நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 07, 2014

அன்னாபிஷேகம்

அனைத்து சிவாலயங்களிலும் நேற்று (6/11 - வியாழக்கிழமை) வெகு சிறப்பாக அன்னாபிஷேகம் நிகழ்ந்துள்ளது.


நேற்று ஐப்பசி மாதத்தின் முழுநிலவு..

சந்திரன் மனோகாரகன்.

இவனுடைய இயக்கத்தினாலேயே - நமது மனம் சம நிலையில் இருப்பதும் சஞ்சலத்திற்கு ஆட்பட்டு அங்குமிங்கும் அலைவதும்!..

நிறைமதியான பூர்ண சந்திர கலைகளின் அழகில் மயங்காதார் யார்!..

முழுமதியின் கதிர்களில் மனம் அமைதியடைகின்றது.

இத்தகைய சந்திரன் - ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்துடன் இணைந்து பூர்ண கலைகளுடன் பொலிந்திருக்கின்றான்!..

இருபத்தேழு நட்சத்திரங்களுள் முதலாவதானது அஸ்வினி நட்சத்திரம்.

தேவ மருத்துவர்களாகிய அஸ்வினி தேவர்களுடன் தொடர்புடையது.

மருத்துவ குணங்களை உடைய அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது.

கேது ஞானகாரகன். சாயா கிரகங்கள் என - ராகுவுடன் இவனும் ஒன்றானவன்.

ஞான மூர்த்தியாகிய விநாயகப்பெருமானின் அருளாணைக்குக் கட்டுப்பட்டு இயங்குபவன் கேது.

ஐப்பசி மாத நிறை நிலவு நாளின் அடிப்படை இது!..

இந்த நன்னாளில் மங்கல ஸ்வரூபமாகிய சிவலிங்கத் திருமேனியில் அன்னாபிஷேகம் செய்வது ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும் பெற்று உய்யவடைவதன் பொருட்டு!..

யாரும் பசித்திருக்கக் கூடாது!.. என்ற எண்ணமே உண்மையான ஆன்மீகம்!..

அதனால் தான் அபிராமவல்லியை -

சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்டம் முதலான சீவ கோடிகள் புசிக்கும் புசிப்பினைக் குறையாமலே கொடுப்பவள்!..

- என்று போற்றுகின்றார் அபிராமி பட்டர்.

உணவு இன்றி உயிர்கள் இல்லை. உயிர்கள் ஏதும் இல்லாமல் வறிதே இவ்வுலகம் சுழன்று யாதொரு பயனும் இல்லை!..

ஆகையால் தான், பூவுலகம் - மண் - பயனுற வேண்டி, ஏர் கலப்பையைத் தொடர்ந்து சுற்றிச் சுழல்கின்றது.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்!..

- என்று தெய்வத் திருக்குறள் குறிப்பதும் இதைத்தானே!..


ஏர்க்காலும் கலப்பையும் நமக்களிக்கும் தனங்களுள் - தான்யங்களுள் தலையாயது நெல்!..

நெல்லின் உன்னதம் அரிசி என வெளிப்படுகின்றது.

அரிசியை - சமஸ்கிருதம் அன்னம் என குறிக்கும்.

சந்தோஷத்தில் சுகத்தில் முதலாவதாகும் அரிசி -
துக்கத்தில் வேதனையில் இறுதியாகின்றது.

மண்ணில் விளைந்த அரிசி - நீருடனும் காற்றுடனும் அக்னியுடனும் சேர்ந்து பக்குவம் அடையும் போது சோறு என்றாகின்றது.

இந்த சோற்றினை - வெளியினில் ஐந்தாய் விளைந்தாய் போற்றி!.. - என மாணிக்க வாசகப் பெருமான் போற்றும் இறைவனுக்கு நிவேதனம் செய்வதே அன்னாபிஷேகம்!..

ஒரு காலத்தில் புவி எங்கும் வளமைக்குப் பதிலாக வறுமையே விளைந்தது. பெரும் பஞ்சம் வந்துற்றது. 

துயருற்ற உயிர்க்குலத்தின் வேதனையைக் காணச் சகிக்காத நல்ல உள்ளம் ஒன்று இறைவனிடம் கையேந்தி நின்றது. 

மனித குலத்தின் மாணிக்கம் என நின்ற உத்தமனுக்காக மறைபொருளும் வெளிப்பட்டு உலவாக் கலம் எனும் அமுத சுரபியினை  அருளி மகிழ்ந்தது.

அமுத சுரபி என்பதே அட்சய பாத்திரம்.

இந்த அருஞ்செயல் நிகழ்ந்த திருத்தலம் - திருச்சோற்றுத்துறை.

தஞ்சை திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.

காவிரியின் தென்கரைத் திருத்தலம். சப்த ஸ்தான திருத்தலங்களுள் ஒன்று!..

அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம்.

இறைவன் - சோற்றுத்துறை நாதர்
அம்பிகை - அன்னபூரணி. 
தல விருட்சம் - பன்னீர் மரம்.
தீர்த்தம் - காவிரி.


எதனாலும் திருப்தியடையாத மனம் - வேண்டும்.. வேண்டும்.. - எனக் கேட்டுப் பெறுவதில் மகிழ்வடைகின்றது.

ஆனால், ஒரு கட்டத்தில் - 

இன்னும் கொஞ்சம்!.. என்று கொடுக்கும் போது, கண்ணீர் மல்க கதறுகின்றது - போதும்.. போதும்.. வேண்டாம்!.. - என்று!..

அது எப்போது!?..

உண்ணும் போது!..

வேண்டும் என்று என்று கேட்ட அதே வாயால் - மனம் நிறைந்து - போதும் என்று சொல்வது சாப்பிடும் போது!..

மன நிறைவைத் தருவது - அன்னம் எனும் சோறு!..

இந்த சோறு தான் - சிவம்!..

அதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றனர் பெரியோர்.

நாளும் நாம் உண்ணும் சோற்றின் வடிவம் - சிவலிங்கம்!..

அன்னத்தால் ஐயனை அபிஷேகிப்பதே - அன்னாபிஷேகம்!..

சுத்த அன்னம் எனப்படும் வெள்ளைச் சோறு - ஸ்படிகத்திற்கு சமம்!..

சிதம்பரம் என்று வழங்கப்படும் தில்லையம்பதியில் - ஸ்படிக லிங்கத்திற்கு ஒவ்வொரு  நாளும் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகின்றது.

ஏனைய சிவாலயங்களில் அன்னாபிஷேகம் ஐப்பசி நிறை நிலா நாளாகிய வியாழன்று நடைபெற்றவேளையில்,







திருஅண்ணாமலையில் -

ஸ்ரீஉண்ணாமுலையாள் உடனாகிய ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில்,

அஸ்வினி நட்சத்திரம் நிறைவாக இலங்கிய புதன் கிழமையன்று அதிகாலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

மாலை ஆறு மணியளவில் மூலஸ்தானத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நிகழ்ந்தது.

ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர்
அச்சமயம் - திருச்சுற்றில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் சிறப்புடன் நடைபெற்றது.

(ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருமேனியில் செய்யப்பட்ட அன்னாபிஷேக படம் பதிவில் இடம் பெற்றுள்ளது.)

தஞ்சையிலுள்ள சிவாலயங்களிலும் ஸ்ரீகாளியம்மன் திருக்கோயில்களிலும் அன்னாபிஷேகமும் பௌர்ணமி பூஜைகளும் சித்தர் வழி ஜோதி வழிபாடுகளும் சிறப்புடன் நிகழ்ந்தன.

சதயத் திருநாள் அலங்காரம்

சதயத் திருநாள் கோலாகலம்

எனினும்,

ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயிலிலும் ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலிலும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலிலும் தான் தரிசனம் செய்ய முடிந்தது.

பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மன் சுத்த அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு ஸ்படிகம் எனத் திகழ்ந்தாள்.

அன்னாபிஷேக திருக்கோலம்
பிரம்மாண்டமான பெருவுடையார் திருமேனி அன்னாபிஷேகம் கொண்டு பலவித காய்களாலும் கனிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இலங்கியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவதரிசனம் செய்து இன்புற்றனர்.

இரவு ஒன்பது மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கீழ்வானில் பூர்ண சந்திரன் திகழ்ந்திருக்கும் வேளையில் -
நந்தி மண்டபத்தின் அருகில் அருள்மிகு ஆடவல்லானின் சந்நிதிக்கு எதிரில் - நானும் என் மனைவியும் பிரசாதம் உண்டபோது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த மகிழ்ச்சிக்காகத்தான் - மனிதப் பிறவியும் வேண்டுவது இம்மாநிலத்தே!..

சிவலிங்கத்தின் மீது சாற்றப்படும் ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும் சிவாம்சம் பெறுகின்றது என்பது ஐதீகம். 

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர்  - அபிஷேகம் செய்யப்பட்ட சோற்றினைப் பிரசாதமாக உட்கொண்டால் - குழந்தை பாக்கியம் நிச்சயம் என்கின்றனர்.

சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்ட அன்னத்தில்- ஆவுடையின் மீதுள்ள அன்னம் மட்டுமே தயிர் கலந்து  பிரசாதமாக வழங்கப்படுகின்றது.


ஸ்ரீ லிங்கத்தின் மீதுள்ள அன்னம் - சகல  ஜீவராசிகளுக்குமாக, திருக்குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றது. 

இறையருளைப் பெறுதற்குரிய வழிகளுள் எளிதானது அன்னதானம்!..

மண்ணில் விளைந்த அரிசியும் பசுங்காய்கறிகளையும் கொண்டு - அன்னம் எனும் அமுதத்தினையும் பலவித பதார்த்தங்களையும் அக்கறையுடன் ஆக்கி - பரிவுடன் படைத்து பல்லுயிர்களையும் பாலிப்பதே - அன்னாபிஷேகம்!..

வரும் நட்களில் - 
ஆலயந்தோறும் அன்னாபிஷேகம் மற்றும் அன்னதானம் சிறப்புற நிகழ நம்மால் ஆன உதவிகளைச் செய்து நலம் பெற விழைவோமாக!..

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற 
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே!..(5/1)
திருநாவுக்கரசர்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

  1. அன்னம் பாலிக்கும்போது கிடைக்கும் பேரின்பத்திற்கு அளவேயில்லை. தாங்கள் அதனை உரிய விளக்கங்களுடனும் புகைப்படங்கங்களுடனும் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. இரு முறை சப்தஸ்தான விழாக்களில் கலந்துகொண்டு அனைத்துக்கோயில்களுக்கும் நேரில் சென்றுள்ளேன். திருச்சோற்றுத்துறையில் தாங்கள் கூறியவாறு அன்னம் பெற்றேன். தங்கள் பதிவு அந்த நாள்களை நினைவுபடுத்தியது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      //அன்னம் பாலிக்கும் போது கிடைக்கும் பேரின்பத்திற்கு அளவேயில்லை//

      தங்கள் கருத்து இனிது!..

      அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஆலயந்தோறும் அன்னாபிசேகம் செய்வோம் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. இங்கு கர்நாடகத்தில் அநேகமாக எல்லாப் பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. ஆயிரக் கணக்கானோர் பசியாறுகின்றனர். ஆனால் சில கோவில்களில் அன்னதானம் செய்வதிலும் ஏற்ற தாழ்வு பின் பற்றப் படுகிறது என்பதே வருத்தத்துக்குரிய விஷயம். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஆலயங்களில் தினமும் நடைபெறும் அன்னதான நிகழ்வில் ஏற்ற தாழ்வு பின்பற்றப்படுவது வேதனைக்குரியது. மனிதநேயம் மலர வேண்டும்..

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  4. அருமையான படங்களுடன் அறுசுவை பதிவு வாழ்த்துக்கள் நண்பரே,,,
    எமது மதுரைப்பதிவை காணுக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான பல தகவல்களை அறிந்து கொண்டேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      வெகு நாட்களுக்குப் பின் தங்களது வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு
  6. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வணக்கம் ஐயா!

    அன்னாபிஷேகமும் அதன் மகிமைகளும் அறிந்தேன்!
    மிக அழகான படங்கள்! அருமை!

    வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வணக்கம் அய்யா
    முதல்முறை தங்கள் தடம் அறிந்தேன் தொடர்ந்திடுவேன் என்றும் இனியவனாய் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தினேஷ்குமார்..
      தங்களுக்கு நல்வரவு..
      த்ங்களுடைய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அன்னாபிஷேகம் குறித்து படங்களுடன் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்... இப்போதுதான் ராஜேஸ்வரி அம்மா தளத்தில் அன்னாபிஷேகம் குறித்துப் படித்தேன்... இப்போ இங்கு... இரண்டுக்கும் தலைப்பில் தொடர்பிருந்தாலும் இருவருமே தங்கள் எழுத்தில் கலக்கியிருக்கிறீர்கள் ஐயா....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..

      மிகக் கடுமையான உழைப்பு - ராஜேஸ்வரி அம்மா அவர்களுடையது.
      அன்புக்குரிய சக பதிவரைப் பற்றி குறிப்பது மிகுந்த சந்தோஷம்..

      தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..