நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 2
புதன் கிழமை
இன்று முதல்
மஹாளயபட்சம்
கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வரர் தரிசனத்திற்குப் பின்
பதிவொன்று தருவதாக அன்றைக்கு சொல்லியிருந்தேன்..
விநாயக சதுர்த்தியை அடுத்த செவ்வாய்க் கிழமை (10/9) மாலை கொட்டையூர் ஸ்ரீ கோடீஸ்வர ஸ்வாமி தரிசனம் செய்தேன்..
தஞ்சையில் இருந்து
திரு ஐயாறு வழியே செல்வதானால்
சுவாமிமலையைக் கடந்து உத்தேசமாக நான்கு கிமீ..
கும்பகோணம் வழி எனில் மேலக் காவிரியை அடுத்து கொட்டையூர்..
பிரதான சாலையை அடுத்து
கிழக்கு முகமாக அமைந்துள்ளது திருக்கோயில்..
ஆங்காங்கே நவகிரக தலங்கள் என்று கொந்தளித்துக் கிடக்க இக்கோயிலில் அமைதி தவழ்கின்றது.
கம்பீரமான ராஜகோபுரத்தைக் கடந்ததும் கொடி மரம், பலிபீடம், நந்தியம்பெருமான்
முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வர் திருமேனிகள்...
இதே மண்டபத்தில் ஆத்ரேய மகரிஷி (ஹேரண்டர்) திருமேனி..
|
ஸ்ரீ ஹேரண்ட மகரிஷி |
இவரே திருவலஞ்சுழியில் ஆதிசேஷனால் ஏற்பட்ட பிலத்தினுள் காவிரியாள் விழுந்து மறைந்து போக - காவிரியாளைக் காத்து கரை சேர்க்கும் பொருட்டு அதே பிலத்தினுள் குதித்தவர்..
இவரது தியாகத்தைக் கண்ட ஈசன் மனமகிழ்ந்து திருவலம்புரத்தில் முனிவரை மீட்டெடுத்து நமக்கு அளித்தனன் என்பது ஐதீகம்..
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..
என்று வள்ளுவர் சிறப்பிக்கின்ற ததீசி முனிவரைப் போல தன்னையே மக்களுக்குத் தந்தவர்... இவருக்கு ஆராதனை முறைகள் நடைபெறுகின்றன என்றால் அதுவும் வள்ளுவர் வகுத்த நெறியே..
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
இடப்புறம் தெற்கு முகமாக அம்பாள் ஸ்ரீ பந்தாடு நாயகியாள் சந்நிதி..
அடுத்து -
நடராஜ சபையும் நவக்கிரக சந்நிதியும் உள்ளன.
கருவறைக் கோட்டங்களில் நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, அருணாசலேஸ்வரர் பிரம்மா, துர்கை உள்ளனர். துர்க்கையின் எதிரில்
கோடி சண்டிகேஸ்வரர் .
திருசசுற்றில் கோடி விநாயகர்..
மூலஸ்தானத்திற்கு நேர் பின்னால் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் கூடிய கோடி சுப்பிரமணியர்
வாயு மூலையில் கஜலட்சுமி சந்நிதி
ஸ்வாமி அம்பாள்
மூலஸ்தானங்கள் வெளிப்புறம் உள்நாழி அமைப்பில் விளங்குகின்றன..
இறைவன் பலாப்பழம் போன்று திருமேனியில் கோடி லிங்கங்களைக் கொண்டு சுயம்புமூர்த்தியாக சிரசிலிருந்து கங்கை நீர் அரும்பும் நிலையில் இன்றளவும் விளங்குவதாக சிவாச்சாரியார் தெரிவித்தார்..
கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் சப்த ஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று...
நான் அன்றைக்குப் பதிவு செய்த காட்சிகளில் இரண்டு தவறி விட்டன..
மீண்டும் தலத்திற்கு அழைக்கின்றான் இறைவன்..
எனது கர்ம வினைகள் அப்படிப்பட்டவை..
அன்றைக்கு வளர்பிறை சஷ்டி.. சுவாமிமலையில் சுவாமிநாதப் பெருமானைத் தரிசித்து விட்டு நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தேன்...
விரைகமழு மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியதள் உடையான் கண்டாய்
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
வஞ்சமனத் தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழிற்புடைசூழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. 6/73/8
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***