நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 09, 2019

பெண்மை வாழ்க..


சென்ற பதிவில் -

தாய்மையை - மிக வயதுடையவரை - இந்த இரண்டு கோலத்தையும் விட்டு விட்டீங்களே!.. - என்று அன்பின் திரு நெல்லை அவர்கள் வழங்கிய கருத்துரையின் அடிப்படையில் -

இன்றைய பதிவு மலர்கின்றது...

ஏறத்தாழ நூற்றைம்பது கோப்புகளில் உள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களிலிருந்து பதிவிற்கானவற்றை சேர்த்துக் கொண்டிருக்கின்றேன்..

இவற்றுள்
அவ்வப்போது கிடைக்கும் திருவிழாப்படங்களும்
நான் எடுத்து வைத்துள்ள நிழற்படங்களும் தனியானவை...

இத்தனைக்கும் மேலாக
ஒவ்வொரு நாளும் இணையம் உயிர்ப்புடன் இருக்கும்போதே பதிவை ஒழுங்கு செய்து வெளியிட்டு விடுவது பெருத்த சிரமமாக இருக்கின்றது...

விடியற்காலையிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரைக்கும் மிக நன்றாக இருக்கும் இணையம் மதியத்துக்குப் பிறகு நள்ளிரவுக்குப் பின்வரை முடிவாகாத கூட்டணி போல் இழுபறியாக இழுத்துக் கொண்டு கிடப்பது தான் பிரச்னை...

முன்பு இரவு வேலை செய்து கொண்டிருந்த போது
எப்போதாவது பிரச்னை இருக்கும்...

இப்போது பகல் பொழுதில் வேலை என்றானதும்
எப்போதுமே இணையம் பிரச்னையாகி விட்டது...

இருந்தாலும்
பிரச்னை இன்றி எதுவுமே இல்லை!.. - என்ற
தேவகோட்டை திடுக்கிடானந்த ஸ்வாமிகளின்
அருள்வாக்கினைக் கேட்டுக் கொண்டேபதிவினை ரசிப்பதற்கு வாருங்கள்!...

மேலை நாட்டில் சாதாரணமாக வழங்கப்படும் சொல் Housewife.. ஆனால்,
நமக்கு அப்படியில்லை..

தமிழ் வழக்கில் இல்லாள் என்பது சிறப்பு..

இல்லாள் என்பதற்கு இணைச் சொல்லாக இல்லான் என்று சொல்லமுடியுமா?.. என்றால் - அது முடியாது..

வாழ வந்த பெண்மைக்கு இல்லாள் என்பது சிறப்பு என்றால்
வாழ்வு கொடுப்பதாக சொல்லப்படும் ஆண்மைக்கு - இல்லான் என்று பெயர் வைத்தால் கேவலமாகி விடும்!...

அந்த அளவிற்கு
வார்த்தையாலே பெண்மைக்குச் சிறப்பை வார்த்தெடுக்கின்றது தமிழ்...

தமிழகத்தில் தமிழைப் படிக்காததால் இன்னும்
என்னென்ன சுகந்தங்களை இழக்கக் காத்திருக்கின்றதோ - இளைய சமுதாயம்!...

மாமன் அடிச்சாரோ
மல்லிகப் பூ செண்டாலே!..
நூல் கொண்டு அளக்க வேணும் இவ்வுலகை!..
சீர் கொண்டு வாழ வேணும் செல்வமே..
ஒளி கொண்ட பூ முகத்தாள்..
மடங்கொண்ட மங்கை மனம்
பூ முடித்த பூங்குழலி
வாய்ச் சொற்களுக்கு வாய்ப்பில்லையோ
எல்லாம் சந்தோஷம்.. எங்கும் சந்தோஷம்..
நல்வழி காட்டும் பெண்மை..ஆனாலும்,
நாம் கேட்பதேயில்லை.. அதுதான் உண்மை..
ஆமை ஓட்டைச் சுமப்பது போல் பெண் வீட்டைச் சுமக்கின்றாள்!.. - என்று
அன்பின் திரு வெங்கட் நாகராஜ் அவர்களது பதிவில் படித்தேன்...

ஆமைக்கு ஓடு சுமையல்ல... அதே போல
பெண்மைக்கும் வீடு சுமையல்ல!..

ஓடும் வீடும் தான் பாதுகாப்பு...

ஓட்டைத் துறந்தால் அது ஆமை ஆகுமா?...

வீடு தான் நாடு...
வீடு செம்மையானால் நாடும் செம்மையாகும் என்பார்கள்..

பேராண்மை மிக்கவன்.. அவன் அரசன்.. ஆனாலும்
நாட்டுக்குத் தானே தவிர வீட்டுக்கு அல்ல!..

பெருந்தக்க பெண்மை அது தான் - வீட்டுக்கு அரசு.. இல்லத்து அரசி!...


அப்படித்தான் தமிழ் பெண்மையைப் போற்றுகின்றது...

தற்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதி விலக்குகள்..

ஆனாலும் - 

பெண்ணால் தான் இல்லமும் உள்ளமும் பெரும் பயனைப் பெறுகின்றன..

பெண் இன்றி எய்தும் புகழொன்று
என்றென்றும் இல்லை இவ்வுலகில்..

அவ்வழி நின்று நாளும் நலந்திகழ்
பெண்மையைப் போற்றுவதில்
பெருமகிழ்வெய்துகின்றேன்...

பெண்மை வாழ்க..
பெண்மை வெல்க.. 
ஃஃஃ 

34 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    திடுக்கிடானந்தா சுவாமிகளின்...

    //வாழ்வு கொடுப்பதாக சொல்லப்படும் ஆண்மைக்கு - இல்லான் என்று பெயர் வைத்தால் கேவலமாகி விடும்//

    சொற்பொழிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு...
      தேவகோட்டையில் திடுக்கிடானந்தா ஸ்வாமிகள் நலமா?...

      நீக்கு
  2. அனைத்து படங்களும் அருமை.

    அறையில் கதை புத்தகம், டிரான்ஸ்சிஸ்டர், பின்னல்வேலை, அலங்காரம் செய்யும் கண்ணாடி மேஜை, அதில் வளையல்மாட்டும் கம்பு, பூஜாடி, கல்யாணபடம், சின்ன பூஜை அறை, கண்ணன் ராதை படம் என்று அனைத்தையும் நுட்பமாய் வரைந்து இருப்பது கோபுலூ அவர்களின் ஓவிய திறமை.

    அந்த பெண் கடிதம் படிக்கும் அழகு . அம்மாவிடமிருந்து வந்து இருக்குமோ ? கன்னத்தில் கை அம்மாவின் நினைவு வந்து விட்ட்தோ!

    எங்கள் காலம் நினைவு வந்து விட்டது, இணைபிரியா டிரான்ஸ்சிஸ்டர், கதை புத்தகம், கடித எதிர்ப்பார்ப்பு.

    கடைசி படம் சகித்து கொண்டு வாழும் பெண்மையை சொல்லும் படம் கோபுலு அவர்கள்தான் படம்.

    மற்ற படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மடல் கொண்ட மங்கை படம் சில மாதங்களுக்கு முன் என் சிநேகிதி எனக்கு அனுப்பி உன் நியாபகம் வந்தது என்றார்கள் ...

      அந்த படத்தில் உள்ளது போல் ஒரு புறம் பாடல் ஒலிக்கும் , ஒரு புறம் புத்தகம் இருக்கும் ..தைக்க துணி ஒரு புறம் என பல ஒற்றுமைகள் எனக்கும் அப்ப்டத்துக்கும்

      நீக்கு
    2. கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடி போல அந்தப் படம்...

      எத்தனையோ வீடுகள் இப்படித்தான் இருக்கும்... இன்றைய நாட்களில் தேடினாலும் இப்படியொரு சூழல் உள்ள வீடு காணக்கிடைக்காது...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. குட்மார்னிங்!

    முடிவாகாத கூட்டணிபோல ----

    ஹா. ஹா... ஹா... நல்ல உவமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அனைத்துப்படங்களும் அருமை. மாருதி, இளையராஜா ஓவியங்கள்... அந்தப் பழைய விகடன் அட்டைப்படம் பெரிய புன்னகையைக் கொடுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சென்ற பதிவில் மனம்கவர் மாருதி பற்றிச் சொல்லியிருந்தததற்கு நெல்லையின் கேள்விக்கு இங்கே பதில்

    அது துரை ஸார் மனம்கவர் என்று புரிந்துகொள்ளப்படவேண்டும்! இன்றும் பாருங்கள்...! ஹா... ஹா... ஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      மாருதி அவர்களின் ஓவியங்களில் சிலவற்றைக் கண்டால் பழைய நாட்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பெண்மை போற்றுவோம்.... நேற்றைய ஓவியங்களை விட இன்றைய ஓவியங்கள் இன்னும் அதிகமாகக் கவர்ந்தன.

    இணையப் பிரச்சனை - விரைவில் சரியாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      இணையப் பிரச்னை தீராது.. இங்குள்ள சேவை இப்படித் தான் நிலைமை சீராகும் என்பது முயல் கொம்புதான்.....

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. முடிவாகாத கூட்டணி ஹா ஹா ஹா ரசித்தேன் அண்ணா..

    படங்கள் அட்டகாசம்!!! அதுவும் அந்தக் கடைசிப் படம் ஹையோ!!! செம...படத்திற்கான உங்கள் வரிகளும் சூப்பர் அண்ணா..

    நேற்றைய வெங்கட்ஜி பதிவில் ஆதி சொல்லியிருக்கும் ஆமை ஓடு....உங்கள் கருத்தும் மிகவும் சரியே அண்ணா.

    ஆனால் அபப்டிச் சுமக்கும் இன்பம் எல்லா வீடுகளிலும் அமைவதில்லையே. அடிப்படையே ஆட்டம் காணும் போது ஓடு எத்தனை நாள் சுமக்கும் அண்ணா...பல வீடுகளில் அந்த ஓட்டுச் சுமையை பெண்கள் மட்டுமேதான் சுமக்கிறார்கள். அப்படிச் சுமக்கும் போது ஒரு வயதிற்கு மேல் கூன் விழுந்துவிடாதோ?!!!!

    எனவே நான் இங்குச் சொல்லிக் கொள்வது...கொண்டவன் துணை இருந்தால் கூரை மீதேறிக் கூவலாம், குதிரை மீதேறியும் சண்டை போடலாம் என்பதே...

    அப்படியான ஒரு வாழ்க்கை பெண்ணுக்கு அமைந்தால் அவள் எவ்வளவு பெரிய ஓட்டையும் சுமப்பாள்....இப்போதும் கூட அப்படி அமையாத போதும் கூட பல பெண்கள் சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள்....

    திருமணத்தில் நுகத்தடி போல ஒன்று சொல்லப்படும்...இரு மாடுகளும் சேர்ந்து இழுத்தால்தான் வண்டி குடை சாயாமல் போகும்...அதே குடும்பத்திற்கும்...பொருந்தும் இல்லையா அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்களது கருத்துரைக்குப் பதிலாக தனிப்பதிவு ஒன்றையே எழுதலாம்...

      ஆமை ஓட்டைத் துறந்தால் உயிரற்றுப் போகும்...
      அதைப் போல பெண் வீட்டைத் துறந்தால் என்ன ஆகும்?...

      ஆமை - ஓடு.. பெண் - வீடு என்ற ஒப்பீடு தவறு என்பதே எனது கருத்து...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அது சரி அதாரூஊஊஊஊஊஊஊஊஊஉ எங்கட புலியூர் பூஸாந்தாவுக்கு போட்டியாக தேவகோட்டை திடுக்கிடாநந்தா?!!! ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் இருக்கா?!!!!! இதை இப்போதே எங்கள் புலியூர் பூஸாந்தாவுக்குச் சொல்லனுமே!! பஞ்சாயத்தைக் கூட்டனுன்னு சொல்லுவாரோ?!!!! இன்றைய அவர் அப்பாயின்ட்மென்டில் ஷெட்யூலில் இங்கு வருவதும் குறிக்கப்ட்டிருக்கானு தெரியலையே!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...
      புலியூர் பூசானந்தா இந்தப் பக்கமெல்லாம் வந்து நாட்கள் பலவாயிற்று...

      நீக்கு
    2. வந்திட்டேன் துரை அண்ணன் மீ வந்திட்டேன்ன். ஸ்ரீராம் சொன்னார் நீங்க தேடியிருந்ததாக.. நான் பிஸி எண்டெல்லாம் பொய் சொல்ல மாட்டேன், உண்மையில் உங்களில் எனக்கு சின்னக்கோபம்:).. நீங்க செலக்ட் பண்ணிச் சிலரின் பதிவுகளுக்கு மட்டும் போறீங்க, என்பக்கமெல்லாம் வராமல் விட்டு விடுறீங்க.. நான் என்ன அடிக்கடியா போஸ்ட் போடுகிறேன் அப்போ அதுக்கும் வராட்டில் மீக்குக் கவலையாக இருக்காதோ?:), நீங்கள் எங்குமே போகவில்லை எனில் பிரச்சனை இல்லை.. கெள அண்ணனைப்போல:))..

      சரி விடுங்கோ.. என்னவாயினும் நீங்கள் அன்பாக தேடுவதால், இனி நான்
      முடியும்போதெல்லாம் வருவேன்ன்...

      நீக்கு
    3. ஓ கீதா, இங்குதான் “திடுக்கிடானந்தா” திடுக்கிட வைக்கிறாரோ ஹா ஹா ஹா.. அதனாலதான் தன் வயதில ரெண்டைத்தூக்கி டக்கென அபிநந்தனுக்குக் குடுக்கிறாராம் கர்ர்ர்ர்:))

      .. நீங்க என்பக்கம் சொன்னதும் எங்கேயாக இருக்குமென யோசித்தேன், இப்பக்கம் வராததால் எதுவும் தெரிய நியாயமில்லை:))

      நீக்கு
    4. அன்பின் அதிரா...

      உங்கள் தளத்துக்குள் நுழையும்போது இண்ட்லி.காம் என்றொரு திரை தடுக்கிறது....
      அந்தத் திரையை மூடினால் அரு எல்லாத் திரைகளையும் மூடி விட்டுச் செல்கிறது....

      நேற்று கூட அப்படித்தான்....

      இதைச் சென்ற வார பதிவு ஒன்றில் சொல்லியிருக்கிறேன்..

      நீங்கள் அதைக் கவனிக்கவில்லை.

      மற்றபடி உங்களது தளத்துக்கு வரக்கூடாது என்றெல்லாம் விரதம் ஏதும் இல்லை...

      வாழ்க நலம்...

      நீக்கு
  10. பேசும் சித்திரங்கள் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்

    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எப்போதும்போல் சிறப்பு

    'மடங்கொண்ட மங்கை மனம்' - 'மடல் கண்டு நாணுகிறதோ'?

    இல்லாள்-இல்லத்தை ஆளவந்தவள். இல்லான் - ஆபீஸ் வேலை சாக்கில் வீட்டில் இல்லாமல், வீட்டுப் பிரச்சனைகளில் உதவி செய்யாமல் நழுவுபவனோ?

    'எல்லாம் சந்தோஷம்' - இந்தப் படம்தான் இன்று வெளியிட்ட படங்களிலேயே மிகச் சிறப்பானது. ஓவியருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த..

      அந்த எல்லாம் சந்தோஷம் படத்தின் சித்திரம் தான்
      நமது தளத்தில் பல பதிவுகளில் உலா வருகின்ற அக்கா எனும் தமிழ்ச்செல்வி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. எல்லாப் படங்களும் அருமை!என்றாலும் மடம் கொண்ட மங்கை மனம், அந்தப் பாட்டி, தாத்தா, எல்லாம் சந்தோஷம் என்னும் பெண் மனதை மிகவும் கவர்ந்தனர்.உங்கள் இணையப் பிரச்னை விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      இங்குள்ள இணைய சேவை அந்த அளவே...
      எனினும் தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி..

      நீக்கு
  14. முதல் படம், சூப்பரோ சூப்பர்... மற்றும் அனைத்து மகளிர் பெயிண்டிங்களும் அருமை.

    இல்லாள் என்பதும்.. இல்லாதவள் எனவும் பொருள்படாதோ? மனையாள் என்பதுதான் அதிகம் பொருந்துமென யோசிக்கிறேன்.. காந்தித்தாத்தா சூப்பர், மனதை வருடுகிறது.

    மகளிர் தினத்துக்கு அருமையான போஸ்ட்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      இல்லாள் எனில் இல்லத்துக்குரியவள் என்று தான் அர்த்தம்....

      இது வள்ளுவப் பெருந்தகையும் ஔவையாரும் சொல்லிச் சென்றது....

      மனையாள் என்ற சொல்லும் அப்படியே.. எதிர்ச் சொல் இல்லாதது...

      தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. இன்றுதான் காண முடிந்தது. மிக மிக அருமையான படங்கள். அந்த நாணத்தோடு கடிதம் வாசிக்கும் பெண் எல்லார் வாழ்க்கையிலும் ஒரு பகுதி.
    எத்தனை அருமை. யாரும் இல்லாத அறைக்குள், ரேடியோவுடன், கதைப் புத்தகம், ஸ்வெட்டர் பின்னும் கைகளுடன்,வயிற்றில் செல்வன் உதைக்கக் கணவன் அனுப்பிய சித்திரங்களைக் கண்டு களித்த நாட்கள் நினைவுக்கு வந்தன. ஆனந்த விகடன் பாட்டியும் தாத்தாவும் படு ஜோர்.
    மாருதி ஐயாவின் படங்கள் மேன்மை.
    பெண்மை என்றும் உயர்ந்தோங்கி இல்லறம் காக்கட்டும்.
    நன்றி துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கடிதம் வாசிக்கும் பெண்ணின் சித்திரம் காலப்பெட்டகம் எனில் மிகையாகாது..

      எல்லார் மனதிலும் நினைவலைகளை எழுப்பி விடும்...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  16. பெண் குழந்தைக்க ஒரு அழகான தமிழ் பெயர் சொல்லுங்கள் அய்யா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..