செவ்வாய், ஜூன் 03, 2025

உறவும் முறையும்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 20
செவ்வாய்க்கிழமை


எங்கள் தளத்தில் வெளியான கை வண்ணங்களில் இதுவும் ஒன்று..

உறவும் முறையும்
***
" ஏளா.. கலியாணி... எங்கே அவன்?.. ஆளக் காங்கலை!.. " 

தழைந்திருந்த பட்டுப் பாவாடையை சற்றே தூக்கிச் செருகிக் கொண்டாள் கல்யாணி.. பொன்னிறப் பாதங்களில் வெள்ளிக் கொலுசுகள் மினுமினுத்தன.. 

இதென்ன இது... இப்படியும் அழகா!..

சுற்றியிருந்த இளந்தாரிப் பெண்களுக்கு ஆச்சர்யம்...

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நின்ற கல்யாணியும் - 
" என்னளா.. தண்டட்டி!.. " - என்றாள்..

அவளது கன்னங்களில் நாணம் குழியிட்டிருந்தது..

" இப்படியே அவனையும் இடுப்புல செருகி வைச்சுக்க.. இல்லேன்னா  கோட்டய விட்டுட்டு எங்கிட்டாவது தாண்டிக் குதிச்சிடப் போறான் கோட்டச்சாமி!.. "

அப்பத்தாளுக்கும் பேத்திக்கும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகி விட்டது..

பெண்களிடம் சிரிப்பு அலைகள்... 

" அவரு ஒன்னும் கோட்டச்சாமி இல்லே.. "

" பின்னே என்னவாம்... "

" கோபி.. கோபி குருசரண்!.. "

" என்னது!.. கோப்பிக் கரணமா?.. நல்ல பேரா வைங்களேன்..டி!... பேச்சிமுத்து.. முனியாண்டி.. இசக்கியப்பன்.. இந்த மாதிரி.. "

" இனிமே தான் அவுங்களுக்குப் பேரு வைக்கணுமாக்கும்... "

அப்பத்தாவின் பேச்சு கல்யாணியின் நெஞ்சுக்குள்  கருப்பட்டிச்  சில்லு போல
இனித்தது..

" ஓ... அதனால தான் நேத்து!.. "

- அப்பத்தா மர்மப் புன்னகையுடன்
ஆரம்பித்ததும் கல்யாணி
ஓடி வந்து  அப்பத்தாவின் மீது சாய்ந்து கொண்டாள்..

" இதயெல்லாமா வெட்ட வெளிச்சமாக்குறது!..
பேத்திக்கு ஏதாவது நல்ல யோசனயா  சொல்லாம இப்படியா குடைச்சல் கொடுக்குறது?..  "

கல்யாணியின் விழிகள் கெஞ்சின..

அப்பத்தா சிரித்தார்கள்.. கண்களுக்குள் பாசமலராய்
மகன் வழிப் பேத்தி.. 

தாத்தாவோட பெட்டிக் கடை மகன் காலத்துல மளிகைக் கடையானது.. பேரன் காலத்துல டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்..
அப்பத்தா பாஷையில பெரிய பலசரக்குக் கடை.. நாலு லாரி வேற  அப்பத்தா பேர்ல ஓடுது..

உழைப்பு.. நேர்மை இதைத் தவிர வேறு எதுவும் மகன் காசிலிங்கத்திற்குத் தெரியாது..

உழைப்பே உயிர் மூச்சு.. இப்போ ஊர் முழுக்கப் பேச்சு.. 

நேர்மையான வணிகத்தினால் மகன் பெரியதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்திருக்கின்றான்... 
 
அந்தப் பக்கம் மெட்ராஸ்..  இந்தப் பக்கம் மதுரை, சிவகாசி விருதுநகர் .. திருநவேலி.. நாகர்கோயில்.. என்று  எல்லா  சொந்தமும்
வந்திருக்கின்றார்கள்..

கிளிக் கூட்டம் மாதிரி எல்லாரும் கூடி இருக்கிறது
கண்ணுக்கு எத்தனை அழகு..

வீட்டுக்கு வீடு ஒரு பையன்..  இல்லே.. ன்னா ஒரு பொண்ணு.. ஏதோ ஒரு சில குடும்பத்தில மட்டும் ரெண்டு புள்ளைங்க.. அதுவும்
அச்சடிச்ச மாதிரி ரெண்டும் பசங்க.. இல்லேன்னா ரெண்டும் பொண்ணு..ங்க..

அதனால், இளவட்டங்களுக்கு ஒன்றும் புரியலை.. யாருக்கு யார் என்ன உறவு என்று!.. 

பதினைஞ்சு இருபது வருசம் ஒண்ணு கூடாம கிடந்த உறவு முறைகளின் நெஞ்சுக்குள் பொங்கி வருகின்ற ஏக்கம் கண்களில் நன்றாகவே தெரிந்தது..

" எனக்கு அண்ணனே இல்லை.. "

" எனக்கு  யார் அக்கா.. யார் தங்கச்சி.. ன்னே தெரியாது!?. "

இப்படியான எண்ணங்கள்
ஒவ்வொருவரது மனதிலும்  ஓடிக் கொண்டிருந்தன..

அந்த காலச் சூழ்நிலையில்
கூட்டுக் குடும்பங்களில் கைக்கு காசு பணம் முடை. என்று இருந்தாலும் - வீட்டு வாசல், வெளித் திண்ணை, உள் கூடம், சமையல் கட்டு, கொல்லைப் புறம் என்று எல்லா மூலைகளிலும்  நாத்தனாரும் கொழுந்தனும் அத்தாச்சியும் அத்தானும்
மச்சானும் மச்சினச்சியும்
புழங்கிக் கிடந்தார்கள்..

ஒருவரும் இல்லாப் பொழுதுகளில் ஓரமாக ஒதுங்கிக் கலந்தார்கள்.. 

பந்தியில் பசித்தால் மறு சோறு கேட்கலாம்.. அந்தியில் பசித்து முந்தியில் புசிக்கும் போது மறு சோறு கேட்கவா முடியும்.. யாரும் வந்து விடுவார்களோ என்று அச்சம் மேலிட்டு மனசு தவிக்கும்.. இப்போதைக்கு இது.. என்று விழிகள் பேசிக் கொண்டாலும்  
விடியாப் பொழுதுகளாக இரவுகள் வாய்ப்பது அரிதிலும் அரிது.. 

ஆனாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று நான்கு பிள்ளைகள்..

கூட்டுக் குடும்பத்துக்குள்
ஒருத்தருக்கு என்ன பிடிக்கும்..  என்ன பிடிக்காது.. என்ற அத்தனையும் மற்றவர்களுக்கு  அத்துப்படி.. இப்போ இந்தத் தலைமுறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன உறவு என்றே தெரியவில்லை..

இனிமேல் -
யாரைக் கூப்பிட்டு  பந்தல் கால் நட்டு வாழைமரம் கட்டி பாக்கு வெற்றிலை கொடுக்கச் சொல்வது?..

இனிமேல் -
யாரைக் கூப்பிட்டு பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து குங்குமம் சூட்டச் சொல்வது?..

இனிமேல் -
யாரைக் கூப்பிட்டு தண்ணீர் வைத்து தலை வாழை இட்டு இனிப்புடன் பந்தி பரிமாறச் சொல்வது?..

பங்காளி என்றால் யார் பெரியப்பா?.. யார் சித்தப்பா?.. யாருக்கு யார் மாலை போடுவது?..

தாயாதி எங்கே என்றால் யார் மாமன்?.. யார் மைத்துனன்?..   யாருக்கு யார் தாம்பூலம் வைப்பது?..

ஒன்றும் தெரியாமல் ஒன்றும் புரியாமல் ஒரு தலைமுறை உருவாகி விட்டது.. 

குற்றம் யாருடையது?.. யாருக்கும் தெரியவில்லை..

மூன்று தலைமுறைக்கு முன்னால் முளைத்து எழுந்த குருத்துகளுக்கு உள்ளூரில் அரிச்சுவடி..
மூத்த தலைமுறை பழுத்ததும் 
குஞ்சு குளுவான்கள் அடுத்த ஊருக்குப் போய் படித்தார்கள்.. உள்ளூரில் அப்பனும் பாட்டனும் 
அவர்கள் பார்த்த வேலையையே பார்த்தார்கள்..
நிம்மதியாய் இருந்தார்கள்..

இரண்டாந் தலைமுறையில்
ஊருக்குள்ளேயே இங்கிலீசையும் படித்தார்கள்..
பட்டணத்தில் உத்தியோகம்  என்று பெட்டியைக் கட்டிக் கொண்டு போனார்கள்.. 
வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ வந்தது.. ஏதோ போனது..

மூன்றாந் தலைமுறையில் இங்கிலீசை மட்டுமே படித்தார்கள்.. ஏரோப்பிளேன்
ஏறினார்கள்.. எங்கெங்கேயோ போனார்கள்..போய்க் கொண்டும் இருக்கின்றார்கள்..
எப்போது வருவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.. நல்லதும் தெரியாது. கெட்டதும் புரியாது..

அப்படி ஏதும் இல்லாமல்
பருப்பு மூட்டைகளை கணக்கு பார்த்துக் கொண்டு கையில் பேரேட்டை எடுத்தவர்கள் ஊருக்குள் காலை ஊன்றிக் கொண்டார்கள்..

சட்டென பரபரப்பு எல்லாரிடத்தும்..

" ம்ம்... சாப்பிட வாங்க!... வாங்க.. பெரியம்மா... வாங்க.. அத்தை... ஏலா.. முத்து புள்ளைங்கள அழச்சுக்கிட்டு வா.. "

பட்டும் படாமலும் பேசிக் கொண்டிருந்த சொந்தங்கள் புன்னகையுடன் நடந்து புது வீட்டை ஒட்டியிருந்த பந்தலுக்குள் நுழைந்தபோது மேஜையில் இலை இடப்பட்டிருந்தது.. ஒவ்வொரு இலைக்குப் பக்கத்திலும் தண்ணீர்  பாட்டில்..

கேட்டரிங் ஆட்கள் -  ஆண்களும் பெண்களுமாக சீருடையில் தயாராக நின்றிருக்க -  யாரும் எதிர்பாராத வண்ணம் - அப்பத்தா  அன்ன பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பரிமாற ஆரம்பித்தார்கள்..

இதைக் கண்டு திடுக்கிட்ட பெண்களில் சிலர் எழுந்து பருப்பு, நெய், சாம்பார் -  வாளிகளை கையில் எடுத்துக் கொண்டு அப்பத்தாவைத் தொடர்ந்தார்கள்..

" ஊரு இருக்கு.. உறவு இருக்கு.. ஒருத்தர் முகம் ஒருத்தர்  பார்த்துப் பரிமாற இத விட வேற பொழுது இருக்குமா.. ங்கறேன்!.. "

அப்பத்தாவின் குரல் தழுதழுத்தது..

" அத்தை... நீங்க இருங்க..
ரெண்டு இலைக்கு பரிமாறுனீங்களா. அது போதும்.. " - என்றவாறு கல்யாணியின் தாய் முன்வந்தாள்..

இளம் பெண் ஒருத்தி அப்பத்தாவின் கையிலிருந்த அன்ன பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள்..

வாசலில் நின்றிருந்த
மகனும் பேரனும் ஓடி வந்தார்கள்..

" ஆத்தா.. இதுக்குத்தான் ஆள் வந்திருக்காங்களே!.."

" வந்திருக்காங்க தான் காசி.. ஆனா உறவுக்காரங்க முகத்தை நாம தான பார்க்கணும்.. நாம தான பந்தி விசாரிக்கணும்!.. 
வேல செய்ய
வந்திருக்கிறவங்க காசுக்குத் தானே வந்திருக்காங்க... "

தாயின் வார்த்தைக்குக் கட்டுண்டார் காசிலிங்கம்..

" ஏளா!.. "

இலையின் முன் தோழிகளோடு அமர்ந்திருந்த கல்யாணி - " அப்பத்தா.. " என, எழுந்து ஓடி வந்தாள்..

அவளது கையைப் பிடித்துக் கொண்ட அப்பத்தா -
 " நாம ரெண்டு பேரும் பொறவு சாப்பிடலாம்!.. " - என்றபடி அங்கிருந்த பெரியவரை நோக்கிச் சென்றார்..

" இவுக விருதுநகர்.. 
எனக்கு கொழுந்தனார் .. உனக்கு சின்ன தாத்தா.. தெரியுந்தானே!.. "

"  தாத்தா அவுகளத் தான் எனக்குத் தெரியுமே!.. "
கல்யாணியின் கைகள் இயல்பாகக் குவிந்தன..

" இவுக  நமக்கு சம்பந்தி முறை.. சிவகாசி.. "

" இவுக தாத்தா வகையில பெரியப்பா.."

" இவுக விருதுநகர் வகையறா.. பெரிய அத்தாச்சி.."

அப்பத்தாவின் அறிமுகம் கண்டு பெரியவர்களின் நெஞ்சங்கள் உருகின.. கண்கள் கசிந்தன..

" ஏதேது.. ஆத்தா  சொல்லிக்கிட்டு வர்றதப் பார்த்தா அடுத்த விசேசம் சட்டு புட்டு.. ன்னு இருக்கும் போல இருக்கே!.. "

" ஆமா.. ஐயா.. ஆமா!.. எம் பேத்தி கலியாணியோட கலியாணந்தேன்!.. "

" மாப்பிள்ள கைவசம் இருக்காராக்கும்!.. "

" இல்லாமயா!.. "

" யாரு வீட்ல சம்பந்தம்?.. "

" அச்சாபீஸ் சங்கரலிங்கம் இருக்காக..ல்ல அவுக வீட்ல  தான்.. மாப்பிள்ளை பேரு கோபி.. கோபி குருசரண்!.. "

இந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத கல்யாணி அப்பத்தாவின் முதுகில் முகம் மறைத்துக் கொண்டாள் வெட்கத்துடன்..
***
வளம் செழித்து வாழ்க

சிவாய நம ஓம்
**

18 கருத்துகள்:

  1. ​// உழைப்பே உயிர் மூச்சு. இப்போ ஊர் முழுக்க பேச்சு ''

    சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. ரொம்ப காலம் ஒன்று கூடாமல் அவரவர்கள் இடங்களில் இயந்திர வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ஒன்று கூடியதும் உறவறிவதில் ஆர்வம், அன்பு.

    பதிலளிநீக்கு
  3. //அந்தியில் பசித்து முந்தியில் புசிக்கும் //

    அடடா... முன் பசியை மட்டும் தீர்க்கும் காலம், எல்லாம்.

    பதிலளிநீக்கு
  4. // ஏரோபிளேனில் ஏறினார்கள். எங்கெங்கேயோ போனார்கள். எப்போது வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது..//

    அடடா... நிதர்சனம். பதைக்கும் உறவும் பாசத்தில் எங்கேயோ நல்லா இருந்தா சரி என்று விட்டுவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையின் நிதர்சனம்

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  5. கோட்டைச்சாமி என்று கேலிபேசிய அப்பத்தா எவ்வளவு ஸ்பஷ்டமாக மாப்பிள்ளை பேரைச் சொல்கிறார்!  பேத்தியின் மேல் பாட்டி பாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் தான் கதைக்கு ஆகாது என்றாகி விட்டதே...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கதை அருமையாக உள்ளது. கதைப் படிக்கையில் உறவுகளை பார்த்த மகிழ்வு வருகிறது. கதையில் ஒவ்வொரு வார்த்தைகளின் தெளிவு பிரயோகம் கண்டு மனம் சிலிர்த்தேன்.

    இப்படி குடும்பங்களிடையே ஒன்றிப் போய், குடும்ப உறவுகளின் மேன்மையை படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாய் நாசூக்காய் எழுத தங்களால் மட்டுமே முடியும். அபாரமான எழுத்துக்கள். தங்களின் எழுத்து திறமைக்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  7. குடும்ப உறவுகளின் பாசத்தை எடுத்துச்சொல்லும் நல்லகதை.

    இப்பொழுது உறவுகளையே தெரியாத காலம்.

    உறவுகளுக்கு பரிமாறி விசாரித்து மகிழ்வதில் இருக்கும் ஆனந்தம் நாமும் படிக்கும்போது இக்குடும்பத்துடன் ஒன்றிவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  8. கோபி ....கோபி குருசரணைப் பார்த்த நினைவு இருக்கே!!!....நாரோயில்ல இருந்து நாங்க வந்துருந்தம்ல...வந்துட்டம்ல!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஆமா நல்லா நெனவு இருக்கே...

      தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ

      நீக்கு
  9. கதை நன்றாக இருக்கிறது. குடும்ப உறவுகள் வீட்டு விழாக்களில் உறவுகளை கண்டு யார் யார் என்ன உறவு என்று சொல்லி பேசுவது இயல்பு.
    திருமணங்கள் நிச்சயம் ஆகும் . அதை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..