நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 24, 2022

தங்கக் காமாட்சி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


காமாட்சி விருத்தம்  என்றதொரு பாமாலை U tube ல் இருக்கின்றது.. நூறாண்டுகள் பழமையானது..

கேட்கின்ற போதில் நெஞ்சம் உருகும்.. 

பேய் கூட - தான் பெற்ற பிள்ளையை பிரியமுடன் காக்குமே!.. நீ என்னைக் 
காத்து ரட்சிக்காமல் கை விடத் தகுமோ?.. என்று உரிமையுடன் போராடுகின்றார் அதனை இயற்றியவர்.. அவர் யாரென்று தெரியவில்லை..

ஆனாலும், விருத்தத்தைக் கண்டுபிடித்து இன்னிசைப் பாமாலையாக வலையேற்றி இருக்கின்றார்கள்.. 

சரியாக ஓராண்டுக்கு முன் குவைத்தில் இருந்தபோது நண்பர் கணேச மூர்த்தியின் அறைக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் -  அப்படியொன்றை எழுத வேண்டும் - என்று மனதில் தோன்றியது.. 

இசைக் குறிப்பை மட்டும் கொண்டு பேருந்தில் இருந்தபடியே மூன்று கண்ணிகளை கைத் தொலைபேசியில் எழுதினேன்.. அதன் பிறகு அங்கு சூழ்நிலை சரியில்லை..

சென்ற மாதத்தில் உடல் நலக் குறைவு ஏற்பட்ட பிறகு - விரல்களின் இயக்கம் சரியில்லாது இருந்த போதும்  மனம் தளராமல் ஒற்றை ஒற்றை எழுத்துக்களாக உருவேற்றி அவள் அருளால் நிறைவு செய்திருக்கின்றேன்..

பதினாறாம் நூற்றாண்டில் அன்னியக் களவாணிகள் தமிழகத்தின் மீது படையெடுத்த போது
கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் தஞ்சையிலும் குடந்தையிலும் சிலகாலம் இயங்கியது என்பது வரலாற்றுச் செய்தி.. 

ஸ்ரீ பங்காரு காமாட்சி

அந்தக் கால கட்டத்தில் 
காஞ்சியில் விளங்கி இருந்த ஸ்ரீ ஸ்வர்ண (பங்காரு) காமாக்ஷியும் அங்கிருந்து புறப்பட்டு விட்டாள்..

இவள் ஆதியில் காஞ்சியில் தவம் புரிந்த ஸ்ரீ நான்முகனின் மனதில் இருந்து தங்க மயமாக வெளிப்பட்டவள்.. 

ஹேம காமாக்ஷி என்பதும் திருப்பெயர்..

உடையார் பாளையம் ஜமீனிலும் திரு ஆரூரிலும் சிலகாலம் இருந்து விட்டு தஞ்சைக்கு வந்த ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டாள்..

இச்சம்பவம் நிகழ்ந்தது மன்னர் பிரதாப சிம்மனின் (1739) ஆட்சிக் காலத்தில்!..

சிறிய அளவில் அமைந்த சந்நிதியானது நாளாவட்டத்தில் பெரிய அளவிலான கோயிலாக உருவெடுத்து விளங்குகின்றது..

ஸ்ரீ அத்திவரதரின் தங்கையான சத்தி சிவரூபிணி இங்கே மேல ராஜவீதியில் ஸ்ரீ விஜயராமர் திருக் கோயிலுக்கும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் திருக்கோயிலுக்கும் நடுவில்  தானும் கோயில் கொண்டாள்.. ஸ்ரீ காமாக்ஷியம்மனுக்கு மூலை ஆஞ்சநேயர் தான் மெய்க்காவல் என்கின்றனர்..

கார்த்திகையின் முப்பது நாட்களும் இக்கோயிலில் பென்களும் ஆண்களும் அடிப்ரதட்சிணம் செய்வார்கள்.. அவர்களோடு  சின்னஞ்சிறு பெண் போல
ஸ்ரீ காமாக்ஷியும் சேர்ந்து கொண்டு அடிப்ரதட்சிணம் செய்கின்றாள் என்பது உணரப்படுகிறது..

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் இக்கோயிலில் தான் அம்பாளுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்..

இத்துணை சிறப்புகளையும் ஒருங்கே உடையவளை  மனதில் கொண்டு பாமாலையைப் புனைந்து  சமர்ப்பித்துள்ளேன்..

திருப்பதிகத்தின் இலக்கணம் எதுவும் தெரியாது.. அன்னை அவள் கொடுத்தாள்.. அடியேன் தொடுத்திருக்கின்றேன்..

நாளை முதற்கொண்டு சில நாட்களுக்கு எளியேன் செய்திருக்கும் பதிகத்தின் பாடல்கள்..

ஓம் 
சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்
***

14 கருத்துகள்:

  1. காமாட்சி அம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி ஜி..

      நீக்கு
  2. மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
    துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே – திங்கட்
    புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
    கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

    நூல்

    சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
    சோதியா நின்ற வுமையே.
    சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
    துன்பத்தை நீக்கி விடுவாய்.
    சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
    துயரத்தை மாற்றி விடுவாய்
    ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
    சிறியனால் முடிந்திராது
    சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
    சிறிய கடனுன்னதம்மா.
    சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
    சிரோன்மணி மனோன்மணியு நீ.
    அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
    யனாத ரட்சகியும் நீயே,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அன்னை காமாட்சி உமையே.

    பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
    பாடகந் தண்டை கொலுசும்,
    பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
    – பாதச் சிலம்பி னொலியும்,
    முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
    மோகன மாலை யழகும் ;
    முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
    முடிந்திட்ட தாலி யழகும் ,
    சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
    செங்கையில் பொன்கங்கணம்,
    ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
    சிறுகாது கொப்பி னழகும்,
    அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
    அடியனாற் சொல்லத் திறமோ,
    அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
    அம்மை காமாட்சி உமையே.

    இது தானே? இதைக் கேட்கும்போதெல்லாம் அம்மா நினைவு வரும். இதைப் பாடிக்கொண்டே தான் அம்மா தினம் சமைப்பாள். அப்போதும் இப்போதும் எப்போதும் நினைவில் இருக்கும் பாடல். இதுவும் ஜகதீஸ்வரி நம்பினேன், ஜகதாம்பிகையே இரண்டும் அம்மாவுக்குப் பிடித்தவை. உங்கள் விருத்தத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வஸந்த் ஒரு கதையில் பிரமிப்புடன் கணேஷைப் பார்த்து சொல்வார்.. "ஐ ஸ்வே.. பாஸ்.. நான் ஆடறேன்... நான் அம்பேல்"

      அது நினைவுக்கு வருகிறது!

      நீக்கு

    2. @ கீதாக்கா..

      இதுவே தான்.. இதனைத் தனியாகக் கொடுத்திருக்கின்றேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றியக்கா..

      நீக்கு
    3. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
    4. ஶ்ரீராமுக்கு நேற்று இங்கே பதில் சொல்லி இருந்தேன். அதைக் காணோம். :( இணையப் படுத்தலில் காணாமல் போயிருக்குப் போல!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்கக் காமாக்ஷி விபரங்கள் தெரிந்து கொண்டேன் அன்னை தற்சமயம் தஞ்சையில் தங்கியிருந்து அருள்பாலிக்கும் விபரங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் மேற்சொன்ன காமாக்ஷி விருத்தப் பாடலைத்தான் நானும் குறிப்பிட வந்தேன். இந்தப் பாடலை எங்கள் அம்மாவும் பாடி, என் சிறு வயதிலேயே என்னையும் கற்க வைத்தார்கள். அன்னை மேல் மற்றொரு பாடலும் என் சிறு வயதில் கற்றது இன்று வரை நினைவிலுள்ளது. அது எந்த வகையை சார்ந்தது எனத் தெரியவில்லை. அந்தப்பாடலையும் என் தளத்தில் பதிய வேண்டுமென நினைத்துள்ளேன்.

    இப்போது தாங்கள் சொந்தமாக அன்னை மேல் இயற்றிய பாமாலையை பார்த்து பாடி ரசிக்க ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      வீட்டுச் சமையலிலும் அந்தக் காலத்தில் தெய்வீகம் இருந்தது..எல்லாம் நல்லபடியாக நடந்தன.. இன்றைக்கு?.

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. நல்ல விவரங்கள். உங்கள் பாமாலைக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      பாமாலை விரைவில்!..

      நீக்கு
  5. விரல்களின் இயக்கம் சரியாகி விடும் அன்னை காமாட்சி அருள்புரிவாள். காமாட்சி பாமாலை கேட்க தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..