புதன், ஏப்ரல் 24, 2013

கள்ளழகர் வருகிறார்..

வைகையில் கலந்த கருணைக் கடல்!... 


108 திவ்யதேசங்களில் ஒன்றான ''திருமாலிருஞ்சோலை'' எனப்படும் அழகர் கோவிலின் சார்பில் சித்திரைத் திருவிழா தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 10/4 அன்று காலை பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. 


மதுரையில் மீனாட்சிக்கு சுந்தரேசுவரருடன் திருமணம் நிறைவேறியதும் அதைத் தொடர்ந்து அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இதன் பொருட்டு,

23/4  செவ்வாய் மாலை 5.30 மணிக்குமேல் 6 மணிக்குள் கள்ளழகர் கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கைத்தடி, கம்பு ஏந்தி தங்கப் பல்லக்கில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகிறார். 

கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்பட வழிநெடுக 18 மண்டபங்களில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். 

24/4 புதன் கிழமை அதிகாலையில் - 21 கி.மீ. தூரத்தைக் கடந்து - மதுரை மாநகருக்கு வரும் கள்ளழகரை மூன்று மாவடி பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்று  எதிர்சேவை நடத்துகின்றனர். 

அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் இரவு 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெருமாள் ஏற்றுக்கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 

அங்கு விடிய விடிய அழகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் 3 மணிக்கு தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் திருக்காட்சி.

மறுநாள்  25/4 வியாழன் அன்று காலை 7.31 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியாக - லட்சக் கணக்கான பக்தர்கள் - ''கோவிந்தா!... கோவிந்தா!...'' - என்று தரிசனம் செய்து மகிழ, 


மக்கள் வெள்ளத்தில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகின்றார். மக்கள் அனைவரும் ''அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வரவேண்டும்..'' - என்று ஏங்கியிருப்பர். இருப்பினும் உடுத்தும் பட்டு அழகரின் விருப்பம்.

அழகர் வரும்போது மக்கள், வெல்லம் பொரிகடலை கலந்து பிரசாதமாக ஒரு சொம்பில் வைத்து அதை வாழை இலையால் மூடி, அதன் மேல் கற்பூரம் ஏற்றி தாங்களாகவே - தங்கள் உளம் நிறைந்த - அழகருக்கு ஆரத்தி எடுத்து மகிழ்வர்.


கோடை வெயிலின் உக்ரம் குறைவதற்காக - கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள்  மக்களின் மேல் நீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். நேர்த்திக் கடனாக மக்களுக்கு விசிறிகள் கொடுப்பதும், தண்ணீர், பானகம், மோர் வழங்குவதும் அன்னதானம் நடைபெறுவதும் - என மதுரையே கோலாகலமாக இருக்கும் தருணம்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு ராமராய மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடைபெறும். 

அன்று பகலில் ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம் நடைபெறுகிறது. இரவில் வண்டியூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம்.

26/4- வெள்ளி அன்று காலை சேஷ வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், வைகை ஆற்றில் பிற்பகலில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார். அன்றிரவு -

ராமராயர் மண்டபத்தில் விடியவிடிய தசாவதாரத் திருக்கோலம் நிகழ்கின்றது.

27/4- அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சியளிக்கின்றார்.. பிற்பகல் ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் புறப்படுகிறார். அன்றிரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருள்கின்றார்.

28/4- அன்று கருப்பசுவாமி கோவிலில் விடைபெற்று, பூப்பல்லக்கில் கள்ளழகர் எழுந்தருளி திருமலையை நோக்கிப் புறப்படுகின்றார். அன்றிரவு அப்பன் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் மண்டபங்களில் அழகரின் தரிசனம் வேண்டி  காத்திருப்பார்கள். 
29/4  திங்கள் காலையில் கள்ளழகர் - அழகர்மலை சென்றடைகிறார். 
30/4 செவ்வாய் அன்று விடையாற்றி - உற்சவ சாந்தி, மஞ்சள்நீர் சாற்று முறையுடன் சித்திரைத் திருவிழா மங்களகரமாக நிறைவு பெறுகிறது.
சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெற்றாலும், 
வீட்டின் வெளியே சாலையில் நம் பொருட்டு வழிநடையாய் எழுந்தருளிய கள்ளழகரை -  கண்ணாரக் கண்டு மகிழ்ந்து கை தொழுது வணங்கினாலும், வீட்டுக்குள் நுழைந்ததும் மனம் எண்ணும்  - 
அடுத்து எப்போது அழகர்  வருவார்?.... 
கள்ளழகர் திருவடிகளே சரணம்!...

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..