செவ்வாய், அக்டோபர் 11, 2022

ஐந்து வீட்டு சுவாமி 5


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
உடன்குடி - செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி தரிசனம் தொடர்கின்றது..

(படங்களுக்கு நன்றி: ஐந்து வீட்டு சுவாமி Fb)





இன்று
ஸ்ரீ ஆத்தி சுவாமி தரிசனம்


முன்பு ஒரு காலத்தில் இன்றைய ஐந்து வீட்டு சுவாமி கோயில் ஆதி கோயிலாக இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்கமாக வந்து ஸ்ரீ ஆத்தி சுவாமிக்கு  பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்..

ஒரு நாள் மந்திரவாதி சென்ற பிறகு பெரிய சுவாமிகள் கோயிலுக்குச் சென்றார்.. பூட்டப்பட்டிருந்தத கதவுகளின் மேல் கையை வைத்தார்.. 

உடனே கதவுகள் திறந்து கொண்டன.. உள்ளே சென்ற சுவாமிகள் பூஜை செய்து விட்டுத் திரும்பினார். கதவுகள் தாமே தாளிட்டுக் கொண்டன. 

வழக்கம் போல மறுநாள் பூஜைக்கு வந்த மந்திரவாதி, கதவை திறந்து உள்ளே சென்றான்..  அங்கே பூஜை நடந்திருப்பதைப் பார்த்து குழப்பம் அடைந்தான்..  கதவுகள், பூட்டியபடியே இருக்க யார் உள்ளே வந்திருக்க முடியும்?.. என யோசித்தான்..

கோயிலின் அருகில் தங்கி இருந்த பெரிய சுவாமிகளிடம் சென்று இங்கு வந்து பூஜை செய்தது யார்?..  எனக் கேட்டான்..  அதற்கு சுவாமிகள் நான் தான்!.. - என்று ஒப்புக்கொண்டார். 

இனிமேல் இந்த மாதிரி பூஜை செய்யக் கூடாது என,  மிரட்டி விட்டு சென்றான் மந்திரவாதி..

மறுநாள் பூஜை செய்வதற்கு மந்திரவாதி வந்தான்.. முதல் நாள் போலவே பூஜை நடந்திருப்பதை பார்த்து கோபம் அடைந்து சாமிகளிடம் சென்று - " நேற்றே நீ பூஜை செய்யக் கூடாது.. - எனக் கூறினேனே!..  பிறகு ஏன் பூஜை செய்தாய்?.. " என்று  சத்தம் போட்டான்.. 

அதற்கு சுவாமிகள் - " கோவில் திறந்து இருந்தது. நான் பூஜை செய்தேன். நீ கோவிலை நன்றாக பூட்டி விட்டுப் போ!.. " - என, அமைதியாகக் கூறினார்..

சுவாமிகளின் பதிலை கேட்ட மந்திரவாதி கோயிலின்  கதவை நன்றாக இழுத்துப் பூட்டி விட்டுச் சென்றான். மறுநாள் வந்தான்.. கோயிலில்  பூஜை செய்யப்பட்டிருந்தது..  

கடும் கோபத்துடன் சுவாமிகளிடம் சென்று " நீ இந்த இடத்தை விட்டுப் போய் விடு.. இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!.. " - என்று சத்தம் போட்டான்.. 

ஸ்ரீ ஆத்தி சுவாமி திரை ஓவியம்
அதற்கு சுவாமிகள் -  " நான் பூஜை செய்த முறை தவறா?.. அல்லது திறந்திருந்த கோயிலில் பூஜை செய்தது தவறா?.. இதில் எதுவும் தவறில்லை.. எனவே எனக்கு எந்த தீங்கும் நேராது.. " - என்றார்..

இதைக்கேட்ட மந்திரவாதி கோபமுற்று சுவாமிகளைப் பழி வாங்க வேண்டுமென தீர்மானம் செய்து கொண்டு தனது குருவிடம் வந்தான்..

நடந்ததைக் கூறி, சுவாமிகள் மீது ஏவல் பூஜை செய்து அவரை கொல்லுமாறு  பூதம் ஒன்றை ஏவி விட்டான்..

சுவாமிகள் தன்னைக் கொல்வதற்கு வந்த பூதத்தை பார்த்து ''சாந்தி'' எனச் சொன்னதும், அந்த பூதம் சுவாமிகளின் காலடியில் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்து விட்டது..

சென்ற பூதம் திரும்பி வராததால் மந்திரவாதி மற்றுமொரு கொடுமையான பூதத்தை அனுப்பி வைத்தான்.. அந்த பூதமும் சுவாமிகளின் காலடியில்  அமைதியாகி விட்டது,

அனுப்பி வைத்த பூதங்கள் செயலற்று போனதால் மந்திரவாதி மிகக் கோபம்  கொண்டு யாராலும் வெல்ல முடியாத ''ருத்ர பூதத்தை '' அனுப்பி வைத்தான்,

ருத்ர பூதம் சுவாமிகளைக் கொல்வதற்காக விண்ணுக்கும் மண்ணுக்கும் தீப்பிழம்பாக  சுவாமிகளை நெருங்கியது.. வழக்கம் போல சாந்தி என்றார்.. ஆனாலும் பூதம் அடங்கவில்லை.. 

மேலும் தீவிரமாகியது.. அதைக் கண்ட சாமிகள் பதற்றத்துடன் அன்னையை (மீனாட்சியம்மன் - அதாவது பெரிய பிராட்டி ) நினைத்து வணங்கினார்.. 

அந்த அளவில் அவ்விடத்தில் தோன்றிய  அன்னை மிகவும் பலம் வாய்ந்த அந்த பூதத்தை பார்த்து ''ஆத்தி இரு'' ( ஆற்றி இரு அதாவது ஆறுதலாக இரு) என கட்டளை இட்டார்.. பூதம் அமைதியாகி விட்டது..

பூதத்தை நோக்கி, " நீ வந்த காரணமென்ன?.. " - என்று அன்னை வினவினார்..

அதற்கு ருத்ர பூதம் தனக்கு மந்திர வாதியால் இடப்பட்ட கட்டளையைக் கூறியது.. அத்துடன்,
இவர் தங்களின் பக்தன் என எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன் - எனச் சொல்லி மன்னிப்பு கேட்டது.

அன்னை கருணையுடன் பூதத்தை மன்னித்து - " நீ இங்கேயே இரு.. உனக்கு இருவகை படையல் உண்டு!.. "- என, அருளினார்..

ருத்ரபூதமும் அன்னையை வணங்கி அப்படியே ஏற்றுக் கொண்டு, - " நான் இப்பொழுது எழும்பியதால் எனக்கு நரபலி வேண்டும்..  அதற்கு நான் என்ன செய்வது?.. " - எனக் கேட்க, 

" உன்னை அனுப்பி வைத்தவனையே பலி கொள்!.. - என்று அனுப்பி வைத்தார் அன்னை..

தன்னை ஏவி விட்ட மந்திரவாதியை பலி கொண்ட ருத்ரபூதம் அமைதியாகியது. 

பின்னர் அன்னைக்குக் கொடுத்த வாக்கின்படி இங்கு வந்து ஐக்கியமாகி விட்டது.. 

அன்னையின் வாக்குபடி ஆத்தி கோயிலில் அதற்குரிய  பணிவிடைகள் சிறப்புற வழங்கப்படுகின்றன..


உடல் நிலை, மனநிலை ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லாமல் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கு - ஆத்தி சுவாமி சந்நிதி பூஜை நேரத்தில் கோழி முட்டை ஒன்றை  அண்ணாவியிடம் (பூசாரியார்) கொடுத்தால், அவர் நமது குறைகள்  தீர்வதற்காக மந்திரங்கள் உச்சரித்தபடி - நமது தலையைச் சுற்றி உச்சி மீது வைத்த பின் அந்த முட்டையை ஆத்தி சுவாமி பாதத்தில் ஒப்படைத்து விடுகின்றார். 

மக்களும் குறை நீங்கி நலம் பெறுகிறார்கள்.


ஸ்ரீ ஆத்தி சுவாமி சந்நிதிக்குள் பீடத்தைச் சுற்றி வந்து வணங்கலாம்.. 

சந்நிதியின் அருகிலுள்ள அடுக்கு மேடையில் ஆயிரக்கணக்கான செருப்புகள்.. அத்தனையும் சுவாமியின் அருளால் கால்வலி நீங்கப் பெற்ற பக்தர்களது காணிக்கை..

இவற்றை சுவாமி அணிந்து கொள்கின்றார் என்பது நம்பிக்கை.. அதற்கேற்ப புத்தம் புதிய செருப்புகளில் கால் பதிந்த தடம்  தெரிகின்றது..

ஸ்ரீ ஆத்தி சுவாமி 
ஸ்ரீ சுடலை மாடசுவாமி என, அறியப்படுகின்றார்..

ஐந்து வீட்டு சுவாமிகளே போற்றி.. போற்றி!..
***

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தகவல்கள் பிரமிக்க வைக்கிறது வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில் தகவல் குறிப்புகளில் இருந்து என்னளவில் தந்திருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  4. கோவில் விவரங்கள் அருமை. தீமை செய்பவர்கள் அந்த தீமையாலே அழிகிறார்கள்.
    எல்லோரும் நலமாக இருக்க அன்னை மீனாட்சி அம்மன் அருள்புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லாரும் நலமாக இருக்க அன்னை மீனாட்சி அம்மன் அருள்புரிய வேண்டும்.//

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கேட்டிராத தகவல்கள். ஆத்தி சுவாமி தான் சுடலை மாடன் என்பதும் புது விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  6. கோயில் பற்றிய கதை, தகவல்கள் அனைத்தும் சுவாரசியம். இக்கதையில் தெரிந்து கொண்டது - தன் வினை தன்னைச் சுடும். கெட்டது நினைத்தால் கெட்டதுதான் நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தன் வினை தன்னைச் சுடும். கெட்டது நினைத்தால் கெட்டதுதான் நடக்கும்//.

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ

      நீக்கு
  7. சம்பவங்கள் திகைக்க வைக்கின்றது. நம்பினவர்களுக்கு தெய்வமே துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி ..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது.
    ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் நடந்த சம்பவங்களை அறிந்து கொண்டேன். அறியாத தகவல்களை அறிய தந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி. ஸ்ரீ ஆத்தி ஸ்வாமி அனைவரையும் நலமுடன் காத்தருள வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்ரீ ஆத்தி ஸ்வாமி அனைவரையும் நலமுடன் காத்தருள வேண்டிக் கொள்கிறேன்.//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. அறிந்திராத கதைகள், தகவல்கள். ஆத்திசுவாமி - இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி எவ்வளவோ கிராமத்து தெய்வங்கள் அப்பகுதி மக்களின் நம்பிக்கைகள் என்று பல விஷயங்கள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இப்படி எவ்வளவோ கிராமத்து தெய்வங்கள் அப்பகுதி மக்களின் நம்பிக்கைகள் என்று பல விஷயங்கள்!.. //

      உண்மை தான்.. மண்ணின் மரபோடு ஒன்றி விட்டன..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி துளசிதரன்....

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..