நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 13, 2018

முத்தத்தின் சத்தம்

கத்தியில்லா யுத்தம் என்று
நித்தம் பாடுவார்..
சத்தமில்லா முத்தம் என்று
சத்தம் போடுவார்..

அடா.. என்ன உளறல்!..
எனில் -
ஐயிரண்டு திங்களிலே
அன்பின் முத்தம்...
அருமலராய் கைதனிலே
ஆசை முத்தம்...


தொட்டிலிலே தூமலராய்
உயிரின் முத்தம்...
மட்டில்லா மகிழ்வுடனே
மகவின் முத்தம்...

பூவிதழாள் புன்னகைக்கப்
புதிதாய் முத்தம்...
முத்தம்இது முத்தம் என
நெஞ்சுக்குள் சத்தம்...

தாயவளின் காலடியில்
அன்பின் முத்தம்..
தந்தையவன் கையினிலே
அறிவின் முத்தம்...
தங்கையவள் நெற்றியிலே
பண்பின் முத்தம்...
தோழனவன் தோளினிலே
நட்பின் முத்தம்...

முகில் வடித்த முத்தம்
அது வளமை ஆனது..
முந்தி வந்து முளைத்த
விதை செழுமை ஆனது..
அகில் அடர்த்த முத்தம்
அது பசுமை ஆனது...
மூங்கில் தந்த முத்தம்
முதல் வாழ்க்கை ஆனது..



கத்துங் கடல் எறிந்ததையும் 
முத்தம் என்றார்...
கரி அதன் கொம்புகளில்
முத்தம் கண்டார்...
செஞ்சாலிக் கதிர் எல்லாம்
முத்தம் என்றார்...
செந்நெறித் தமிழதுவும்
முத்தம் என்றார்...

சித்தன் அவன் சிவன் மகனை
முத்தன் என்றார்...
முத்துக் குமரா தரவேணும் நீ
முத்தம் என்றார்...

இளந் தமிழும் பாடியது
முத்தப் பருவம்...
இளைஞர் அவர் தேடுவதும்
பருவத்து முத்தம்...

கிழவருக்கும் 
முத்தம் எனில்
கொள்ளை 
இன்பம் தான்..

பிள்ளை வழிப் 
பிள்ளை எனில்
இன்பம்
கொள்ளை தான்!..

முத்தம் ஒன்று தந்ததால்
பருவம் வந்ததா...
பருவம் வந்து நின்றதால்
முத்தம் தந்ததா!..

கவியரசன்
மீண்டும் இங்கே
வரவேண்டும்..
கனித் தமிழில்
கருத்தொன்றைத்
தரவேண்டும்!..
.

கண்ணுக்குள் ஒரு முத்தம்
காதல் என்றது..
காதுக்குள் மறு முத்தம்
கவிதை என்றது..
கையினிலே ஒரு முத்தம்
கலைகள் என்றது..
உயிருக்குள் ஒரு முத்தம்
உலகம் ஆனது..

சேயிழையாள் முத்தம்
செவ்விதழாள் முத்தம்
மாறில்லாத முத்தம்..
நிகர்வேறில்லாத முத்தம்...

கடலேறிச் சென்றாலும்

காற்றேறி நின்றாலும்
கண்ணிமையில் நிற்கும்
கன்னி மயில் முத்தம்...

கனியிதழில் நித்தம்
கற்கண்டாய் முத்தம்
இனிக்காதோ சித்தம்
இனியெதற்குச் சத்தம்!..

இன்னும் பல முத்தம்

இயம்பிடவே சித்தம்!...
ஆனாலும் வலைத் தளத்தில்
எழுந்திடுமே சத்தம்!..


நேற்று,
எங்கள் பிளாக்.. தளத்தில் எழுந்த -
களேபரத்தால் விளைந்தது இந்தக் கவிதை...

மேலும்,

உன்னை
முத்தமிட்டால்
உப்பு
கரிக்கிறதே..

உன்

டூத்பேஸ்ட்டில்
நிச்சயம்
உப்பு இருக்கிறது...

என்ற, ஸ்ரீராம் அவர்களது 
கவிதையைத் தொடர்ந்து -

அந்த டூத்பேஸ்ட்டில்
அப்பனின் வியர்வையும்...

அதனால் தான்
அதில் உப்பின் சுவை...

- என்று எழுதியிருந்தேன்...

அந்த வரிகளைப் பாராட்டிய
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..

மேலே உள்ள காணொளி WhatsApp ல் வந்தது...

ரசித்து மகிழும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..


வாழ்க நலம்.. 
ஃஃஃ

34 கருத்துகள்:

  1. ஆஹா துரை அண்ணா இனிய காலை வணக்கம்

    இந்தச் சத்தம் அங்கு கேட்டிருச்சு அதான் இங்க ஓடி வந்தா ஆஹா ஆஹா வரிகள்...இதோ இன்னும் வரேன்..நேற்றைய எபியின் தொடர்ச்சி இங்கும்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. துரை அண்ணா சத்தமில்லாமல் கொடுக்கப்படும் முத்தங்கள் எல்லாம் வலைத்தளங்களில் தரிகிட தோம் தரிகிட தோம்னு சத்தமெழுப்பி பொழிகின்ற சத்தம் கேக்குதே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. குட்மார்னிங் ஸார்... இதோ படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. காணொளி மனதை நெகிழ்த்திவிட்டது அண்ணா. கண்ணில் நீர் நிறைந்துவிட்டது. அந்தத் தந்தையின் அணைப்பும் முத்தமும் எதற்கு ஈடாகும் சொல்லுங்கள்! ஆம் டூத்பேஸ்டில் உப்பின் கரிப்பு அந்த அன்பான தந்தையின் வியர்வைதான்....!! உங்கள் வரிகளுக்குப் பொருத்தமான காணொளியாகத் தெரிந்தது அண்ணா....

    கவிதையை ரொம்ப ரொம்ப ரசித்தேன்.....தாய் தந்தையின் முதல் முத்தம்...தொடரும் முத்தங்கள் அதற்கு ஈடு எதுவும் இல்லை....!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வார்த்தைகள்,
    வரிகள்
    அழகாய்,
    அதனதன் இடத்தில் வந்து விழுந்து மனதில் இடம் பிடிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  6. என்ன அருமையான கவிதை... நாங்கள் எல்லாம் வயசுக் கோளாறுக் கவிதைகள் எழுத, நாங்கள் எழுதுபவற்றையும் கவிதை என்று நாங்கள் நம்பியிருக்க, நீங்கள் எழுதி இருப்பதோ வாழ்க்கைக் கவிதைகள். அன்பின் கவிதைகள். உறவின் கவிதைகள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான வார்த்தைகள் ஸ்ரீராம். இதையும் டிட்டோ செய்கிறேன்

      கீதா

      நீக்கு
  7. கடலேறிச் சென்றாலும்

    காற்றேறிச் சென்றாலும்

    கண்ணிமையில் நிற்கும்

    கன்னிமயில் முத்தம் //

    ஆஹா வரிகள்.. நிகரில்லா முத்தத்திற்கான வரிகளும் அருமை அண்ணா...தமிழ் அன்னை உங்களை முத்தமிட்டு அணைக்கிறாள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எனக்கு கோபம்தான் வருகிறது...

    உங்கள் திறமைகளை குடத்துக்குள் வைத்திருப்பது போல இங்கேயே பூட்டி வைத்திருக்கிறீர்கள். ஏதாவது பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே...

    உங்கள் திறமைக்குத் தலை வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் யெஸ் ஸ்ரீராம் உங்கள் கருத்தை அப்படியே கன்னா பின்னானு டிட்டோ செய்கிறேன். அண்ணா குன்றின் மீதிட்ட விளக்குனு சொல்லலாமா ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  9. பிள்ளை வழிப் பிள்ளை என்றால்தான் கொள்ளை இன்பமா? பெண் வயிற்றுப பேத்தி என்றால் இன்னும் கொஞ்சம் இனிக்காதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிக்கும் தான் ஸ்ரீராம்......என்றாலும் பொதுவாகவே இந்தத் தாத்தா பாட்டிகளுக்குப் பிள்ளை வயிற்றுப் பேரன் பேத்தி என்றால் ஒசத்தியாகத்தான் இருக்கிறது. (துரை அண்ணா உங்களைத் தாத்தானு சொல்லை கேட்டேளா!!!! ஹா ஹா ஹா ஹா)

      கீதா

      நீக்கு
    2. ஒரு வேளை பெண் திருமணத்திற்குப் பின் வேறு வீட்டுப் பெண் ஆகிவிடுகிறாளே என்பதால் இருக்கலாம். என்றாலும் பல வீடுகளில் பிள்ளை வயிற்றுப் பேரன் பேத்திகள் அந்தத் தாத்தா பாட்டியிடம் ஒட்டிக் கொள்வதை விட தாயின் பெற்றோரிடம் அதிகம் என்பது அந்தத் தாயைப் பொறுத்து அமைகிறது. இந்தப் பிள்ளையைப் பெற்ற பெற்றோரும் ஒரு சில இடங்களில் அப்பாவிகளாய்த் தன் பேரன் பேத்திகள் தங்களிடம் தங்காதோ என்று விசனப்படுவதும் நடக்கிறதுதான்

      கீதா

      நீக்கு
    3. இருந்தாலும் இரண்டு வகை பேரன் / பேத்திகளை சமமாகப் பார்க்க வேண்டாமோ கீதா?!!

      நீக்கு
    4. யாரும் அப்படிப்பார்ப்பதில்லை ஶ்ரீராம், அதான் உண்மை! கசக்கும் உண்மை. பெரும்பாலான பெண்கள் பெண்வழிப் பேத்தி, பிள்ளைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அபூர்வமாகத் தான் பிள்ளை வழிப் பேரன், பேத்திகள், சொந்தப் பேத்தியைக் கேலி செய்யும் பாட்டிகளைக் கண்டிருக்கேன். பிள்ளை வழிப் பேத்தி என்பதால்! :)))))

      நீக்கு
    5. எங்க வீட்டிலே இரண்டு வழியும் உண்டு! என் அம்மா வழி, என் அப்பா வழி, அதே போல் குழந்தைகளுக்கும்!

      நீக்கு
  10. //முத்துக்குமரன் தரவேணும் நீ முத்தம் என்றார்// தமிழ்க்கடவுள் முத்தம் தந்தாள் தமிழே நமக்கு சித்திக்காதோ? அதுவும்தான் தித்திக்காதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தந்தாள் அல்ல,
      "தந்தால்..."

      நீக்கு
    2. அதே அதே...ஸ்ரீராம் நானும் இந்த வரிகளை ரசித்தேன்....

      கீதா

      நீக்கு
  11. கண்ணுக்குள் ஒரு முத்தம்
    காதல் என்றது
    காதுக்குள் மறு முத்தம்
    கவிதை என்றது
    கையினில் ஒரு முத்தம் கலைகள் என்றது
    உயிருக்குள் ஒரு முத்தம்
    உலகம் ஆனது.



    ஆஹா... புதிய முத்த சார(ல்)ம்..

    பதிலளிநீக்கு
  12. அன்பின் ஜி
    முத்தச்சாரலால் கவிதைமழை அருவியாய் ஓடி கடலில் முத்தமிட்டு கலந்த முத்தமாகிறது.

    தொடர்ந்து முத்தம் தாருங்கள் ஜி.
    பெறுவதற்கு வலையுலகம் காத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. நினைத்தால் உங்களால் எழுத்துல்சகில் சாதிக்க முடியும் இந்த முத்தக் கவிதைடை மிகவும்ரசித்தேன் எடுத்துக் காட்ட என்றால் எல்லா வரிகளையும் சொல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு
  14. துரை அண்ணாவை ஞானி ஆயிட்டார் என்று சொல்லும் ஞானியார் வந்து இதற்கு என்ன தத்துவ முத்துக்களை உதிர்க்கப் போகிறாரோ? முதலில் கண்டிப்பாக ஆ என்று வியப்படைவார்! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வேறு தளத்திற்கு வந்துவிட்டோமோ என்று நினைத்தேன். கவிதையிலும் நீங்கள் அசத்துவீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் பாடுபொருள் முத்தம் என்ற நிலையில் அனைவரையும் உங்கள் எழுத்துக்களால் கவர்ந்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. காணொளியை ரசித்தேன். நான் 10ம் வகுப்பு ஹாஸ்டலில் இருந்து படித்தேன் (நெல்லையில்). அப்பா அம்மா தொலைவில் இருந்தார்கள். (கோயமுத்தூர் அருகில்). 8-9 மாதங்கள் கழித்து இருவரும் என்னைப் பார்க்க வந்தார்கள். விஸிட்டர் அறையில் அம்மாவைப் பார்த்ததும் நான் அடக்க முடியாமல் அழுதேன். ஏன் அழுதேன் என்று எனக்கும் தெரியாது, அவர்களுக்கும் புரியாது. இதை எழுத்தில் கொண்டுவரமுடியாது. காணொளியில்தான் சாத்தியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராணுவ வீரர்கள் சிலர் தங்கள் குழந்தைகளை அவர்கள் பள்ளியிலோ அல்லது பார்ட்டியிலோ சந்திக்கும் தருணங்கள் அடங்கிய காணொளி, இதே போல ஒரு அம்மா தன் மகன் அவர்கள் தோழர்களுடன் உணவருந்தும் நேரம் எதிரில் வந்து அமர்ந்து முகமூடியைக் கழற்றும் காணொளி, நிறைய பார்த்திருக்கிறேன்.

      சில அழுகைகளுக்கும், கண்கலங்கல்களுக்கும் காரணம் சொல்ல முடியாது.

      நீக்கு
  17. அருமையான கவிதை.
    காணொளி மிக அருமை.
    தந்தையின் பாச மழையில் நனைந்த குழந்தைகளைப் பார்த்து கண்ணில் நீர் வந்து விட்டது.
    ஸ்ரீராம் பலரின் திறமைகளை வெளி கொண்டு வந்து விடுகிறார். (ஸ்ரீராமுக்கு நன்றி.)

    அவர் கவிதையின் தாக்கம் உங்களை அழகான கவிதை எழுத வைத்துவிட்டது.நீங்கள் பன்முக திறமை வாய்ந்தவர் என்பதை உறுதிபடுத்தும் கவிதை.

    பாலசுப்பிரமணியம் சார் சொன்னது போல அனைத்து வரிகளையும் சொல்லலாம்.

    வேலை பளு அதனால் சனிக்கிழமை தான் பதிவு என்று சொல்லி விட்டு வெள்ளிக் கிழமையே கவிதை எழுதி விட்டீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஸ்ரீராம் பலரின் திறமைகளை வெளிக் கொண்டு வந்து விடுகிறார்.//

      கோமதி அக்கா... இது அநியாயம்... அவர் அருமையாய் எழுதி இருக்கிறார். இதில் நான் என்ன செய்தேன்? எங்கு வருகிறேன்?!!!

      :)))

      நீக்கு
    2. உங்கள் கவிதையின் தாக்கம் தான் கவிதை எழுத விளைந்தேன் என்று சகோ சொல்லி இருக்கிறார் பாருங்கள்.
      உங்கள் கவிதைக்கு அவர் தந்த பின்னூட்டம் பலரால் பாராட்டபட்டதும் கவிதை எழுத தோன்றி அருமையான கவிதை படைத்தார்கள்.அது உண்மைதானே?

      நீக்கு
  18. காணொளி பாடல் யார் எழுதியது?
    வரிகள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. முத்தப் பாடல்களின் வரிகளை மேற்கோள் காட்ட அவற்றை வெட்டி ஒட்ட முடியவில்லை! :( என்றாலும் சித்தன் அவன் மகன் முத்தன் என்பதும் மிகவும் ரசிக்க வைத்தது. கவிதையின் எந்தப் பகுதி நன்றாக இருந்தது என்று கேட்டால் ஜிலேபியின் எந்தப் பக்கம் இனிப்பு எனக் கேட்பது போல் இருக்கும். மொத்தமும் அருமை! அழகான முத்தக் கவிதை! கோமதி அரசு சொல்லி இருப்பதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. இந்தக்காணொளி ஏற்கெனவே எனக்கு வாட்சப்பில் வந்தது. முகநூலிலும் பகிர்ந்திருந்தார்கள். கண்ணீரை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
  21. ஆஹா அங்கே விதைச்சது இங்கே முளையாக பிங்கிக் கவிதையாக வெளி வந்திருக்கே அருமை அருமை..

    பதிலளிநீக்கு
  22. ஆஹா... இங்கேயும் முத்தச் சப்தம்... உங்கள் கவிதையும் ரசித்தேன்.

    தொடரட்டும் கவிதைகள்... பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..