழ்வார்,
ஸ்ரீ பெரியபிராட்டி, 
ஸ்ரீ ஆஞ்சநேயர..

எட்டு சந்நிதிகளில்
ஸ்ரீ பெரியசுவாமி சந்நிதிக்கு எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி..

ஸ்ரீ வயணப் பெருமாள் சந்நிதியும்
ஸ்ரீ அனந்தம்மாள் சந்நிதியும் ஒரே கோயிலில்..

ஸ்ரீ ஆத்திசுவாமி ஸ்ரீ திரு புளி ஆழ்வார் ஸ்ரீ பெரிய பிராட்டி ஆகிய மூன்று சந்நிதிகளும் தனித்தனி கோயில்கள்..

ஸ்ரீ ஆத்திசுவாமி கோயிலுக்கு எதிர்புறம்
திறந்த வெளி மண்டபத்தில் ஸ்ரீ குதிரை சுவாமி.. 





கோயில்கள் என்றால் மகா மண்டபம், அர்த்த மண்டபம், பலிபீடம் என்றெல்லாம் கற்பனை செய்து கொள்வீர்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை.. 

ஸ்ரீ ஆஞ்சநேயர் தனிக் கோயிலில்..
ஸ்ரீ குதிரை சுவாமி திறந்த வெளி மண்டபம்..

ஸ்ரீ குதிரை சுவாமி


தவிர, மற்றதெல்லாம் மூன்று பக்கங்களும் சுவரும் தலை வாசலும் கூடிய அலங்கார மண்டபங்கள்.. 

மண்டபத்தின் நடுவே நான்கு தூண்களுடன் கூடிய பீடம்.. இதுவே மூலஸ்தானம்.. 

ஸ்ரீ வயணப்பெருமாள் ஸ்ரீ அனந்தம்மாள் இரு சந்நிதிகளும் தனித்தனியாக ஒரே மண்டபத்தில்..

மூலவராகிய ஸ்ரீ பெரிய சுவாமி சந்நிதி மன்டபத்தில் மட்டும் கிழக்கிலும் தெற்கிலும் வாசல்கள்..

ஐந்து வீட்டு சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவராயினும் சந்நிதிக்குள் (மூலஸ்தானம் வரை) சென்று ஸ்வாமியின் பீடத்தைத் தொட்டு வணங்கலாம்.. வலம் செய்யலாம்..

ஆனால்,
ஸ்ரீ வயணப்பெருமாள் கோயிலில் 
ஸ்ரீ அனந்தம்மனையும் ஸ்ரீ பெரிய பிராட்டி அம்மனையும் வலம் செய்ய இயலாத படிக்கு பீடம் சுவரோடு அமைக்கப்பட்டுள்ளது..

எல்லா நாட்களிலும் பீடத்தைத் தொட்டு வணங்கிய மக்கள் - சித்திரைத் திருநாளின் ஒருநாளில் மட்டும் தெய்வ ரூபங்களைத் தொட்டு வணங்கி ஆரத்தி செய்து மகிழலாம் என்பது கூடுதலான செய்தி..  


ஸ்ரீ குதிரை சுவாமி சுதை வடிவம்..
ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலாரூபம்.. 

ஸ்ரீ திரு புளி ஆழ்வாரை பூச்சரங்கள், மாலை, வஸ்த்ரங்கள் மறைத்திருக்க எளிதில் திருமுகம் விளங்காது.. ஆனால் உள்ளே விக்ரகம் - ஸ்ரீ கருட வாகனன்.. 

ஸ்ரீ பெரிய பிராட்டியம்மன், 
ஸ்ரீ வயணப் பெருமாள் ஸ்ரீ அனந்தம்மாள் மூவரும் 
திரு முகங்களுடன் கூடிய பூடங்கள்...

திருமுகம் போல் செய்யப்பட்டிருக்கும் வடிவத்திற்கு - பூடம் என்று பெயர்..

ஸ்ரீ ஆத்திசுவாமி -
அலங்காரத் திருமேனி சித்திரம் எழுதப் பெற்ற சற்றே உயரமான பூடம்...

ஸ்ரீ பெரியசுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி - சிலா ரூபமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்..

பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்ற மாந்திரீக பிரச்னைகளைத் தீர்ப்பதுடன், 

மனநோய் தீர்த்து அருள் செய்பவராகவும் ஸ்ரீ பெரியசுவாமி திகழ்கின்றார்.. 

காலில் வலி முழங்கால் பிரச்னை இவைகளால் நொந்து போனவர்களுக்கு ஸ்ரீ ஆத்திசுவாமி பெருந்துணை ஆகின்றார்.. 

இவரது சந்நிதியில் ஆயிரக்கணக்கான செருப்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஆத்திசுவாமியால் நலம் பெற்றவர்கள்
செருப்பு மற்றும் கதாயுதங்களை இங்கே காணிக்கையாகச் செலுத்துகின்றனர்..

" ஹரி ஓம் ராமானுஜாய " என்பதே ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலின் மந்திரமாக 
விளங்குகின்றது..



ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சந்நிதிக்கு வெளிப்புறத்தில் நாகர் பிரதிஷ்டைகள்..

எல்லா சந்நிதிகளிலும் மணிகள் சேகண்டி சங்கு - முழங்க பூஜைகள் நடைபெறுகின்றன..

இக்கோயிலின் பக்தர்களால் இங்கே அசைவ சமையல் - பணிவிடை என்ற சிறப்புப் பெயரில் நடத்தப்படுகின்றது..


சுற்றிலும் தங்குவதற்கான அறைகள்.. திறந்த வெளியில் அடுப்புகள்.. அம்மி, உரல், உலக்கை வகையறாக்களும் காணக் கிடைக்கின்றன..




மண்டபங்கள், தளங்கள் தோரண வாயில்கள் முதலான திருப்பணிகள் எல்லாமே நாடார் சமுதாய மக்களால் செய்யப்பட்டிருக்கின்றன...

ஆஞ்சநேயர் கோயிலும் அப்படியே!..

நம்பி வந்தார்க்கு நல்லருள் பொழியும் தலமாக இக்கோயில் விளங்குகிறது..

இங்கு, பிரசாதமாக திருமணி (நாமக்கட்டி)
திலகம் நெற்றியில்  இடுகின்றார் 
அண்ணாவியார்.. 

முதன்மையாக நின்று பூஜைகளைச் செய்பவர்
அண்ணாவியார் எனப்படுகின்றார்..

திருக்கோயிலில் படம் எடுக்கலாமா? - என்று  கேட்டதற்கு உள்ளே எடுக்க வேண்டாம்.. வெளியே எடுத்துக் கொள்ளுங்கள்.. - என்றார்கள்..

ஆயினும், விழாக்காலங்களில் உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகள் அவர்களது தளத்தில் இருக்கின்றன..

அவற்றில் சிலவற்றை அடுத்த பதிவில் தருகின்றேன்..
 
இக்கோயிலைப் பற்றி விக்கியும் மேலும் பல தளங்களும் காணொளிகளும் பேசுகின்றன..

சித்தர் பாடல்களைப் போன்ற பாடல்கள் மண்டப விதானத்தில் எழுதப்பட்டுள்ளன..

அவற்றில் இருந்து, இரு பாடல்கள் -

மங்கை ரூபம் தான் இருக்கும்  
மச்ச வடிவாய் அவதரிக்கும் 
எங்கும் விளக்கின் ஒளியாகும் 
எளியார் துயரம் தீர்த்து வைக்கும்
அங்கும் இங்கும் தானிருக்கும் 
அடியாரிடமே வீற்றிருக்கும் 
சிங்க ரூபமாயிருக்கும் 
சிவமாய் உதித்த திருமணியே..
 
பாரில் பிறந்து இருந்தாலும் 
பல நூல் தெளிந்து இருந்தாலும் 
நீரில் உதித்த கமல மலர் 
நெறியோடு எடுத்து ஜெபித்தாலும் 
வாரியில் துயிலும் எட்டெழுத்தை 
வணங்கித் துதித்த மானிடருக்கு 
சீரிட்டு அழகாய் வாக்கு அருளும் 
சிவமாய் உதித்த திருமணியே..

பீடங்களின் திருக்கோலமும்
கோயிலின் வரலாறும் 
சுருக்கமாக அடுத்த பதிவில்!..

ஐந்து வீட்டு ஸ்வாமிகளே
போற்றி.. போற்றி!..
***

13 கருத்துகள்:

  1. ஐந்து வீட்டு ஸ்வாமிகள்...   இப்போதுதான் கேள்விப்பப்படுகிறேன்.  சுற்றிலும் தங்குவதற்கு அறைகள் என்று சொன்னாலும் சிறு வீடுகள் போல காட்சி அளிக்கின்றன அவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில பதிவுகள் வர இருக்கின்றன..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  3. நானும் தரிசனம் செய்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  4. ஐந்துவீட்டுசுவாமிகள் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. புதியதாய் அறிகிறேன். கோயில் பற்றிய விவரங்கள் நுணுக்கமாகக் கொடுத்திருக்கிறீர்கள் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில பதிவுகளும் வர இருக்கின்றன..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்தக் கோவின் பெயர் இதுவரை அறியாதது. புதிதான இந்த கோவிலையும், அங்குள்ள இறைவன்களையும் விளக்கமாக அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். படித்து தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. பகிர்ந்த விபரங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோயில் தொடர்பாக இன்னும் சில பதிவுகளும் காத்திருக்கின்றன..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. ஐந்து வீட்டு சாமிகள் பற்றிய விவரம் அருமை. படங்கள் நன்றாக இருக்கிறது. உடன் குடி கேள்வி பட்டு இருக்கிறேன், செட்டியாபத்து கேள்வி பட்டது இல்லை.
    ஐந்து வீட்டு சாமிகளே போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடன்குடியை அடுத்து மூன்று கிமீ.. தொலைவில் உள்ளது இந்தக் கோயில்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..