நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 25, 2015

மார்கழித் தென்றல் - 09

குறளமுதம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு..
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 09

திவ்ய தேசம் - ஸ்ரீ முஷ்ணம்
(அபிமானத் திருத்தலம்)



எம்பெருமான் -  ஸ்ரீ பூவராகமூர்த்தி
தாயார் - ஸ்ரீஅம்புஜவல்லி
உற்சவர் - ஸ்ரீயக்ஞவராகர்


ஸ்ரீ யக்ஞவராகப் பெருமான்
ஸ்ரீ பாவன விமானம்
நின்ற திருக்கோலம்
தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்
மேற்கு நோக்கிய திருக்கோயில்..


பெருமாள் சுயம்புவாகத் தோன்றியருளிய திருத்தலம்..
மாதந்தோறும் விசேஷங்கள் நிகழ்கின்றன..



மாசி மாத பெருந்திருவிழா தீர்த்தவாரியின் போது,
தமக்கு அன்பராக இருந்த நவாப்
ஒருவரின் பொருட்டு - கிள்ளை எனும் கிராமத்திற்கு 
 ஸ்ரீயக்ஞவராகன் - மேளதாளத்துடன் எழுந்தருளி,
இஸ்லாமியப் பெருமக்களின் சீர்வரிசையினை
ஏற்றருள்கின்றார்..  
* * *

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருஅண்ணாமலை



இறைவன் - ஸ்ரீ அருணாசலேஸ்வரர் 
அம்பிகை -  ஸ்ரீ உண்ணாமுலை நாயகி  

தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழ மரம்


-: திருப்பதிகம் அருளியோர் :-
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகப்பெருமான்..
***
சோதிப் பிழம்பு எனப் பெருமான்
தோன்றியருளிய திருத்தலம்..

பஞ்ச பூதங்களுள் அக்னிக்கு உரிய திருத்தலம்..

திருக்கார்த்திகைத் திருவிழா பெருஞ்சிறப்பு..

அன்றிலிருந்து இன்றுவரை
எண்ணற்ற சித்தர்கள்
வாழும் திருத்தலம்.

மானுடம் அறிய இயலாதபடிக்கு
குகைகளையும் சுனைகளையும்
தன்னகத்தே கொண்டு இலங்குவது அண்ணாமலை.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என
வாழ்ந்த அருணகிரி - முருகப்பெருமானால்
தடுத்தாட்கொள்ளப்பட்ட திருத்தலம்..

தமிழ் கூறும் நல்லுலகிற்கு
ஞானக்கருவூலமாய்
திருப்புகழ் தோன்றியது இங்கேதான்..  
* * *


ஸ்ரீ ஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணித் திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினைவழுவா வண்ணம் அறுமே!..
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்



திருப்பள்ளி எழுச்சி
ஒன்பதாம் திருப்பாடல்

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டார்
விழுப்பொருளே உனதொழுப்படி யோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணத்தே நின்று கனிதரு தேனே
கடல் அமுதே கரும்பே விரும்படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
17 - 18

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாகக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!..

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!...
***

அன்பை முன் நடத்துதற்கு
அவனியில் தோன்றிய
அருட்சுடர் ஸ்ரீ இயேசு கிறிஸ்து
அவதரித்த திருநாள்..







இயேசு பெருமான் பொன்னடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. மார்கழிக் காலையில் மகிழ்வாய் ஒரு பதிவு...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  2. மத நல்லிணக்கத்திற்கு பூவராக மூர்த்தியே உதாரணமாகத் திகழ்கிறார் .
    ஸ்ரீமுஷ்ணம் பற்றியப் பதிவு என்னை சிறு வயது நினைவுகளுக்கு கடத்தி சென்று விட்டது. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருப்பாவை திருவெம்பாவையுடன் கோவில்கள் பற்றியும் கூறுவதை ரசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான பதிவு.ஸ்ரீமுட்டம் சிறுவயதில் சென்றுள்ளேன். சமூகநல்லிணக்கம் பதிவில் ஜொலிக்கிறது. அந்த படங்கள் உண்மையிலே மனதை கவர்கின்றன. எனக்கு அனுப்ப முடியுமா.....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றிகள், புகைப்படங்கள் அனுப்பியதற்கு நன்றிகள்.

      நீக்கு
    2. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..